ஜான் நியுமென் பொகிமியா நாட்டில் 1811 மார்ச் 28இல் பிறந்தார். இவரது தந்தை ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். தாய் செக் நாட்டைச் சார்ந்தவர். ஜான் நியுமென் இளம் வ பிலிப் மற்றும் ஆக்னஸ் நியுமனுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளுள் இவர் மூன்றாமவராவார். யோவான் நெப்பமுசீன் என்னும் புனிதரின் பெயரைத் தமது மகனுக்கு இவரின் பெற்றோர் சூட்டினார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது மாதிரி, சிறுவனான யோவான் தாயுடன் தவறாமல் கோவிலுக்குச் செல்லும் வழக்கத்தையும் அனைத்துச் செபங்களையும் பொருளுள்ள முறையில் செபிக்கும் பண்பையும் பெற்றிருந்தார். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவருக்கு முதல் நற்கருணையும், உறுதிப்பூசுதலும் வழங்கப்பட்டது. பீடச்சிறுவனாக இருந்தபோது, யோவான் தாம் பலிபீட உதவி செய்யும் நாள்களில் திருப்பலிக்கு முன்பாக நோன்பு இருந்து இறைப்பற்றுடன் பணி செய்தார். தாழ்ச்சியே புனிதத்தின் சிறந்த பண்பு என்பதை தமது சிறு வயது முதலே வாழ்ந்து காட்டினார். வாசிக்கத் தொடங்கிய நாள் முதலாக, நிறைய தேடி வாசிக்கும் ஆர்வம் மிகுந்திருந்த இவரை இவரது அம்மா, புத்தகப்புழு என்றும் புத்தகப் பைத்தியம் என்றும் கேலி செய்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். இளம் வயதிலேயே தனித் திறமைகள் பல பெற்றிருந்தார். பல மொழிகளை கற்றறிந்திருந்தார்.
1831இல் இறை பணிக்காக தன்னை அற்பணிக்க முன்வந்து சார்லஸ் பர்டினான்டு பல்கலைக் கழகத்தில் தனது குருத்துவ படிப்பினை நிறைவு செய்தார். சிறப்பாகப் பயிற்சி பெற்ற இவர் தமது முன்மாதிரியாக வேற்றினத்தவர்களின் திருத்தூதர் புனித பவுல் மற்றும் அவருடைய அயராத நற்செய்திப்பணியை நினைவில் ஏற்றிக் கொண்டார். அருள்தந்தை ஃபிரடரிக் பராக்கா, வியோபோல்டு மறைபரப்பு சபையினருக்கு எழுதிய கடிதத்தினாலும் மிகுவும் ஈர்க்கப்பட்டார். பயிற்சி முடிந்தவுடன் குருத்துவ திருப்பொழிவுக்கான நாள் குறிக்கப்பட்டது. தனது குருத்துவப் படிப்பிற்குப் பின் 1835ல் குருவாக திருநிலைப்படுத்தப்பட இருந்த தருவாயில் அந் நாட்டிலுள்ள ஆயர் போதிய குருக்கள் இருப்பதால் யாரையும் திருநிலைப்படுத்தப்படப் போவதில்லை என முடிவெடுத்தார்.
அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்ததால் நியுயார்க் பேராயர் 1836ல் இவரை குருவாக திருநிலைப்படுத்தி தமது மறைமாவட்டத்தில் குருவாக்கினார். நியுயார்க் மறைமாவட்டத்தில் முதல் பணித்தளமான பஃப்பலோ சென்றார். அங்கிருந்த அருள்தந்தை அலெக்ஸாந்தர் பாக்ஸ், “நகரம் அல்லது கிராமம் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுங்கள்” என்று வாய்ப்பளித்தார். யோவான் தூரத்தில் உள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றார். “என் ஆண்டவரே! ஏழ்மையிலும் அறியாமையிலும் உள்ள இளைஞன் நான். உமது மந்தைக்கு ஆயனாக நியமிக்கப்பட்டுள்ளேன். இவையுள் எவையும் தொலைந்துவிடாதபடிக்கு அருள்புரியும். அனைவரும் காப்பாற்றப்பட, அன்னை மரியா மீது மிகுந்த பற்றுக் கொள்ள நான் மக்களுக்காக வாழவும் தேவையெனில் சாகவும் கற்பியும். அன்னையே! தப்பறைகளை வெற்றிகொண்டவரே!! துன்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் செபித்தருளும். என் இயேசுவே! ஆன்மாக்களை உம்மிடம் கொண்டுவருவதைத் தவிர இந்த ஏழை படைப்பால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று செபித்தார்.
