*ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவி, யாத்திரீகர் :
(Franciscan tertiary, pilgrim and hermit)
*பிறப்பு : 1290
கலேண்டாஸ்கோ நகர், தூய ரோம பேரரசு
(Commune of Calendasco, Holy Roman Empire)
*இறப்பு : ஃபெப்ரவரி 19, 1351
நோடோ, சிசிலி அரசு
(Noto, Kingdom of Sicily)
*புனிதர் பட்டம் : ஜூன் 2, 1625
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)
*முக்கிய திருத்தலங்கள் : புனித நிக்கோலஸ் பேராலயம், நோடோ,
சிராகஸ் பிராந்தியம், இத்தாலி
(Cathedral of St. Nicholas, Noto, Province of Syracuse, Italy)
*பாதுகாவல் : குடலிறக்க நோய்கள் குணமாதல், கலேண்டாஸ்கோ, நோடோ
(Cure of Hernias, Calendasco and Noto)
புனிதர் கான்ராட், செய்த பிழைக்கு மனம் வருந்தும் - வருத்தம் தெரிவிக்கும், "புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை துறவற சபையின் (Third Order of St. Francis) இத்தாலி நாட்டின் துறவியாவார்.
"கொர்ராடோ கான்ஃபலோனியேரி" (Corrado Confalonieri) எனும் இயற்பெயர் கொண்ட இவர், நகரின் முக்கிய பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தம்மைப் போன்றே பிரபுக்கள் குடும்பமொன்றில் பிறந்த இளம் பெண்ணான "எஃப்ரோஸின்" (Ephrosyne) என்பவரை தமது இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். எல்லா இளைஞர்களைப் போலவே வாழ்க்கை இனிமையாக சென்றது.
ஒருநாள் தமது வீட்டின் அதிகார வரம்புக்குள்ளேயே வழக்கமான பொழுதுபோக்கு அம்சமாக இவர் விளையாடும் வேட்டையின்போது, புதர்களினூடே இருக்கும் ஜீவராசிகள் வெளிவரும் என்பதற்காக, தமக்கு துணையாக வந்த பணியாளர்களிடம் பக்கத்திலுள்ள புதர்களுக்கு தீமூட்ட சொன்னார். எதிர்பாராவிதமாக காற்று திசை மாறி வீசவே, சிறு தீ பக்கத்திலுள்ள வயல்வெளிகளுக்கு பரவி, பின்னர் அருகாமையிலுள்ள காட்டில் பரவியது. அங்கிருந்து உடனேயே தப்பி ஓடினார் கொர்ராடோ.
ஒன்றுமறியா அப்பாவியான விவசாயி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டார். பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
கொர்ராடோ பகிரங்கமாக தமது தவறை ஒப்புக்கொண்டார். அப்பாவி விவசாயியின் உயிரைக் காப்பாற்றினார். ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்டஈடாக அவரது சொத்துக்கள் அனைத்தையும் நகர நிர்வாகம் பறிமுதல் செய்துகொண்டது.
திடீரென ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டதாலும், கொர்ராடோவின் கோழைத்தனத்துக்கு ஈடு செய்யும் சுய தண்டனை முயற்சியாகவும் கொர்ராடோவும் அவரது மனைவியும் இந்நிகழ்வில் ஆண்டவரின் கைகளைக் கண்டனர். இதன் விளைவாக, 1315ம் ஆண்டு, கொர்ராடோவும் அவரது மனைவியும் பிரிய முடிவு செய்தனர்.
கொர்ராடோ மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் (Franciscan tertiaries) துறவியர் சபையில் இணைந்தார். "எஃப்ரோஸின்" "எளிய கிளாராவின் சபை" (Order of Poor Clares) எனும் பெண்களுக்கான துறவியர் இல்லத்தில் இணைந்து துறவியானார். தூய்மைக்கான கொர்ராடோ'வின் கீர்த்தி வேகமாக பரவியது. அவரைக் காண வரும் மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக அவரது தனிமை அழிக்கப்பட்டது. இதன் காரணமாக தமது யாத்திரையைத் தொடங்கினார். முதலில் ரோம் நகருக்கு சென்ற அவர், அங்கிருந்து புனித பூமிக்கும், மால்ட்டாவுக்கும் சென்றார். அதன் பிறகு சுமார் 1340ம் ஆண்டு, சிசிலியிலுள்ள ஒரு தொலைவான இடமான "பலெர்மோ'வுக்கு" (Palermo) சென்ற கொர்ராடோ, 11 வருடங்கள் தமக்காகவும் உலகத்துக்காகவும் செபத்தில் ஈடுபட்டிருந்தார்.
