பிப்ரவரி 15 புனிதர் கொலொம்பியெர் நகர் கிளாடி
புனிதர் கொலொம்பியெர் நகர் கிளாடி
(St. Claude de la Colombiere)
அருட்பணியாளர், குரு, பாவமன்னிப்பாளர் :
(Religious, Priest and Confessor)
பிறப்பு : 2 ஃபெப்ரவரி 1641
புனித சிம்போரியன்-டி'ஓஸோன், டௌஃபின், ஃபிரான்ஸ் அரசு
(Saint-Symphorien-d'Ozon, Dauphiné, Kingdom of France)
இறப்பு : 15 ஃபெப்ரவரி 1682 (வயது 41)
பாரே-லி-மோனியல், பர்கண்டி, ஃபிரான்ஸ் அரசு
(Paray-le-Monial, Duchy of Burgundy, Kingdom of France)
ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை
முக்திபேறு பட்டம் : 16 ஜூன் 1929
திருத்தந்தை பதினோறாம் பயஸ் (Pope Pius XI)
புனிதர் பட்டம் : 21 மே 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
முக்கிய திருத்தலம் : இயேசு தேவாலயம், பாரே-லெ-மோனியல், சவோனே-ஏட்-லோய்ர், ஃபிரான்ஸ்
(Jesuit Church, Paray-le-Monial, Saône-et-Loire, France)
பாதுகாவல் : இயேசுவின் திருஇருதய பக்தி
(Devotion to the Sacred Heart of Jesus)
நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 15
இன்றைய புனிதராக நினைவுகூறப்படும் புனிதர் "கிளாடி டி லா கொலொம்பியெர்" இயேசு சபையைச் சார்ந்தவர் என்பதால், இயேசு சபையைச் சேர்ந்த துறவியர் மற்றும் குருக்களுக்கு இன்றைய தினம் ஒரு விஷேச தினமாகும். கிளாடி தமது சிநேகிதியும் ஆன்மீக துணையுமான "புனிதர் மார்கரெட் மேரி அலகோக்யூ'வுடன்" (Saint Margaret Mary Alacoque) இணைந்து இயேசுவின் திருஇருதய பக்தியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆகவே, இயேசுவின் திருஇருதயத்தின்பால் தீவிர பக்தி கொண்டுள்ளோர்க்கும் இன்றைய தினம் ஒரு விஷேட தினமாகும்.
இவர் ஒரு இயேசு சபை குருவும், அருட்பணியாளரும், பாவமன்னிப்பாளரும், துறவறம் சார்ந்த எழுத்தாளருமாவார். 1641ல் "டௌஃபின்" (Province of Dauphiné) பிராந்தியத்தில் பிறந்த கிளாடியின் தந்தை "பெர்ட்ரான்ட்" (Bertrand) ஒரு பத்திர சான்றளிக்கும் அலுவலர் ஆவார். தாயாரின் பெயர், "மார்கரெட்" (Margaret) ஆகும். இவர்களது குடும்பம் விரைவிலேயே "வியன்னா"வுக்கு (Vienne) சென்றது. அங்கே கிளாடி தமது ஆரம்ப கல்வியை தொடங்கினார்.
1658ல், தமது பதினேழாம் வயதில் கிளாடி "அவிக்னான்" (Avignon) என்ற இடத்திலுள்ள இயேசு சபையின் துறவறப் புகுநிலையில் இணைந்தார். துறவறப் புகுநிலை கல்வியை இரண்டு வருடங்களில் முடித்த கிளாடி, உயர் கல்வியையும் அதே நகரிலேயே தொடங்கினார். அதன் பின்னர், தமது பிரதிநிதித்துவத்தை அதே கல்லூரியில் இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியனவற்றை கற்பிப்பதில் ஈடுபடுத்தினார்.
"கிளேர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் இறையியல் கற்பதற்காக 1666ல் கிளாடி பாரிஸ் நகர் அனுப்பப்பட்டார். அங்கே இறையியல் படிப்பை பூர்த்தி செய்ததும் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் முதன்முதலாக "லியான்" (Lyon) நகரிலுள்ள இவரது முன்னாள் பள்ளியில் கற்பிக்க பணி நியமனம் பெற்றார். அதன்பின்னர், அவர் இயேசு சபையின் மறை பரப்பும் குழுவினருடன் இணைய அறிவுறுத்தப்பட்டார். அங்கேதான் அவரது பிரசங்கிக்கும் திறனும் வலிமையையும் வெளிப்பட்டது.
1676ல் கிளாடி இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தது போலவே இங்கேயும் திறமையான மறை போதகராகவும் பாவமன்னிப்பாளராகவும் செயல்பட்டார். கிளாடியின் வைராக்கியமான பணிபுரியும் திறனும் இங்கிலாந்தின் பருவநிலையும் சேர்ந்து கிளாடியின் உடல்நிலைய மோசமாக்கின. அவர் மிகவும் பலவீனமடைந்ததுடன் சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக, அவரது பணிகள் இங்கிலாந்து நாட்டில் முடிவுக்கு வந்தன.
1678 நவம்பர் மாதம், ஃபிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்ல அழைக்கும் உத்தரவுக்காக காத்திருந்த வேளையில், சட்டென அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக திருத்தந்தை சார்பாக சதி புரிவதாக குற்றம் சாட்டப்பட்டார். கத்தோலிக்க எதிர்ப்பு வெறியார்களால் பிடிக்கப்பட்டு கடுமையான நிலைமைகளில் சிறைப்படுத்தப்பட்டார். இதன்காரணமாக இவரது ஆரோக்கியம் மேலும் சீர்கெட்டது.
ஃபிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயிஸின் (King of France, Louis XIV) தலையீட்டால் மரண தண்டனையின்றி தப்பிய கிளாடி, உடனடியாக 1679ல் ஃபிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டார். சிறை வாழ்க்கையின் கோர பிடியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கிளாடி ஃபிரான்ஸ் திரும்பினார்.
தமது வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்களை "லியான்" (Lyon) நகரில் செலவிட்ட கிளாடி இரத்த ஒழுக்கு (hemorrage) காரணமாக 15 ஃபெப்ரவரி 1682ல் மரணமடைந்தார்.
திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்புக்கும் இரக்கத்துக்கும் மிக அழகாக முக்கியத்துவம் தருபவர் என்பதாலும், கிளாடி ஒரு சக இயேசு சபையினராகவும், இயேசுவின் திருஇருதய பக்தியை தீவிரமாக பரப்பியவர் என்பதாலும் கிளாடி அவருக்கு மிகவும் விசேடமானவர் எனலாம். மற்றும், கடவுளின் அன்புக்கும் இரக்கத்துக்கும் முக்கியத்துவம் தருவது இவ்விருவரின் சிறப்புப் பண்பாகும்.
|