புனித அலெக்சாந்திரியா நகர சிரில்(திருச்சபையின் தூண்; ஆயர், மறைவல்லுநர்)
திருவிழா: பிப்ரவரி 9 பிறப்பு: 376 இறப்பு: 444
ஏற்கும் சபை/சமயம்: கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்கம், லூதரனியம் பாதுகாவல்: அலெக்சாந்திரியா
அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில் (கி.பி.376 - 444), புனித அத்தனாசியுசுக்குப் பின் அலெக்சாந்திரியா நகரத்தின் ஆயரானார். இவரின் பதவி ஏற்பின் போது உரோமைப் பேரரசில் இந்நகரம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. இவரின் எழுத்துகள் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தியலில் ஏற்பட்ட சிக்கல்கள் பலவற்றை தீர்க்க உதவியது.
கிபி 431இல் கூடிய எபேசு பொதுச்சங்கத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இச்சங்கமே கிறிஸ்து இறைத் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்ட ஓரே ஆள் எனவும் மரியா கடவுளும் மனிதருமான இயேசுவைப்பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார் எனவும் அறிக்கையிட்டது. இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இரு "ஆள்கள்" உண்டு என்னும் நெஸ்தோரியன் என்னும் ஆயரின் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக நெஸ்தோரியன் தனது ஆயர் பதவியை இழந்தார். இச்சங்கத்தில் இவர் ஆற்றிய பணிகளால், கிறித்தவர்களிடையே இவருக்கு திருச்சபையின் தூண் எனவும், திருச்சபைத் தந்தையர்களின் முத்திரை எனவும் பெயர் வழங்கப்படலாயிற்று.
புனித சிரில், திருச்சபைத் தந்தையர்களில் ஒருவராகவும், திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
இவரின் முன் கோபம், இவரின் எதிரிகள் இவரை சாட காரணமாயிருந்தது. உரோமைப் பேரரசன் இரண்டாம் தியோட்டோசியுஸ், இவரை விவிலியத்தில் வரும் பாரவோன் மன்னனைப்போல தலை கணம் பிடித்தவர் என சாடினான்.
எதிர்-திருத்தந்தை நோவேடியனின் ஆதரவாளர்களையும், யூதர்களையும் அலெக்சாந்திரியா நகரில் இருந்து வெளியேற்றியதில் இவருக்கு பங்கு உண்டு எனவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்கு தகுந்த சான்று இல்லாததால் இதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை
.=========
பிப்ரவரி 9
புனித அப்போலோனியா (கி.பி.249)
புனித அப்போலோனியா (கி.பி.249)
கன்னியர்/ மறை சாட்சி :
பிறப்பு : இரண்டாம் நூற்றாண்டு
இறப்பு : 249
அலெக்சாண்ட்ரியா, எகிப்து
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
காப்டிக் மரபுவழி திருச்சபை
(Coptic Orthodox Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches) பாதுகாவல் :
பல் மருத்துவர்கள் (Dentists)
பல் சம்பந்தமான பிரச்சினைகள் (Tooth problems)
அச்டேர்போஸ், பெல்ஜியம் (Achterbos, Belgium)
அரிக்கியா, இத்தாலி (Ariccia, Italy)
குக்காரோ மோன்ஃபெர்ரடோ, இத்தாலி (Cuccaro Monferrato, Italy)
நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 12
புனிதர் அபொல்லோனியா, அலெக்சாண்ட்ரியா (Alexandria) நாட்டில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகத்தின்போது உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ கன்னியர்களில் ஒருவர் ஆவார். புராணங்களின்படி, துன்புறுத்தலின்போது அவருடைய பற்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. இதன்காரணமாக பல் மருத்துவம், பல் நோய்களால் துன்புறுவோர் மற்றும் இன்னபிற பல் பிரச்சினைகளால் துன்புருவோருக்கு இவர் பாதுகாவலராவார்.
கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, பேரரசன் பிலிப் (Emperor Philip the Arab) ஆட்சியின் கடைசி ஆண்டில், ஒரு அலெக்சாண்ட்ரிய கவிஞர், அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகங்கள் உச்சத்தை எட்டும் என்றும் நாடே இரத்தக்களரியாகும் என்றும் தீர்க்கதரிசனம் சொன்னார். அதன்படியே கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தன. அதனை ஆட்சியாளர்களாலேயே அடக்க இயலாமல் போனது.
அலெக்சான்ரியாவின் ஆயர் "டயோனிஸிஸ்" (Dionysius, Bishop of Alexandria) அந்தியோக்கியாவின் ஆயர் "பாபியசுக்கு" (Fabius, Bishop of Antioch) எழுதிய கடிதமொன்றில் தமது மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன என்பவற்றை விளக்கி எழுதியிருந்தார். பெண் திருத்தொண்டரான அபொல்லோனியாவை பிடித்து பெண்ணென்றும் பாராமல் அடித்து துன்புறுத்தினர். மீண்டும் மீண்டும் அடித்து அவரது பற்கள் முழுவதையும் உடைத்துப் பிடுங்கினர். அவரையும் இன்னும் பல கன்னியரையும் நகருக்கு வெளியே அமைத்திருந்த விறகுக் குவியலினருகே இழுத்துச் சென்றனர். விறகுக் குவியலுக்கு தீ மூட்டினர். அவர்கள் சொல்லும் தூஷண வார்த்தைகளை சொல்லச் சொல்லி வற்புறுத்தினர். கிறிஸ்துவுக்கு எதிராக வசை பேசவோ அல்லது அவர்களது தெய்வங்களை போற்றி பிரார்த்தனை செய்யவோ வற்புறுத்தினர். அல்லது உயிருடன் தீக்கிரையாக்குவதாக பயமுறுத்தினர். அபொல்லோனியாவின் வேண்டுதலுக்கிணங்க அவரை சிறிதே விடுவித்தனர். அபொல்லோனியா கண்ணிமைக்கும் நேரத்தில் கொளுந்து விட்டெரியும் தீக்குள் குதித்து உயிருடன் எரிந்து உயிர்விட்டார்.
