Presentation of Jesus in the Temple Saint Adalbald of Ostrevant Saint Catherine dei Ricci

பிப்ரவரி 2

இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுத்தல்

mary

ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

நிகழ்வு
கி.பி. 526 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபுள் நகரை மிகப்பெரிய கொள்ளை நோய் தாக்கவே, சிறியவர் முதல் பெரியவர் வரை மக்களில் நிறையப்பேர் இறந்து போனார்கள். இதைப் பார்த்த யாவரும் செய்வதரியாமல் திகைத்தார்கள். அப்போது திருத்தந்தை முதலாம் ஜஸ்டின், இந்த கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, மக்கள் அனைவரையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதுதான் எனத் தீர்மானித்து, அவ்வாறு ஜெபித்தார். இதனால் விரைவிலேயே கொள்ளைநோய் நீங்கியது. அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

உடனே திருத்தந்தை அவர்கள், ஆண்டவர் மக்களை சிறப்பான விதத்தில் கொள்ளைநோயியிலிருந்து காப்பாற்றியதால், அனைவரையும் ஆண்டவர் இயேசுவை கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடப் பணித்தார். அப்படித் தோன்றியதுதான் இவ்விழா.

வரலாற்றுப் பின்புலம்
இன்று நாம் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றோம். இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கின்றபோது, அது விடுதலைப் பயண நூலிலே காணக்கிடக்கிறது.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்து என்னும் அடிமைத்தன வீட்டிலிருந்து விடுப்பதற்காக பத்துவிதமான வாதைகளை அனுப்பினார். அவற்றில் ஒன்றுதான் ஆண் தலைப்பேறுகளைக் கொல்லுதல். ஆண்டவரின் தூதர் எகிப்து நாட்டினரின் வீடுகளைக் கடந்துசெல்கிறபோது இரத்தம் தெளிக்கப்படாத வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளைக் கொன்றுபோடுகிறார். அதேநேரத்தில் ஏற்கனவே இரத்தம் தெளிக்கப்பட்டு இருந்த இஸ்ரயேலரின் வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளை அவர் கொல்லாமல் கடந்துசெல்கிறார். இதன் பொருட்டுதான் ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்ற ஒரு நிலை உருவாகிறது. இதனை விடுதலைப் பயண நூல் 13:2 ல் நாம் வாசிக்கின்றோம், “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”.

மோசேயின் சட்டப்படி ஒரு தாய் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் போது ஏழு நாள் விலக்கு இருந்து எட்டாம் நாள் அக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து உதிரத் தீட்டு முடியும்வரை 33 நாள்களும் தூய பொருள்களைத் தொடாமல் இருக்க வேண்டும். பெற்றெடுக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், இரண்டு வாரம் விலக்கு இருப்பதுடன் பின்பு 66 நாள்கள் உதிரத்தீட்டு முடியும்வரை தூய்மையான எதையும் தொடமல் இருக்க வேண்டும்.

காலக்கெடு முடிந்த பிறகு, ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் கொடுக்க வேண்டும். அவர் அதனை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து காணிக்கையாக்கி குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் இரத்தத் தீட்டை நீக்குவார். ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதவர்கள் இரண்டு காட்டுப் புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளைக் கொண்டு வந்து ஒன்றை எரிபலியாகவும், மற்றதை பாவம் போக்கும் பலியாகவும் கொடுப்பது வழக்கம் (லேவி 12:2-8).
மேலும் மனிதரானாலும், விலங்குகளானாலும் தலைப் பேறானவை அனைத்தும் ஆண்டவருக்கே உரியது. ஆயினும் மனிதரில் தலைப் பேறானவைகளை ஈடு கொடுத்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதை விதிமுறைகளுள் ஒன்று (எண் 18:15)

அதன்படி மோசேயின் சட்டத்தை நிறைவேற்ற, இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க, மற்றும் தானும் தூய்மையாகும் பொருட்டு அன்னை மரியா ஆலயத்திற்குச் சென்றார்.
இயேசு தலைப்பேறு என்பதனால் மரியாவும் யோசேப்பும் அவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஆண்டவரின் கட்டளையை, மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுக்கிறார்கள். மோசேயின் சட்டப்படி, குழந்தையை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் நாளில் செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம்போக்கும் பலியாகவும் குருவிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால் மரியாவும் ஜோசேப்பும் ஆட்டுக்குட்டியை கொண்டுவர வசதி இல்லாததால் இரு மாடப்புறாக்களைக் கொடுத்து மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். இயேசு இறைமகன். அப்படியிருந்தாலும் அவருடைய பெற்றோர்கள் மோசே இட்ட கட்டளையை நிறைவேற்றி, எல்லாருக்கும் முன்மாதிரியாய் விளங்குகிறார்கள்.

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கும்போது அங்கே சிமியோனும் அன்னாவும் வந்து அவரைக் கண்டுகொள்கிறார்கள்.