குறைந்த நேரமே தூங்கினார். பல மைல்கள் நடந்து பல்வேறு பண்ணைகளில் உள்ள விசுவாசிகளைச் சந்தித்தார். அப்பகுதியில்அமேரிக்காவிற்கு புதிதாக குடிபெயர்ந்து வந்த மக்களிடையே அதிகம் பணிசெய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட பங்கில் பெறும்பாலும் பயணங்கள் அனேகம் மேற்கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். நோயாளிகளை சந்தித்தார் மறைக்கல்வி சென்றவிடமெல்லாம் போதித்தார். சென்றவிடமெல்லாம் வீடுகளிலேயே பள்ளிகள் நடத்தி கல்வியறிவை வந்த மக்களுக்குக் கொடுத்தார். நான்கு வருடங்களுக்குப் பின் ஏழைகளுக்கும் கைவிடப்பட்டோருக்கும் அதிகமாக பணிசெய்யும் உலக மீட்பரின் சபையில் (Redeptorists) சேர்ந்து பணிசெய்தார். பின்னர் பிட்ஸ்பெர்க், பால்டிமோர் பகுதிகளில் பங்குக் குருவாக, மறைபணியாளராக, பலஇடங்களில் பணிசெய்தார். இவர் ஆற்றலோடும், வல்லமையோடும், முழு ஈடுபாட்டுடனும் செய்த பணிகளால் 1852ஆம் ஆண்டில் பிலடெல்பியா மாகாணத்தின் முதல் ஆயராக 41 வயதில் நியமிக்கப்பட்டார்.
முதல் பணியாக அநேகமாக எல்லா பங்குகளிலும் பங்கு பள்ளிக்கூடங்களை உருவாக்கினார். மிகக் குறைந்த காலத்தில் 100 ஆலயங்களையும் 80 பள்ளிகளையும் தமது மறைமாவட்டத்தில் நிறுவினார். அனைத்து கத்தோலிக்கப்பள்ளிகளையும் ஒருங்கிணைத்தார். ஏழை மக்கள் மீது பரிவிறக்கம், நேசமும் கொண்டிருந்தார். புதிதாக அமேரிக்காவில் குடியேறியவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகள் செய்தார். அதற்காக பல மொழிகளை கற்றுத் தெரிந்திருந்தார். மறைமாவவட்டத்தில் அனேக சமூக சேவை நிறுவனங்களை நிறுவினார். தானும் எழிமையாக வாழ கற்றுக் கொண்டார்.
1860 ஜனவரி 5ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் 1921ல் வணக்கத்துக்குரியவராக அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் ஜுன் 19, 1977ல் புனிதர் நிலைக்கு உயர்தினார். புனித யோவான் நெப்பமுசீன் நியுமன், புனிதர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்கர் மற்றும் முதல் அமெரிக்க ஆயராவார்.
