“பேதுருவின் வாய் மொழி” என்று புகழப்பட்ட திருநத்தந்தை அகத்தோ சிசிலி நாட்டில் ஆறாம் நூற்றாண்டில் கடைசி காலப்பகுதியில் பிறந்தவராவார். இளமையில் சுறுசுறுப்பின் முகவரியாகவே துலங்கிய அகத்தோ, சராசரி மனிதர்களைப் போல தானுண்டு தன் பிழைப்புண்டு என்றே வாழ்ந்து வந்தார். திருமணத்தில் இருமனம் இணைந்து இனிய இல்லறம் நடத்தி வந்தார். கவிபாடும் ஓடை போல கவித்துவமாக 20 ஆண்டுகள் குடும்ப வாழ்வு வாழ்ந்த பிறகு உலகப் போக்குகளில் இருந்து விடுபட்டு இறைத்தொண்டராக ஊழியம் புரியும் அழைத்தல் பெற்றார்.
பொலெர்மோவில் இருந்த ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து ஆண்டவரின் அன்பின் அகலாகி சுடர் விட்டார். பல ஆண்டுகள் உரோமையின் பொருளாளராகவும் விளங்கினார். திருத்தந்தை தோனுஸ் மறைந்த பிறகு 678-ஆம் ஆண்டு 100 வயது கடந்த நிலையில் திருத்தந்தையாக பொறுப்பேற்றார். சில மாதங்களிலேயே யார்க் பேராயர் புனித வில்ஃபிரட் திருத்தந்தையைச் சந்தித்தார். “கான்றர்பரிதியடோசியஸ் நீதிக்குப் புறம்பாகவும், திருச்சபைச் சட்டமுறைமைகளுக்கு எதிராகவும் தன்னைப் பதவிநீக்கம் செய்துவிட்டார்” என்றார். திருத்தந்தை அவர்கள் லாத்தரனில் பெருமன்றத்தைக் கூட்டினார். நல்புரிதலுக்குப் பிறகு மீண்டும் வில்ஃபிரட்டுக்கு பொறுப்பு வழங்கினார்.
இவருடைய காலத்தில் பேரரசராக இருந்தவர் கான்ஸ்டன்டைன் பொகனுதுஸ். அப்போது, மனுவுரு எடுத்த இயேசு இறையியல்பை மட்டும் கொண்டவர் (ஓரியல்புக் கோட்பாடு) என்ற தப்பறைக் கொள்கையானது தலைவிரித்தாடியது. இதைக் கண்ட திருத்தந்தை அகத்தோ, பேரரசரின் அனுமதியுடன் 680இல் ஆறாவது பொதுச் சங்கம் கூட்டினார். இது கொண்ஸ்தாந்தினோபிளில் நடந்த மூன்றாவது சங்கமாகும். அக்கூட்டத்தில் அனைவரும் வியக்கும்படி, “இயேசுவின் மந்தையைப் பேணிக்காத்த திருத்தூதரான புனித பேதுருவின் அதிகாரத்தைப் பெற்ற, மற்ற எல்லாக் குட்டி திருச்சபைகளுக்கும் அன்னையும் அரசியுமான கத்தோலிக்க திருச்சபை பேதுருவின் நம்பிக்கையையே மீண்டும் நிலை நாட்டுகிறது” என்று விளக்கம் கொடுத்தார். எல்லாரும் பேதுருவே எழுந்து வந்து விளக்கம் கொடுத்தாக சிலாகித்துப் புகழ்ந்தார்கள்.
இரண்டரை ஆண்டுகள்தான் இவர் திருந்தந்தையாக இருந்தார். தாராள உள்ளத்திற்கும், இனிமையான தோழமை உறவுக்கும், சுகமான பண்பு நலன்களுக்கும், தாழ்ச்சியின் புண்ணியத்திற்கும் சொந்தக்காரராக மகிமையுடன் விளங்கினார்.
