இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 347ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் ஒரு மேன்மை மிக்க பணக்கார குடும்பத்தில் பிறந்தார். டோசோடியுஸ் என்பவரை மணந்து ஒரு மகனையும் 5 மகள்களையும் பெற்றுக் கொண்டார். பவுலா தமது 32ஆம் அகவையில் கணவனை இழந்தார். அதன் பின் தனிமை வாழ்வையும் தரித்திர வாழ்வையும் மேற்கொண்டார். விவிலியத்தையும் ஆழமாக படித்து வந்தார். தமது செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டார்.
பங்குத் தந்தையாய் இருந்த ஜெரோம் என்னும் குருவை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார். அப்போது இந்த குரு திருவிவிலியத்தை இலத்தீனில் மொழிபெயர்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பவுலா விவிலிய மொழிபெயர்ப்பில் ஜெரோமுக்கு உதவி செய்தார். அருட்பணி. ஜெரொம் மொழிபெயர்ப்புக்காத புனித நாடுகளுக்குச் சென்றபோது பவுலாவும் உடன் சென்று உதவிசெய்தார். பவுலா பெத்லகேமில் தங்கி ஜெப வாழ்விலும் எழிமையான வாழ்விலும் ஈடுபட்டார்.
அதோடு அங்கு மருத்துவ மனை அமைப்பதற்கும், அருட்பணி ஜெரோம் ஆரம்பித்த துறவிகள் சபை மடம் கட்டுவதற்காக பெரிதும் உதவி செய்தார். தன்னுடைய மிக எளிமையான வாழ்வால் உடல் நலிவுற்று 404 ஆண்டு ஜனவரி 26ல் இறைபதம் சேர்ந்தார். பெத்லகேமில் இயேசு பிறந்த ஆலயத்தின் அடிப்புரத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். பணி. ஜெரோம் அவருக்கு நீத்தார் நினைவுக் குறிப்பு எழுதியுள்ளார்.
ஜனவரி 26
புனித ஸ்டீபன் ஹார்டிங்
புனித ஸ்டீபன் ஹார்டிங் ஜனவரி 26
காலம் : (11வது, 12வது நூற்றாண்டு) இடம் : இங்கிலாந்து
பாதுகாவல் : தலைவர்கள்
வாழ்க்கைக் குறிப்பு :
11 ஆம் நூற்றாண்டில் இடைப் பகுதியில் இவர் பிறந்தார். இவர் தனது தொடக்கப் பள்ளியை புனித ஆசீர்வாதப்பரின் மடத்தில் படித்தார். ஆனால் இளவயதினால் மடத்து வாழ்க்கை பிடிக்காமல் ஸ்காட்லாந்தி;ற்கு சென்றார். பிறகு பிரான்சில் தனது கல்வியை தொடர்ந்தார் அங்கு அவர் தனது ஆன்மீகம் தன்னை திரும்ப அழைப்பதை கண்டுணர்ந்தார். இது இவரை ரோமிற்கு திருப்பயணம் செல்ல தூண்டியது. பின்னர் இவர் ஒரு துறவியாக மாறினார். இவரது மடம் புனித ஆசீர்வாதப்பரின் நடைமுறைகளை கடினமாக பின்பற்றிய ராபர்ட் என்பவரால் நடத்தப்பட்டது. 1098 ஆம் ஆண்டு நம் புனிதரும் வேறு இருவரும் இணைந்து சிஸ்மர்சியன் என்ற புதிய வழிமுறையை தோற்றுவித்தனர். புனித ஸ்டீபன் முதலில் உதவி குருவாகவும் பின்னர் மடத்தின் தலைவராகவும் செயலாற்றினார். நம் புனிதர் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பண்பாடு உடையவராகவும் திகழ்ந்தார். இவரது மதிப்பீடுகள் அவரது சபை குருக்களை கவர தவறியது இறுதியாக 1112 ஆம் ஆண்டு பெர்னார்டு 30 புதிய முறைகளை கொண்டு வந்தார். இதன்மூலம் இளமையும், புத்துணர்வும் மீண்டும் கிடைக்கப் பெற்றது.