இறை வார்த்தை: சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்ளும் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார் (மத். 18:5)
St. John Neumann
St. Simeon Stylite
Bl. Marcelina Darowska
Bl. Peter Bonilli
ஜனவரி 5
தூய சைமன் ஸ்டைலைட்
தூய சைமன் ஸ்டைலைட் (ஜனவரி 05)
நிகழ்வு
அறுபது அடி தூண் மேல் முழந்தாள் படியிட்டுக்கொண்டு தன்னையே ஒறுத்து, ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்த துறவியான சைமனைச் சந்திக்க ஏராளமான பேர் வந்து போனார்கள், நிறைய பேர் அவருடைய ஜெபத்தின் வல்லமையால் குணம்பெற்றுச் சென்றார்கள். இச்செய்தி சிரியா பாலைவனத்தில் தனிமையில் நோன்பிருந்து ஜெபித்து வந்த மற்ற துறவிகளின் காதுகளை எட்டியது. உடனே அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, “இது என்ன புதுவிதமான ஒறுத்தல் முயற்சியாக இருக்கின்றதே, மக்களும் அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாகச் செல்கின்றார்களே... வாருங்கள் நாமும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவோம்” என்று முடிவுசெய்துகொண்டு அவரைப் பார்ப்பதற்கு அவர்கள் கிளம்பிப் போனார்கள்.
அவர்கள் போகிற வழியில் அவர்களுக்குளே ஒரு விவாதம் எழுந்தது. “ஒருவேளை நாம் அவரைப் பார்க்கச் செல்லும்போது அவர் மேலேயே இருந்துகொண்டு நம்மிடத்தில் பேசினால் அவரை என்ன செய்வது?” என்பதுதான் அந்த விவாதம். அப்போது ஒரு துறவி, “நாம் அவரிடத்தில் பேசும்போது அவர் ஆணவத் திமிறில் மேலேயே இருந்துகொண்டு நமக்குப் பதில்கூறும் பட்சத்தில், நாம் அனைவரும் மேலே சென்று, அவரை தரதரவென்று கீழே இழுத்துப் போடுவோம், ஒருவேளை நாம் அவரிடத்தில் பேசும்போது, உடனடியாக அவர் கீழே இறங்கி வந்து நம்மிடத்தில் பேசினால், அவர் உண்மையிலே தாழ்ச்சி நிறைந்தவர் என்று விட்டுவிட்டுப் போய்விடலாம்” என்றார். அந்தத் துறவி சொன்னதை எல்லாரும் சரியென ஏற்றுக்கொண்டு தூய சைமன் ஸ்டைலைட் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.
அவர்கள் அவர் இருந்த இடத்தை அடைந்ததும், “சைமன்” என்று அழைத்தார்கள்.
அந்நேரத்தில் தூய சைமன் ஸ்டைலைட் அறுபது அடி தூணில் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தார். தன்னை அழைப்பது துறவிகள் என அறிந்த அவர், உடனடியாக அந்த அறுபது அடி தூணிலிருந்து கீழே இறங்கி வந்து, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போதுதான் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள் சைமன் ஸ்டைலைட் உண்மையிலே தாழ்ச்சி நிறைந்தவர் என்று. சிறிதுநேரம் அவரோடு பேசிவிட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
சைமன் ஸ்டைலைடோ மக்களால் உயர்வாக போற்றப்படக்கூடிய, மதிக்கப்படக்கூடிய துறவியாக இருந்தபோதும், தன் வாழ்நாள் முழுக்க தாழ்ச்சியோடு இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
சைமன், கி.பி. 388 ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தார். சிறு வயதில் ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். ஒருநாள் யாரோ ஒருவர் இயேசுவின் மலைபொழிவை அவருக்கு வாசித்துக்காட்டியபோது, அதனால் கவரப்பட்டு, துறவற மடத்தில் சேர்ந்து துறவியாக வாழத் தீர்மானித்தார். அப்போது அவருக்கு பதினாறு வயது. துறவு மடத்தில் சைமன் மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்துவந்தார். இதனைப் பார்த்த ஏனைய இளந்துறவிகள், ‘இவர் வரம்புக்கு மீறி ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்கின்றார், எனவே இவர் துறவற மடத்தில் இருப்பது நல்லதல்ல” என்றார்கள். அதன்பேரில் இவர் துறவற மடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
அங்கிருந்து வெளியே வந்தபின் ஷேய்க் ப்ராகட் (Sheik Brakat) என்னும் குன்றில் ஒரு குடிசை அமைத்து, அதிலே ஒன்றரை ஆண்டுகள் தனியாக இருந்து ஜெப தவ வாழ்வில் முன்னேறினார்.