செபமும் தவமுமே அவரைச் சூழ்ந்திருந்த தூண்டுதல்களுக்கு பதில் என்பதை கண்டறிந்த கான்ராட், தாம் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக கூறியபடியே, 1351ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 19ம் தேதியன்று, சிலுவையாண்டவரின் முன்னே முழங்கால்படியிட்டு செபிக்கையில் மரணமடைந்தார். அவருடைய உடல், அவரது வேண்டுகோளின்படி, நகரிலுள்ள தூய நிக்கோலஸ் (Church of St. Nicholas) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
1. மனமாற்றம்
தூய கொன்ராட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக எந்தளவுக்கு மனம்வருந்தி, அதன்பின் மனம்திருந்தி வாழ்ந்துக் வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் நாம் செய்த தவற்றை உணர்ந்து, திருந்தி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று (லூக் 15: 7) ஆம், ஒரு பாவி மனமாறுவதால் வரக்கூடிய மகிழ்ச்சியை விடவும் இறைவனுக்கு வேறு என்ன பெரிய மகிழ்ச்சி வந்துவிடும்!.
கிரேக்க இலக்கியங்களில் வரக்கூடிய ஒரு நிகழ்வு. ஹெலன் என்ற இளவரசி ஒருவர் இருந்தார். அவர் பேரழகியாக இருந்தார். ஒரு சமயம் எதிரி நாட்டவர் ஹெலனுடைய நாட்டின்மீது போர்தொடுத்து, அவரை கைதியாக நாடு கடத்திச் சென்றனர். அங்கே அவர் தன்னிலை மறந்துபோய் விபச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் ஹெலனைக் காதலித்த இளைஞன், அவர் எங்கே இருக்கிறார் என்று தேடியலைந்து இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார். அந்த இளைஞர் ஹெலனிடம் சென்று, உண்மையில் அவர் யார், தான் யார் என்பதை எடுத்துச் சொன்னான். அப்போதுதான் ஹெல்னுக்குப் புரிந்தது உண்மையில் தான் யார்?, தான் ஏன் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று. உடனே அவர் தன்னுடைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, தன்னை அன்பு செய்த காதலனை மணந்துகொண்டார்.
ஹெலன் தன்னுடைய தவறை உணர்ந்ததும் மனம் திருந்தி வாழத் தொடங்கினார். அது போன்று நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து மனந்திருந்து வாழ்வதுதான் கடவுளுக்கு ஏற்ற செயலாகும்.
ஆகவே, தூய கொன்ராட்டின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று குற்றங்களை உணர்ந்து, உண்மையான மனமாற்றம் அடைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
------------
பிப்ரவரி 19
✠ புனிதர் பார்பட்டஸ் ✠ (St. Barbatus of Benevento)
✠ புனிதர் பார்பட்டஸ் ✠ (St. Barbatus of Benevento)
*இறப்பு : ஃபெப்ரவரி 19, 682
பெனவெண்ட்டோ, இத்தாலி (Benevento, Italy)
*பாதுகாவல் : பெனவெண்ட்டோ (Benevento)
புனிதர் பார்பட்டஸ், 663ம் ஆண்டு முதல், 682ம் ஆண்டு வரை "பெனவெண்ட்டோ" மறை மாவட்டத்தின் (Bishop of Benevento) ஆயராக பணியாற்றியவர் ஆவார். ஆயர் "ஹில்டேர்ப்ரண்ட்" (Hildebrand) என்பவருக்குப் பிறகு ஆயராக பதவியேற்ற இவர், "மோனோதெளிட்டஸ்" (Monothelites) என்பவ்ருக்கெதிராக திருத்தந்தை அகதோ"வால் (Pope Agatho) 680 மற்றும் 681ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மூன்றாம் கான்ஸ்டண்டினோபில் பேரவையில் (Third Council of Constantinople) உதவிகள் புரிய அழைக்கப்பட்டு அதில் பங்கேற்றார்.