சிறப்புகள் :
புதிய ஆர்வத்துடன் புனித ஸ்டீபன் சிஸ்டர்சியன்ஸ் வழிமுறைகளை இயற்றினார். இது அவரது மட துறவியர்களை புனித ஆசீர்வாதப்பரின் அன்றாட வாழ்க்கை முறையை பின்பற்ற அழைத்தது. புறத்திலிருந்து வரும் வருவாயை மறுக்கவும் இது அவர்களை தூண்டியது. இந்த வழிமுறைகளின் மதிப்பீடுகள் நாளுக்கு நாள் வளர்ந்தது. புனித ஸ்டீபன் தனது தலைமை மடத்தைச் சார்ந்த தலைமைத் துறவி வருடத்திற்கு ஒரு முறையாவது தனது சபையைச் சார்ந்த மற்ற மடங்களை பார்வையிட வேண்டும் என்று விரும்பினார். 1134 ஆம் ஆண்டு நம் புனிதர் இறந்த பொழுது சிஸ்டர்ஸியன் சபையில் 12க்கும் மேற்பட்ட மடங்கள் பிரான்ஸிலும், இங்கிலாந்திலும் இருந்தன.
செபம் :
ஒ எம் புனிதரே உமது இடைவிடாத முயற்சியாலும், எளிமையான வாழ்க்கையிலும் நீர் மற்றவர்கள் புனித வாழ்க்கை வாழ வழி வகை செய்தீர். இதன் மூலம் இயேசு கிறிஸ்துவை நீர் உலகுக்கு வெளிப்படுத்தினீர். உமது எடுத்துக் காட்டான வாழ்வு என்னை இவ்வுலக சோதனைகளிலிருந்து மீட்டெடுத்து இறை ஆவிக்கள் நான் மேலும் பலப்பட ஆசீரைத் தந்தருளும். – ஆமென்.
ஜனவரி 26
புனிதர் திமொத்தேயு
✠ புனிதர் திமொத்தேயு ✠ (St. Timothy)
நினைவுத் திருநாள் : ஜனவரி 26
*ஆயர், மறைசாட்சி : (Bishop, Martyr)
*பிறப்பு : கி.பி. சுமார் 17 - லிஸ்ட்ரா (Lystra)
*இறப்பு : கி.பி. சுமார் 97 (வயது 79/80) -மசெடொனியா (Macedonia)
*ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கீழை மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
லூத்தரன் திருச்சபை (Lutheran Church)
புனிதர் திமொத்தேயு, கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும், பண்டைய கிரேக்க நகரமான "யூஃபேசஸ்" (Ephesus) எனுமிடத்தின் முதல் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும், "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.
விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறிஸ்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும்.
(காண்க: 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு).
வாழ்க்கை வரலாறு :
திமொத்தேயு, "ஆசியா மைனர்" (Asia Minor) என்று அறியப்படும் "அனடோலியன் தீபகற்பத்தின்" (Anatolian peninsula) மத்திய பிராந்தியமான "லிஸ்ட்ராவின்" (Lystra) "லிக்கவோனியன்" (Lycaonian) நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தாயார் "யூனிஸ்" (Eunice), கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாறிய ஒரு முன்னாள் யூதப் பெண்மணியாவார். இவரது தந்தையார் கிரேக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
புனிதர் பவுலும், "அந்தியோக்கியா மற்றும் சைபிரஸ்" (Apostle to Antioch and Cyprus) ஆகிய நாடுகளின் அப்போஸ்தலருமான புனிதர் "பர்னபாஸ்" (Saint Barnabas) ஆகிய இருவரும் முதன்முதலாக "லிஸ்ட்ரா" (Lystra) நகர் வந்தபோது, பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்ற ஒருவரை பவுல் குணப்படுத்தினார். பலர் அவரது போதனைகளை ஏற்றுக்கொள்வதற்கு வழிநடத்தினார்.