சிந்தனை : பாவத்தை விலக்க நம்மால் ஆனதையெல்லாம், செய்ய வேண்டும்.
செபம் : ஆண்டவரே, உலகத்திலே மிகப் பெரும் தீமை பாவமே, அதை நாங்கள் விலக்க துணைபுரியும்.
பிப்ரவரி 9
✠ புனிதர் மிக்வெல் கோர்டேரோ✠
✠ புனிதர் மிக்வெல் கோர்டேரோ✠ (St. Miguel Cordeiro)
என் அருள் உனக்குப் போதும்:வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் (2 கோரி 12:9)
ஈக்குவேடார் நாட்டின் முதல் புனிதரான மிக்வெல், குவன்கா எனும் இடத்தில் 1854, நவம்பர் ஏழாம் தேதி பிறந்தார். பிரான்சிஸ்கோ என்பது இவரின் இயற்பெயராகும். சமூகத்தில் தலைநிமிர்ந்து நின்ற பெற்றோருக்குப் பிறந்த இவர் ஐந்து வயது வரை நிற்க முடியாதபடி ஊனமாக இருந்தார். மெல்ல மெல்ல கால் தாங்கி நடக்க ஆரம்பித்தார் .புனித தெலசாலின்,கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையினர் நடத்திய பள்ளியில் 1864 ஆம் ஆண்டு சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் . இச்சபையினர் அப்போதுதான் ஈக்குவேடார் நாட்டிற்கு வந்து பணியைத் தொடங்கி இருந்தார்கள்.
படிப்பில் கவனம் செலுத்தியதுடன் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ்ந்தார் .தமது 13-ஆம் வயதில், குருத்துவப் பயிற்சி பெற 1868, மார்ச் 24-ஆம் தேதி கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் சபையில் சேர்ந்தார். சபையில் சேர்ந்த பிறகு தமது பெயரை மிக்வெல் என்று மாற்றிக்கொண்டார். ஆசிரியப் பணியைத் தமது பணியின் இலக்காகக் கொண்டு பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து, எல் செபோலார் என்னும் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமது சிறப்பான அனுபவங்களுடன் அப்பள்ளியில் 32 ஆண்டுகள் சேவையாற்றினார். இனிமையாகப் பழகும் குணத்தால் எல்லாருக்கும் நண்பரானார். "ஆண்டவருக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் வேலை செய்யுங்கள் " என்று கூறி எல்லாரையும் ஊக்கப்படுத்தினார் .தமது 17 ஆம் வயதிலேயே மாணவர்களுக்காகத் தாமே பாடப் புத்தகங்களை எழுதிக் தயார் செய்தார் .இவர் எழுதிய சில பாடங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நாடு முழுமைக்கும் பயன்படுத்தியது .பாடம் நடத்தும் முறை, விளையாட்டுகள், நாடகங்கள், தியான உரைகள் மற்றும் எழுச்சியூட்டும் எழுத்துக்களால், எல்லாரையும் ஈர்த்தார்.
மறைக்கல்வி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் மிக்வெல் அதிக ஆனந்தம் அடைந்தார் .அதிலும் முதல் முதலாக இறை உணவு பெற இருக்கும் மாணவ, மாணவிகளைப் பயிற்றுவிக்கும்போது. தன்னையே மறந்து இறைவனின் பிரசன்னத்திற்கு வழிநடத்துவார். இவருடைய காலத்தில் திருச்சபை மற்றும் குருக்களுக்கு எதிராகச் சிலர் கிளர்ந்தெழுந்து கொலைசெய்தும், ஆலயங்களைத் தீக்கிரையாக்கியும் கொடூர தாண்டவம் ஆடினார். அப்போது அவர்களின் கையிலிருந்து நற்கருணையைக் காப்பாற்ற அதனை எடுத்துக்கொண்டு ஊனமான காலுடன் எட்டு கிலோமீட்டர் நடந்தே சென்றார்.
நவதுறவிகளுக்குப் பயிற்சியாளராக 1896- 1905 வரை இருந்த மிக்வெல்,1907-ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டார் .அங்கே ஏற்கனவே இச்சபையினர் பணி செய்துகொண்டு இருந்தார்கள் . ஜப்பான் சென்று சபையின் பயன்பாட்டிற்குத் தேவையான எழுத்துக் கருவூலங்களை பிரெஞ்சு மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தார்.
ஸ்பெயினில் பார்சிலோனா அருகில் இருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிக்வெல் தொடர்ந்த வேலைப் பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நிமோனியா காய்ச்சலும் சேர்ந்துகொள்ள உடல் நிலை மேலும் மோசமானது. கடைசியில் 1910, பிப்ரவரி ஒன்பதாம் தேதி இறைவனடி சேர்ந்தார் .திருத்தந்தை ஆறாம் பவுல் 1977, அக்டோபர் 30 அன்று அருளாளர் பட்டம் வழங்கினார் .திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1984,அக்டோபர் 21-இல் புனித நிலைக்கு இவரை உயர்த்தினார் .சமயம் சார்ந்து மட்டுமல்ல; ஈக்குவேடார் நாட்டின் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார் மிக்வெல்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள நாம் உழைக்கத் தயாரானால் குறையின்றி அவர்களுக்கு குதூகலிப்பார்கள்.