தன்னை நாடி வரும் அனவைருக்கும் எண்ணற்ற புதுமைகளின் வழியாக நம்பிக்கைச் சாட்சியாக விளங்குவதால், ‘புதுமைகளின் புதல்வன்’ என்றும் இவர் பெருமை பெறுகிறார். முதமையிலும் தம் முதுகில் திருச்சபையைச் சுமந்த அகத்தோ 681இல் உரோமையில் காலமானார்.
இறை வார்த்தை : எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்: வளமையிலும் வாழத் தெரியும் (பிலி. 4:12)
St. Agatho
St. Gregory of Nyssa
St. Francoise
St. William of Bourges
ஜனவரி 10
நிசா நகரத்து புனித கிரகரி
நிசா நகரத்து புனித கிரகரி
மறைசாட்சியின் மகளான எமிலியாவின் புதல்வனாக கப்பதோக்கியாவின் தலைநகரான செசரியாவில் ஏறக்குறைய 334ஆம் ஆண்டு பிறந்தவர் கிரகோரி. மூன்று கப்பதோக்கிய நகர தந்தையர்களுள் இவரும் ஒருவர். மற்றவர்கள், புனித பெரிய பாசில் மற்றும் கிரகோரி நசியான்சன் ஆவர். 10 குழந்தைகளுக்கு பெற்றோரான இவரின் தந்தை பாசில், தாய் எமிலியா இருவரும் புனிதர்கள். இவரின் பாட்டி மாக்ரீனா, சகோதரர்கள் பெரிய பாசில் மற்றும் செபஸ்தே பீட்டர் மற்றும் சகோதரி மேக்ரின் அனைவருமே ‘முன்மதியுடைய கன்னியராக’ வாழ்ந்து புனித நிலையில் இருக்கிறார்கள்.
தமது அண்ணன் மீது தம் உயிரையே வைத்திருந்த கிரகோரி, “எமது தந்தையும் ஆசிரியனும்” என்று அண்ணனைப் புகழ்ந்தார். புனித பாசில் தமது தம்பிகள் இருவரும் கல்வி அறிவு பெற்று வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற் கொண்டார். அண்ணனின் எண்ணப்படி நன்கு படித்தாலும் சுறுசுறுப்பு இல்லாதவராகவே கிரகோரி இருந்தார்.
ஒரு நாள், உரோமையின் 12ஆம் படையணியைச் சேர்ந்த 40 புனிதர்களின் (மார்ச் 10) திருப்பண்டங்கள் கிரகோரியின் வீட்டிற்கு அருகில் இருந்த கோவிலில் நிறுவப்பட்டது. இது, இவருடைய மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தார். இறைவனின் அழைப்பை உணர்ந்தாலும், தான் குருத்துவ வாழ்வுக்குத் தகுதியற்றவர் என்று முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டார். தம்பியிடம் வெளிப்படும் இறைவனின் அன்புருவைக் கண்டுகொண்ட புனித பாசில் மற்றும் கிரகோரி நசியான்சன் இருவரும் தொடர்ந்து கிரகோரியிடம் ஆன்ம உரையாடல் நடத்தி வந்தார்கள். இறைவனின் குரலுக்கு கிரகோரி செவிமடுத்தார். ஏறக்குறைய 362ஆம் ஆண்டில் குருத்துவத் திருப்பொழிவு பெற்றார்.
