பிப்ரவரி 1
தூய பிரிஜித்தம்மாள்
தூய பிரிஜித்தம்மாள் ( 452 – 524 )
(அயர்லாந்த் நாட்டின் பாதுகாவலி, அறிஞர்கள், கவிஞர்கள் , பாலகர்கள், பயணிகளின் பாதுகாவலி)
கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திப 10:38)
வாழ்க்கை வரலாறு
பிரிஜித், கி.பி.450 ஆம் ஆண்டு, வடக்கு அயர்லாந்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் அயர்லாந்தின் பாதுகாவலரான தூய பேட்ரிக்கிடமிருந்து திருமுழுக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஜித் வளரும்போதே கடவுள் பக்தியில் சிறந்து விளங்கி வந்தார். இன்னும் சிறப்பாக இயற்கையில், உயிர்களில் அவர் இறைவனைக் கண்டு மகிழ்ந்தார். வானத்தில் இருக்கின்ற விண்மீன், ஆகாயத்தில் அலைந்து திரிகின்ற பறவைக்கூட்டம், காட்டு மலர்ச் செடிகள், கடல்வாழ் உயிரினங்கள் இவற்றிலெல்லாம் இறைவன் பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.
பிரிஜித் வாழ்ந்த பகுதியில் கிறிஸ்தவரல்லாத புறவினத்தவர் அதிகமாக இருந்தார்கள். அவர்களோடும் இவர் நல்லதொரு இணக்கமாக உறவினை வைத்திருந்தார். எப்போதெல்லாம் கிறிஸ்தவர்களுக்கும் புறவினத்தவருக்கும் இடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்ததோ அப்போதெல்லாம் இவர் அந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பவராக இருந்தார். பிரிஜித் இயல்பிலே இரக்ககுணமும் அன்பும் கொண்டிருந்ததினால் எல்லாருக்கும் நன்மைகள் செய்துவந்தார். அதனால் எல்லாருடைய பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.
பிரிஜித்துக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவருடைய அழகில் மயங்கி நிறைய ஆண்கள் அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர் யாரையும் மணந்துகொள்ளாமல், துறவற மடத்தில் சேர்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார். துறவு மடத்தில் அவருடைய எடுத்துக்காட்டான வாழ்வினைப் பார்த்துவிட்டு சபையின் மிக முக்கியப் பொறுப்பினை அவருக்குக் கொடுத்தார்கள். மட்டுமல்லாமல், ஓர் ஆயருக்கு எவ்வளவு அதிகாரங்கள் இருக்குமோ அவ்வளவு அதிகாரங்களையும் அவருக்குக் கொடுத்தார்கள். பிரிஜித் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை இறைவனுக்குப் பயந்து, இறைவனின் திருவுளத்திற்கு ஏற்றவாறு வகித்து வந்தார். இப்படிப்பட்ட புனிதை 525 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பிறகு, நிறையப் பேர் இவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்றி வாழத் தொடங்கினார்கள்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய பிரிஜித்தின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. இயற்கையில் /உயிர்களில் இறைவன் இருப்பதை உணர்தல்
தூய பிரிஜித்தின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் எந்தளவுக்கு இயற்கையில், உயிர்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்து வந்தார் என்பது நமக்கு நன்றாகப் புரியும். இன்று அவரை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று இயற்கையிலும் உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து இயற்கைக்கும் உயிர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொடுத்து வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். “வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்பார் வள்ளலார். உயிர்கள் மீது அவருக்கு இருந்த பரிவும் இரக்கமும் நமக்கு இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய நுகர்வுக் கலாச்சாரத்தில் இயற்கையும் உயிர்களும் அழித்தொழிக்கப்படுகின்ற அவல நிலைதான் இருக்கின்றது. இத்தகைய நிலை மாறவேண்டும். இறைவனின் பிரச்சன்னம் எங்கும் எல்லாரிலும் இருப்பதை உணர்ந்து வாழவேண்டும்.
முன்பொரு காலத்தில் அப்ரூசா நாட்டை ஜான் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய அரண்மனைக்கு முன்பாக ஆராய்ச்சி மணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த ஆராய்ச்சி மணியின் பிரதான நோக்கம், நாட்டில் ஏதாவது ஓர் ஆபத்து நேரிடுகின்றபோது அதனை மன்னனுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அது கட்டப்பட்டிருந்தது.. ஒருநாள் அந்த ஆராய்ச்சி மணி ஒலித்தது. என்ன பிரச்சனை, யார் அந்த மணியை ஒலிக்கின்றார்? என்று பார்ப்பதற்கான மன்னர் அரண்மனையை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கே ஒரு வயதான, வாடிப்போன குதிரையொன்று அந்த மணியின் கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தது. உண்மையில் அது நீதிகேட்டு வரவில்லை. பசியால்தான் அந்தக் கயிற்றைக் கடித்துக்கொண்டிருந்தது. அரசன் என்னவென்று விசாரித்தபோது விவசாயி ஒருவர் அந்தக் குதிரையை வளர்த்து, அது வயதான பிறகு விரட்டிவிட்டது தெரியவந்தது. உடனே அரசரும் அவரது அவையும், குதிரை நீதிகேட்டு வந்ததாகப் பாவித்து அந்த விவசாயிக்கு அபராதமும், அதனைப் பராமரிக்கவேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்தனர்.
வாயில்லா ஜீவனை சரியாகப் பராமரிக்காத விவசாயிக்கு அரசன் தக்க தண்டனையைக் கொடுத்ததுபோல், இயற்கையையும் உயிர்களையும் சரியாகப் பராமரிக்காதபோது இறைவன் நமக்கு தக்க தண்டனையைத் தருவார் என்பது உறுதி.
ஆகவே, தூய பிரிஜித்தின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம் அவரைப் போன்று இயற்கையில் இறைவனைக் காண்போம், அதனைப் பாரமரிக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
|