இவர் பற்றின சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளன. புனித பவுல் தமது இரண்டாம் மறையறிவிப்புப் பயணத்தை மேற்கொண்ட போது அனத்தோலியா (Anatolia) பகுதியில் "லிஸ்ட்ராவுக்குச்" (Lystra) சென்றார்.
ஓரிடத்தில் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைத்து, "ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்" என்று கூறுகின்றார்.
(1 கொரிந்தியர் 4:17).
மேலும் பவுல், திமொத்தேயுவைக் குறித்து "விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை" என்கிறார்
(1 திமொத்தேயு 1:1).
இன்னோர் இடத்திலும் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைக்கிறார்.
(2 திமொத்தேயு 1:1).
திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்த பவுல் திமொத்தேயு யூத முறைப்படி விருத்தசேதனம் செய்ய ஏற்பாடு செய்தார்.
(காண்க: திருத்தூதர் பணிகள் 16:3).
திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டார். "இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே" என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 4:14).
திமொத்தேயுவின் தாய் "யூனிஸ்" (Eunice) மற்றும் பாட்டி "லோயிஸ்" (Lois) இருவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததை பவுல் எடுத்துக்காட்டுகிறார்.
(காண்க: 2 திமொத்தேயு 1:5). அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாம்.
மற்றோர் இடத்தில் பவுல், திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: "நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறித்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது."
(காண்க: 2 திமொத்தேயு 3:15).
திமொத்தேயு ஒருமுறையாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது எபிரேயர் திருமுகத்திலிருந்து தெரிகிறது: "நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்."
(காண்க: எபிரேயர் 13:23).
திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்தது என்பதும் பவுலின் கூற்றிலிருந்து தெரிகிறது: "தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து."
(காண்க: 1 திமொத்தேயு 5:23).
எபேசு நகரில் தவறான கொள்கைகள் பரவும் ஆபத்து இருந்ததால் பவுல் திமொத்தேயுவிடம் அங்கேயே தங்கி இருக்கும்படி கூறுகிறார்: "நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு."
(காண்க: 1 திமொத்தேயு 1:3).
எபேசு சபையில் தகுதிவாய்ந்த சபைக் கண்காணிப்பாளர்களையும் திருத்தொண்டர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பது குறித்து பவுல் திமொத்தேயுக்கு விரிவான வழிகாட்டல் தருகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 3:1-13).
இந்த வழிமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன.
பிற்கால மரபுச் செய்திகள் :
பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97ல், திமொத்தேயுவுக்கு 80 வயது ஆனபோது, அவர் பேகனிய சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக் கொண்டுபோய் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.
கி.பி. 4ம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் மீபொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் தூய திருத்தூதர்கள் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
வணக்கம் :
ரோமன் கத்தோலிக்க திருச்பையில் திமோத்தேயுக்கு பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைத்து விழாக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழா ஜனவரி 26ம் நாள் ஆகும்.
கீழை மரபுச் சபையில் திமொத்தேயு ஒரு திருத்தூதராகவும், புனிதராகவும், மறைசாட்சியாகவும் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா ஜனவரி 22ம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 26
✠ புனிதர் தீத்துஸ்
✠ புனிதர் தீத்துஸ் ✠ (St. Titus)
நினைவுத் திருநாள் : ஜனவரி 26
*ஆயர்/ மறைச்சாட்சி : (Bishop and Martyr)
*பிறப்பு : கி.பி. முதல் நூற்றாண்டு
*இறப்பு : கி.பி. 96 அல்லது 107 - கோர்ட்டின், கிரேட் (Gortyn, Crete)
*ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள் (Eastern Catholic Churches)
லூத்தரன் திருச்சபை (Lutheranism)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
*புனிதர் பட்டம் : வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்
*முக்கிய திருத்தலங்கள் :
ஹெராக்ளியோன் (Heraklion) கிரேட் (Crete)
*பாதுகாவல் : கிரேட் (Crete)
புனிதர் தீத்துஸ் (St. Titus), பண்டைய கிறிஸ்தவ சமய மறைப்பணியாளரும், திருச்சபையின் ஒரு தலைவரும், அப்போஸ்தலரான புனிதர் பவுலின் துணையாளரும், சீடரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடைக்கின்றன.