இவ்விழா ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை முதலாம் ஜஸ்டின் என்பவரால் திருச்சபையில் சேர்க்கப்பட்டது என்பதை மேலே பார்த்தோம். ஆனால் எட்டாம் நூற்றாண்டில்தான் இவ்விழா இன்னும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை முதலாம் செர்கியுஸ் என்பவர்தான் குருக்களும் இறைமக்களும் கையில் மெழுகுதிரிகளை ஏந்தி, பவனியாகச் செல்லவேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். அதனால்தான் இவ்விழா மெழுகுதிரி திருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. நம்மை முழுமையாய் ஆண்டவருக்கு அர்பணித்தல்

இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, அவர் தன்னையே முழுமையாய் ஆண்டவர் பணிக்காய் அர்ப்பணிக்கின்றார். அதனால் அவர் மரியாவும் யோசேப்பும் காணாமல்போன தன்னை மூன்று நாட்களுக்குப் பிறகு கோவிலில் கண்டுபிடிக்கும்போது, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என்னுடைய தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் (லூக் 2:49). அதைப் போன்று “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு என்கிறார் (யோவா 4:34). இவ்வாறு அவர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு இறைவனின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என உணர்ந்து செயல்படுகிறார். திருமுழுக்கின்போது முற்றிலுமாக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாம், கடவுளுக்காக நம்மையே நாம் அர்ப்பணிக்கிறோமா? அல்லது கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒருமுறை மாவீரன் நெப்போலியன் படையில் இருந்த படைவீரன் ஒருவன் மார்பில் குண்டடிபட்டுக் கிடந்தான். அப்போது அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவனுக்கு மயக்கமருந்து கொடுக்காமலே சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவன் வலிகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது மருத்துவர் ஒருவர் அவனுக்கு நெஞ்சுக்கு நேராக கத்தியை இறக்கி, மார்பில் பாய்ந்த தோட்டாவை எடுக்க முற்பட்டபோது, அவன் அந்த மருத்துவரைப் பார்த்துச் சொன்னான், “தயவுசெய்து கத்தியை மெதுவாக இறக்குங்கள், ஏனெனில் என்னுடைய நெஞ்சில் மாவீரன் நெப்போலியன் இருக்கிறான். நீங்கள் வேகமாக கத்தியை இறக்க அது, அவனுக்கு வலிக்கப்போகிறது”. அவன் நெப்போலியனுக்கு எவ்வளவு உண்மையுள்ளவனாக, தன்னையே அவனுக்காக அர்ப்பணித்தவனாக இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்திருப்பான் என நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சாதாரண படைவீரனே தன்னுடைய தலைவனுக்கு இவ்வளவு பிரமாணிக்கமாக இருக்கும்போது, ஆண்டவர் இயேசுவால் விலைகொடுத்து மீட்கப்பட்ட நாம் எந்தளவுக்கு அர்ப்பண உணர்வோடு இருக்கவேண்டும் என நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

பவுலடியார் சொல்வார், “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று (கலா 2:20). ஆம், ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் நமது மனநிலையும் இதுவாகத்தான் இருக்கவேண்டும். நாம் ஆண்டவருக்காக நம்மையே முழுவதும் அர்ப்பணிப்போம். அவராகவே வாழ்வோம்.

2. எல்லா மக்களுக்கும் ஒளியாய் இருத்தல்

கோவிலில் இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது அங்கே இருந்த சிமியோன், குழந்தையைக் கையில் ஏந்தி, ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு, “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி” என்பார். ஆம், இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல பிற இனத்தாருக்கும் ஒளியாகின்றார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அந்த உன்னதமான ஒளியைப் பெற்றுக்கொண்டு நாமும் இந்த உலகிற்கு ஒளியாகவேண்டும்.

நாம் எப்படி ஒளியாவது என்பது நமது அடுத்த கேள்வியாக இருக்கின்றது. இக்கேள்விக்கான பதிலை நாம் எசாயா புத்தகம் 58 ஆம் அதிகாரத்தில் கண்டுகொள்ளலாம். “பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” ஆகவே, நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நற்செயல்களின் வழியாக ஆண்டவர் இயேசுவைப் போன்று இந்த உலகிற்கும் எல்லா மக்களுக்கும் ஒளியாவோம்.

3. துன்பங்களை ஏற்றுக்கொள்ளல்

இவ்விழா நமக்கு உணத்தும் மிக முக்கியமான செய்தி, துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும். இயேசு இறைப்பணிக்காக தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்ட பிறகு அவர் பல்வேறு துன்பங்களை, அவமானங்களை ஏன் சிலுவைச் சாவையே சந்தித்தார். அன்னை மரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நற்செய்தியில் சிமியோன் அன்னை மரியாவைப் பார்த்து, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளதையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்கிறார் (லூக் 2: 35). உள்ளத்தை வாள் ஊடுருவிப்பாயும் என்பது அன்னை மரியாள் இறைப்பணிக்காக எதிர்க்கொள்ள இருக்கும் பிரச்சனைகளை, சவால்களை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. இதைதான் திருத்தந்தை ஆறாம் பவுல், “ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட போது சிமியோன் உரைத்த இறைவாக்கு, கல்வாரி மலையில் நிறைவேறுகிறது” என்கிறார். ஆம், அன்னை மரியாள் இறைப்பணிக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்த பிறகு அவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.

ஆகையால், இறைப்பணி செய்ய நாம் நம்மையே அர்ப்பணித்திருக்கிறோம் என்றால் இன்னல்களையும் இடர்களையும் சவால்களையும் ஆண்டவர் இயேசுவை போன்று, அன்னை மரியாவைப் போன்று எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் நாம், இயேசுவைப் போன்று இறைப்பணிக்காக நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், எதிர்வரும் துன்பங்களை சவால்களை எதிர்கொள்வோம். எல்லா மக்களுக்கும் ஒளியாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image