இதற்கிடையில் துறவி ஒருவர் குடிசையில் இருந்துகொண்டு மக்களுக்கு அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்ற கேள்விப்பட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் அவரைத் தேடி வந்தார்கள். அவரும் மக்களுக்கும் மறையுரைகளை ஆற்றினார், அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார். இதனால் அவருடைய புகழ் மக்களிடத்தில் அதிகமாகப் பரவியது. மக்கள் கூட்டம் அதிகமாக வருவது தன்னுடைய ஜெப தவ வாழ்விற்கு சிறிது இடையூறாய் இருக்கின்றது என்பதை உணர்ந்து அவர் பக்கத்திலிருந்த ஒரு குன்றில் பத்தடிக்கு ஒரு தூண் எழுப்பி, அங்கேயே முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
அப்போதும் மக்கள் கூட்டம் அவரைத் தேடி வந்ததால் அறுபது அடி உயரத்திற்கு ஒரு தூண் எழுப்பி, அங்கேயே தூங்காமல் இரவு பகலாக ஜெபத்திலும் தவத்திலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
சைமன் எவ்வளவுதான் மேலே மேலே சென்றபோதும், அவரை நாடி வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. அவர் அங்கிருந்தே மக்களுக்குப் போதித்து வந்தார், பலருடைய நோய்களைக் குணமாக்கி வந்தார். சைமனைப் பற்றிய செய்தி மன்னர் தியோடோசியஸ் மற்றும் அவருடைய மனைவி யுடோசியாவின் செவிகளை எட்டியது. அவர்களும் அவரை வந்து பார்த்து ஆசி பெற்றுச் சென்றார்கள். சைமன் மக்கள் கொண்டு வந்து கொடுத்த காய்ந்த ரொட்டி மற்றும் பாலைக்கொண்டு தான் தன்னுடைய பசியாற்றிக்கொண்டார். அதுவும் எப்போதாவதுதான் அதனை அவர் உட்கொண்டார்.
இப்படி ஜெப தவ வாழ்விலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்த சைமன், உடல் நலம் குன்றி 459 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இறந்த அவருடைய உடலை, அவருடைய சீடர்கள் எடுத்து அடக்கம் செய்தார்கள்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய சைமன் ஸ்டைலைட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருத்தல்
சைமன் ஸ்டைலைட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் தன்னுடைய வாழ்வில் எந்தளவுக்கு ஜெபத்திற்கும் தவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒரு சமயம் அவர் கடுமையான நோயிற்றிருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மன்னர் தியோடோசியசும் அவருடைய மனைவியும் அவரிடம், “இனிமேலும் காட்டில் இருந்து கடுந்தவம் செய்யவேண்டாம், அரண்மனைக்கு வந்துவந்துவிடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு சைமனோ, “”எனக்கு அரண்மனையோ வேறு எந்த வசதியும் வேண்டாம். நான் செய்யக்கூடிய ஜெப தவத்தினால் எனக்கு வந்திருக்கின்ற நோயினை குணப்படுத்திக்கொள்வேன்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
இது நடந்து ஒரு மாத காலம் இருக்கும். சைமன் தான் மேற்கொண்டிருந்த ஜெபத்தினாலும் தவத்தினாலும் தன்னிடமிருந்த நோயினைக் குணமாக்கியிருந்தார். அவர் எந்தளவுக்கு ஜெபத்திலும் தவத்திலும் உறுதியாக இருந்திருந்தார் என்றால், அவரிடமிருந்த நோயினை அவரால் குணமாக்க முடிந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், “அதை (பேயை) ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை” என்று கேட்டும்போது இயேசு அவர்களிடம், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” என்பார். (மத் 17: 19, 21) இதன்மூலம் ஜெபத்திற்கும் நோன்பிருக்கும் எந்தளவுக்கு வல்லமை இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆகவே, தூய சைமன் ஸ்டைலைட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஜெபத்திலும் தவத்திலும் வேரூன்றி இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.