371இல் புனித பாசில் இவரை ஆயராக உயர்த்தினார். அதற்குக் காரணம் இருந்தது. “இறைத்தந்தையும், இயேசு கிறிஸ்துவும் ஒரே இறையியல்பு கொண்டவர்கள் இல்லை. மாறாக ஒத்த இறையியல்பு கொண்டவர்கள்” என்ற ஆரியுசின் தப்பறைக் கொள்கையை பேரரசர் வாலன்ஸ் பின்பற்றி வந்தார். இவரை எதிர்த்து வாதிடவும், வெற்றி கொள்ளவும் அத்தனாசியன் ஆயர்களின் ஆதரவும், வாக்குகளும் ஆயராக இருந்த பாசிலுக்குத் தேவைப்பட்டது. சசிமா மறைமாவட்டத்தில் ஏற்கனவே கிரகோரி நசியான்சன் இருந்தார். எனவே நிஸ்ஸா மறை மாவட்டத்திற்கு தம் தம்பி கிரகோரியை பாசில் நியமித்தார்.
தமக்குத்தான் ஆயர் பதவி கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. போந்துசின் ஆளுநர் டெமோஸதேனஸ் கூட்டிய கிழக்கத்திய ஆயர்களின் கூட்டத்தில் நிஸ்ஸா நகர் கிரகோரிக்கு எதிராக வாதங்களை எடுத்து வைத்தார்கள். ஆலய சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என்று பழி சுமத்தினார்கள். கிரகோரியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆளுநரும் கைது செய்ய ஆளனுப்பினார். இக்கைதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கிரகோரி வந்தவர்களுடன் முகமலர்ச்சியுடனே சென்றார்.
ஆளுநரின் அவையில் கிரகோரி மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். எனவே மனம் வெறுத்துப் போனவராகத் தப்பிக்க வழி தேடினார். கிடைத்தபோது, தப்பித்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் மறைந்து கொண்டார். 376இல் கூட்டப்பட்ட நிஸ்ஸா நகர பெருமன்றத்தின் முடிவின்படி கிரகோரி ஆயர் பொறுப்பிலிருந்தும் அகற்றப்பட்டார். இரண்டு ஆண்டுகள், பேரரசன் வாலன்ஸ் மறையும்வரை நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக தலைமறைவாக ஓடிக்கொண்டே இருந்த. வாலன்சின் மறைவிற்குப் பிறகு (378) புதிய பேரரசர் கிராசியன் கிரகோரியை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஆயர் பொறுப்பை வழங்கினார்.
சில மாதங்களிலே, 379ஜனவரியில் இவரின் அண்ணன் பாசில் இறந்தார். அதன் பிறகு கிரகோரி முழுவீச்சில் பணியாற்ற ஆரம்பித்தார். இறையியல், மெய்யியல் சார்ந்த கட்டுரைகளும், மறையுரைகளும் எழுதினார். ஆன்ம வாழ்வு குறித்து எழுதினார். மூவொரு இறைவன் பற்றியும் கிறிஸ்துவின் இறைமனித இயல்பு பற்றியும் யாராலும் ஈடுகொடுக்க முடியாதபடிக்குப் பேசினார். “இறைவனை, தனி செபம் மற்றும் தியானத்தில் மட்டுமல்ல குழு வழிபாட்டிலும், திருச்சபையின் தூய வாழ்விலும் கண்டு கொள்ளலாம்” என்றார். அவர் மேல் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டபோது வேதனை இவரை ஆட்கொண்ட போது இறுதி வரை தம் அழைத்தலில் நிலைத்திருந்தார்.
பணியாளர் ஓய்வுக்கு உரிமையுடையவரே என்பதற்கு ஏற்ப 395, மார்ச் ஒன்பதாம் நாள் நித்திய ஓய்வுக்குச் சென்றார். பழிபோடுகிறவர்களை நினைத்து பதற்றப்படாமல் பக்குவமாகச் சிந்தித்தோம் என்றால் வாழ்வின் பொருளைக் கண்டுகொள்ள முடியும்.