பின்னாளில் எழுதப்பட்ட இவரது புனித வாழ்க்கையின்படி, இவர் கிறிஸ்தவ கல்வி கற்றார். சிறந்த வகையில் கிறிஸ்தவ நூல்களைக் கற்பதில் காலத்தை செலவிட்டார். விரைவிலேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், உள்ளூர் ஆயரால் மறை போதகராக நியமிக்கப்பட்டார்.
அக்காலத்தில், பெனவெண்ட்டோ நகர மக்கள் "பாகனிசம்" (Paganism) என்று சொல்லப்படும் பல தெய்வ வணக்கம் செலுத்தும் வழக்கம் கொண்டவர்களாயிருந்தனர். அவர்கள் தங்க விரியன் பாம்பு மற்றும் உள்ளூர் மரம் ஒன்றினை பூஜிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இவற்றை பார்பட்டஸ் தீவிரமாக எதிர்த்தார். உள்ளூர் "லொம்பார்ட்" (Lombard) இன இளவரசனான "முதலாம் ரோமுவால்ட்" (Romuald I) உட்பட இவ்வழக்கங்களில் ஈடுபட்டிருந்தனர். பார்பட்டஸ் தொடர்ந்து தமது மறை போதனைகளை செய்துகொண்டிருந்தார்.
நகர மக்களிடம், தாங்கள் இப்பழக்க வழக்கங்களை கைவிடவில்லையெனில், பெரும் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்றும், கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் காண்ஸ்டன்ஸ் (East Roman Emperor Constans II) மற்றும் அவரது இராணுவத்தினரால் துன்புருவீர்கள் என்றும் பார்பட்டஸ் எச்சரித்தார். அவர் தீர்க்கதரிசனமாக முன்மொழிந்தது போலவே கிழக்கு ரோமப் பேரரசனின் படைகள் பெனவெண்ட்டோ நகரை முற்றுகையிட்டன. பல்வேறு கஷ்ட நஷ்டங்களால் துன்புற்ற மக்கள், பார்பட்டஸ் எதிர்த்த பழக்க வழக்கங்கள் அத்தனையையும் துறந்தனர். அவர்கள் பூஜித்த உள்ளூர் மரத்தை பார்பட்டஸ் வெட்டி வீழ்த்தினார். தங்க விரியன் பாம்பினை தீயிலிட்டு உருக்கினார். பின்னர், பார்பட்டஸ் முன்மொழிந்தபடியே "காண்ஸ்டன்ஸ்" படைகள் தோல்வியுற்று பின்வாங்கின.
பெனவெண்ட்டோ நகர ஆயராக இருந்த "ஹில்டேப்ரென்ட்" (Hildebrand) "காண்ஸ்டன்ஸ்" படைகளின் முற்றுகையின்போது மரணமடைந்தார். முற்றுகையாளர்கள் பின்வாங்கிச் சென்றதன் பின்னர், 633ம் ஆண்டு, மார்ச் மாதம், பத்தாம் நாள், பார்பட்டஸ் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக்கொண்ட பார்பட்டஸ், உள்ளூர் "லொம்பார்ட்" (Lombard) இன இளவரசனும் உள்ளூர் மக்களும் மறைத்து வைத்திருந்த "பாகனிச" (Paganism) பொருட்கள் அனைத்தையும் அழித்தார்.
திருத்தந்தை அகதோ"வால் (Pope Agatho) 680 மற்றும் 681ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட "மூன்றாம் கான்ஸ்டண்டினோபில் பேரவையில்" (Third Council of Constantinople) உதவிகள் புரிந்த இவர், பேரவை முடிந்த சிறிது காலத்திலேயே, திருத்தந்தை இரண்டாம் லியோவின் (Pope St. Leo II) ஆட்சி காலத்தில், தமது சுமார் எழுபது வயதில் மரணமடைந்தார்.