வாழ்க்கைக் குறிப்புகள் :
தீத்துஸ், பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவில் (Antioch) இருந்தார். பின்னர் அவர்களோடு எருசலேம் சங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றார். "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துசையும் கூட்டிகொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்" (கலாத்தியர் 2:1) என்று பவுல் எழுதுகிறார். ஆயினும் தீத்துஸின் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படவில்லை.
தீத்துஸ் யூத இனத்தைச் சாராத புற இனத்தவர் (Gentile) என்று தெரிகிறது. அவர் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பவுல் மிகக் கண்டிப்பாகக் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது: "என்னுடன் இருந்த தீத்துஸ் கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3). கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் வாதாடினார்.
தீத்துஸ் ஆற்றிய அறப்பணி :
பவுல் எபேசு நகரில் கிறிஸ்தவத்தை அறிவித்தபோது, திமொத்தேயு மற்றும் தீத்துஸ் ஆகியோர் அவரோடு பணியாற்றினர். அங்கிருந்து பவுல் தீத்துசை கொரிந்து நகருக்கு அனுப்பினார். அந்நகரிலிருந்து காணிக்கை பிரித்து, எருசலேம் சபையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு தீத்துஸ் அனுப்பப்பட்டார். "எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துசே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்" என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 8:6).
பவுல் மாசிதோனியாவில் பணிபுரிந்த போது, தீத்துஸ் அவரிடம் சென்றார். கொரிந்து நகரில் திருச்சபை வளர்ந்து வந்ததை தீத்துஸ் பவுலிடம் எடுத்துக் கூறினார். அது பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்த போது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துஸின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துஸுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்" (2 கொரிந்தியர் 7:5-8).
தீத்துஸ் கிரேட் (Crete) சபைக்குப் பொறுப்பேற்றல் :
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீத்துஸின் பெயர், பவுல் சிறைப்பட்டதை ஒட்டியும், தீத்து கிரேட் (Crete) சபைக்குப் பொறுப்பேற்றது பற்றியும் வரும் குறிப்பில் மீண்டும் காணப்படுகிறது. "நான் உனக்குப் பணித்தபடியே கிரேட் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்" (தீத்து 1:5) என்று பவுல் தீத்துஸுக்கு எழுதுகிறார்.
பவுல் உரோமையில் இருந்தபோது தீத்துஸ் தல்மாத்தியாவுக்குச் சென்றார் என்பதே தீத்துஸ் பற்றிய இறுதிக் குறிப்பு. "தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்துஸ் தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்" (2 திமொத்தேயு 4:10) என்று பவுல் குறிப்பிடுகின்றார்.
இறப்பு :
தீத்துஸின் இறப்புப் பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை.
மரபுப்படி, பவுல் தீத்துசை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிரேட் தீவின் 'கோர்ட்டின்' நகர ஆயராக அவரை நியமித்தார். தீத்துஸ் கி.பி. 107ல் தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில் இறந்தார்.
புனித தீத்துஸின் மீபொருட்கள் :
துருக்கியர் ஆட்சிக்காலத்தில் வெனிசு நகருக்குக் கொண்டுபோகப்பட்டிருந்த புனித தீத்துஸின் மீபொருள்கள் அவர் பணிசெய்து உயிர்துறந்த கிரேட் தீவுக்கு 1969ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது அப்பொருட்கள் "கிரேட் தீவில் அமைந்துள்ள ஹெராக்ளியோன்" ஆலயத்தில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.
புனித தீத்துஸ் விருது :
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில், சிறப்பான சேவை செய்வோருக்கு "புனித தீத்துஸ் விருது" என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.