இறை வார்த்தை: கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31)
St. Agatho
St. Gregory of Nyssa
St. Francoise
St. William of Bourges
ஜனவரி 10
புனித லியோனி அவியட்
புனித லியோனி அவியட்
புனித லியோனி அவியட், லூயிஸ் பிரிஸ்ஸான் மற்றும் மரி டி சேல் சப்புயிஸ் தம்பதியருக்கு மகளாக 1844 செப்டம்பர் 16 நாள் பிரான்ஸ் நாட்டில் சிசனே எனும் ஊரில் பிறந்தார். புனித பிரான்சிஸ் டி சேல் பள்ளியில் சேர்ந்து படித்தபோதே தன்னையே இறைப்பணிக்கு அற்பணித்துக்கொண்டார். சலேசிய சபையின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, இளம் வயதில் வேலைசெய்வோறுக்கென ஒரு சபையை ஆரம்பித்தார்.
அருட்பணியாளர் பிரிசோன் வழிகாட்டுதலின் படி லியோனி அவியட் புனித பிரான்சிஸ் டி சேல் துறவர சபையை ஆரம்பித்தார். சபை மென்மேலும் வளர்ந்து அனேகருக்கு வேலை வாய்ப்பையும் பெண்களுக்கு தனி பள்ளிக்கூடமும் அமைத்தார்கள். தன்னுடைய புனித வாழ்கையினால் அனேகரை கிறிஸ்துவின் பாதையில் பின்பற்றச் செய்தார். 1914ஆம் ஆண்டு ஜனவரி 10ல் இறைவனடி சேர்ந்தார்
அவருக்கு 1992ல் அருளாளர் பட்டமும் 2001 நவம்பா 25ல் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.
இவர் பிரான்சு தேசத்தில் உத்தம கோத்திரத்தில் பிறந்து புண்ணிய வாளரான ஒரு குருவானவரிடத்தில் கல்விப் பயின்றார். இவர் சிறு வயதிலேயே பெயர் பெருமையையும், சுக செல்வத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டு, குருப்பட்டம் பெற்றபின் தமக்கு அளிக்கப்பட்ட மேலான அலுவலுக்குச் சம்மதியாமல் சன்னியாச மடத்தில் சேர்ந்து வெகு உருக்கத்துடன் நெடு நேரம் ஜெபம் செய்துவருவார். ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுத்து, கடின தபஞ்செய்து இடைவிடாமல் மரணத்தைப்பற்றி தியானிப்பார். இவருடை புண்ணியங்களைக் கண்ட அரசரும் பிரபுக்களும் அதிசயித்து அவருக்கு மரியாதை செலுத்திவந்தார்கள். மேலும் இரண்டு மடங்களுக்கு சிரேஷ்டராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அவைகளைத் திறமையுடன் நடத்தி வந்தார்.
இவர் பூர்ஜெஸ் நகரின் மேற்றிராணியாராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அர்ச்.பாப்பானவருடைய கட்டாயத்தின்பேரில் அதற்குச் சம்மதித்து, மேற்றிரா ணியார் அபிஷேகம் பெற்றபின் முன்னிலும் அரும்பெரும் புண்ணியங்களைச் செய்துவந்தார். மயிர்ச்சட்டையைத் தரித்துக்கொண்டு, மாமிசத்தை அறவே வெறுத்து, கடுந்தவம் செய்து தமது மேற்றிராசனக் கிறீஸ்தவர்களை வெகு அன்புடனும், தயவுடனும் நடத்தி, தமது புத்தி ஆலோசனையால் கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பி, அநேக பதிதரை வேதத்தில் சேர்த்துவந்தார். தமக்கு மரணம் கிட்டியிருப்பதை அறிந்து, வெகு பக்தி விசுவாசத்துடன் கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று, சாம்பல்மேல் படுத்துக்கொண்டே அர்ச்சியசிஷ்டவராக உயிர் விட்டார்.
யோசனை
நாம் புண்ணிய வழியில் வாழ வேண்டுமானால் அகத்திலும் புறத்திலும் ஒறுத்தலை அனுசரித்து நமது அந்திய காலத்தைப்பற்றி யோசிக்கக்கடவோம்.