ஜனவரி 6
திருக்காட்சிப் பெருவிழா.
இந்த விழா மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது.இரு பாரம்பரியங்கள் நிலவுகின்றன. இவ்விழாவில் வரக்கூடிய கதாப்பாத்திரங்கள் ஞானிகள் என்பது ஒரு பாரம்பரியம். அவர்கள் கீழ்த்திசை நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது. அடுத்த பாரம்பரியம் அவர்களை அரசர்கள் என:று கூறுகிறது.மெல்கியோர், கஸ்பார்;, பல்தசார் என்பது அவர்களது பெயர்களாம். அரேபியா , கல்தேயா,பாரசீக நாடுகளிலிருந்து அவர்கள் வந்திருக்கலாம் என்று இரண்டாம் பாரம்பரியம் கூறுகிறது.
ஞானிகள் - விண்மீன் - இயேசு கிறிஸ்து
”யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன எழக் கண்டோம்…அவரை வணங்க வந்திருக்கிறோம்”என்று விவிலியத்தில் இயேசுவைத் தேடி வந்த ஞானிகளின் வரலாற்றுக் குறிப்பு உள்ளது.(மத்:2) திருவிவிலியத்தில், ஞானிகள் கிறிஸ்துவை நோக்கி மேற்கொண்ட பயணம் மூன்று நிலைகளை கொண்டது.
1.இயற்கையில்(அ)படைப்பில் தேடுதல்
2.மனிதர்களில் தேடுதல்
3.இறைவனை அடைதல்
1.இயற்கையில் தேடுதல்
பாரம்பரியத்தின்படி மெல்கியூர், பல்தசார், கஸ்பார் என்ற மூன்று ஞானிகள் கிறிஸ்துவைத் தேடி வந்தார்கள். அந்த மூவரும் வேவ்வேறான நாட்டினர். மெசபத்தோமியா, ஈரான், அரேபியா என்ற நாடுகளையும் அதற்குக் குறிப்பிடுவது உண்டு. விண்மீன் தோன்றியதைக் கண்ட அந்த மூன்று ஞானிகள் ஆய்ந்தறிந்தனர். யூதர்களின் அரசரான மெசியாவைத் தேடினார்கள். இயற்கைத் தோற்றமாகிய விண்மீனில் கடவுளைக் கண்டதால் ஞானிகள் மெசியாவைத் தேடி வந்தார்கள். இயற்கையிலும் இறைவனைக் காண முடியும் இஃது ஒரு சான்று.
2.மனிதர்களில் தேடுதல்
இயற்கையில் இறைவனைத் தேடுகின்ற மனிதனுக்கு உடனிருக்கும் மனிதர்களையும் நாட வேண்டியுள்ளது. தேடி வந்த ஏரோது என்ற அரசனை நாடுகின்றார்கள். தனக்கு நிகர் தானே என்ற அந்த ஏரோது அரசன், யூதரின் அரசனா? என்று கேட்டு கலக்கமுறுகிறான். சூழ்ச்சியும் செய்கிறான். இருந்தபோதிலும் அரசனுடைய சூழ்ச்சியே ஞானிகளின் தேடலுக்குச் சுலபமாய் வழி வகுத்தது. தலைமை குருக்களும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களும் ஞானிகளின் தேடுதலுக்கு மறைநூலில் இருந்து விடையளித்தார்கள். நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லேகமே…(மீக் 5:2) உடனிருக்கும் மனிதர்களை நாடுதலிலும் இறைவனைத் தேடலாம் என்பதற்கு இஃது ஒரு சான்று.
3.இறைவனை அடைதல்
இயற்கை விண்மீன் ஞானிகளை வழிநடத்தியது. மனிதர்களாகிய ஏரோதும், அவருடைய அமைச்சர்களும் அவர்களுக்கு வழிகாட்டினர்..எனவே மூன்றாவது நிலையில், இறைவனைக் கண்ட ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள். பொன், சாம்பிராணி, வெள்ளைப்பேளம் போன்ற காணிக்கைகளைக் கொடுத்துத் தங்களை அர்ப்பணித்தார்கள். இறைவனை ஏற்றுக் கொண்டார்கள். உண்மைக் கடவுளைக் கண்டு கொள்பவர்கள் செபிப்பார்கள்(தேடுதல்) வழிபடுவார்கள்(அர்ப்பணித்தல்) (அ)காணிக்கையாக்குதல்) ஏற்றுக்கொள்வார்கள் (ஐக்கியமாக்குதல்) என்பது நற்செய்தி தரும் பாடமாகும்.
விளைவு
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு, அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு சவால்-அதைச் சந்தித்தாக வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு கடமை-அதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு புதிர்-அதற்கு வாழும் போதே தீர்வு காண வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு தேடல்-அதை வாழும் போதே கண்டுபிடித்தாக வேண்டும்;.
வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை வாழ்க்கையிலேயே கண்டுபாவிக்க வேண்டும்.
உடன் சகோதர சகோதரிகளிடத்தில் இறைவனை தேடுதல் நல்லது. இந்தத் திருக்காட்சி விழா. மாறாக இயற்கை, மனிதன், விவிலியம், மூலம் ஒவ்வொரு மனிதனும் இறைவனை நோக்கி மேற்கொள்ளும் பயணத்திற்கு இஃது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
இறை வார்த்தை : ”மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை”.(2கொரி 8:15)
----------------------------
நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்;தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் EPIPHANY என்று அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்கள், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது.
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம். |