“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் விழாக் கொண்டாடும் சிமியோன், இயேசு பிறப்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.மு. 8 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் சகோதரரான கிளயோப்பாவிற்கும், இயேசுவின் தாயான மரியாவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தார். அப்படிப் பார்க்கும்போது இவரை இயேசுவின் சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எம்மாவு நோக்கிச் சென்ற இருவரில் ஒருவர் எனவும், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நிகந்த பெந்தகோஸ்தே நிகழ்வில் இவரும் இருந்தார் என்று நம்பப்படுகின்றது.
எருசலேமின் முதல் ஆயரான சின்ன யாக்கோபு கொல்லப்பட்டபோது, இவர் யூதர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார். சின்ன யாக்கோபின் மறைவிற்குப் பிறகு எருசலேமின் ஆயர் பொறுப்பானது காலியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் எருசலேமின் ஆயராக யாரை நியமிக்கலாம் என்று திருத்தூதர்கள் கலந்தாலோசித்தபோது சிமியோனின் பெயரையே பரிந்துரைத்தார்கள். திருதூதர்கள் ஒருமனதாக சிமியோனைத் தேர்ந்தெடுத்து ஆயர் பதவியில் அமர்த்தியபோது, அவர் சிறப்பாகப் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையில் உரோமை அரசாங்கம் எருசலேமின்மீது படையெடுத்து வந்து, அதனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டியது. இச்செய்தி ஆயர் சிமியோனுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. எனவே அவர் இறைமக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றுக்கு அப்பால் இருக்கின்ற பெல்லா என்று பகுதியில் போய் தங்கினார். பிரச்சனைகளெல்லாம் ஓய்ந்தபிறகு, மீண்டுமாக அவர் இறைமக்களை அழைத்துகொண்டு வந்து எருசலேமில் குடிபெயர்ந்தார்.
சிலகாலம் எல்லாமும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதது. டிரேஜனின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் மீண்டுமாகத் தலைதூக்கத் தொடங்கியது. அவன் தாவீதின் வழிவந்தவர்களை கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அப்போது ஆயர் சிமியோன், “நான் தாவீதின் வழிவந்தவர் மட்டும் கிடையாது, கிறிஸ்தவரும்கூட” என்று மிகத் துணிச்சலாகச் சொன்னார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அரசன் அவரை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டான். அப்போது அவருக்கு வயது 120. தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராத வசுவாசத்தோடு சிமியோன் இருப்பதைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய சிமியோனின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூய சிமியோனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு தன்னுடைய முதிர்ந்த வயதிலும் ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களைத் தாங்கிக்கொண்டார் என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்முடைய விசுவாச வாழ்வில் வரும் இடர்பாடுகளையும் துன்பங்களையும் எத்தகைய மனநிலையோடு அணுகுகிறோம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்முடைய விசுவாசம் ஆழமானதாக இல்லாமல், மேலோட்டமானதாக, அடித்தளம் இல்லாததாக இருப்பதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் இன்று விழாக் கொண்டாடும் தூய சிமியோனை நம் கண்முன்னே வைத்து, அவரைப் போன்று விசுவாசத்தில் வேரூன்றி இருப்பதுதான் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
இராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞன் ஒருவன், விடுமுறைக்கு தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது, முன்பு இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தனது தாத்தாவிடம், பணித்தளத்தில் தான் பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் சொல்லி கதறி அழுதான். அப்போது அவர் அவரிடம், “சீ... சுற்றிலும் உப்புத் தண்ணீ!! என்று கடல் வாழ் உயிரினங்கள் கடலை வெறுத்து வெளியேறாமல் உள்ளேயே நிறைவாய் வாழ்ந்து காட்டுவது போல, சுற்றிலும் உள்ள துன்பங்களை ஏற்று வாழ்ந்து காட்டுவதே உத்தமம்” என்று புத்திமதி சொன்னார். ஆம், நமது (விசுவாச) வாழ்வில் வரும் துன்பங்களை வெறுத்து ஒதுக்காமல், அவை நம்மை புடமிடக்கூடியவை என்று நாம் உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், வாழ்வில் கவலைக்குக் வழியே இல்லை.
ஆகவே, தூய சிமியோனின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு, ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
புனித கான்ஸ்டான்டியா ரோமையை ஆட்சி செய்த மன்னர் கான்ஸ்டான்டைனுடைய மகள். இம்மன்னரின் காலத்தில்தான் கி.பி.313ம் ஆண்டில் கிறிஸ்தவமறை சட்டபூர்வமாக்கப்பட்டது. கான்ஸ்டாடியாவிற்கு ஏற்பட்ட நோய் தோல் நோய் என்று கருதப்பட்டு தனிமையில் வாழ விடப்பட்டார். ஆயினும் இவர் தந்தை இவரிடம் தன்னுடைய அரசை அச்சுறுத்தும் காட்டுமிராண்டி படைகளை அழித்தொழிக்க அனுப்பட்ட ஜெனரல் காலிசினஸ்-ஐ மணம் முடித்து வைப்பதாக உறுதியளித்தார். ஒரு பயங்கர எதிரியை சந்தித்த காலிசினஸ், தான் அவ்வெதிரியை வென்றால் தன் வாழ்வை கடவுளுக்கு அளிப்பதாக உறுதி கொண்டான்.
அவன் செபம் கேட்கப்பட்டது. கிறிஸ்தவ மறைக்கு திரும்பிய அவன் ரோமை நாட்டிற்கு திரும்பி தன்னுடைய மணப்பெண்ணை கேட்க வந்தான். இதற்கிடையில் புனித ஆஞ்சேசம்மாளிடம் வேண்டி நோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்ற கான்ஸ்டண்டியா தன் கன்னிமையை இறைவனுக்கு அளிக்க முடிவ செய்தாள். கான்ஸ்டான்டியா தன்னுடைய வாழ்வை முழுவதையும் அரண்மனையிலேயே கழித்தாள். தன் சொத்து முழுவதையும் தன் பாதுகாவலர்களும் பக்தியான கிறிஸ்தவர்களுமான ஜாண் மற்றும் பவுலுக்கு எழுதி வைத்தாள். ஒரு கால் நூற்றாண்டு கழிந்த பின் கான்ஸ்டான்டினாவின் உறவினர் ஜீலியன் என்பவன் பிற தெய்வ வழிபாட்டை புகுத்தினதால் அதன் முதல்படியாக ஜாண் மற்றும் பவுலை அவர்களின் கிறிஸ்தவ மறையை எதிர்த்து மறைவாகக் கொலை செய்தான். பின்னர் கான்ஸ்டான்டியாவையும் கொலை செய்தான்;