பிறப்பு : 1247, லவியானோ Laviano, இத்தாலி
இறப்பு : 22 பிப்ரவரி 1297, கொர்டோனா Cortona, இத்தாலி
புனிதர்பட்டம்: 1728 திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
இத்தாலியில் இருந்த சிறு விவசாயி ஒருவருக்கு 1247-ஆம் ஆண்டு பிறந்த அழகுப் பதுமை மார்க்கிரேட். இவருக்கு ஏழு வயது நடந்தபோது தாய் இறந்ததால் இவருடைய தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வளர்ப்புத் தாய்க்கும் மார்க்கிரேட்டுக்கும் இடையே நல்ல பாசமும், புரிதலும் தொடக்கம் முதலே உருவானதால் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்தது.
மார்க்கிரேட்டிற்கு 17 வயது ஆனபோது, அவர் காதல் வயப்பட்டார். காதலர்கள் தங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லாமல், தெரியாமல் ஓடிப்போய் மொந்தே புல்சியானோ என்ற இடத்தில் வாழ்ந்தார்கள். மார்க்கிரேட் ஒரு மகனுக்குத் தாயானார். விரைவாக தம்மைத் திருமணம் செய்யுமாறு மார்க்கிரேட் தன் காதலனை வற்புறுத்தினார். காதலனோ காலம் கடத்துவதையே வழக்கமாக்கினான். குடும்பத்தில் நிம்மதி இல்லாவிட்டாலும் தம்மை நாடிவரும் ஏழைகள் யாவருக்கும் மறுப்பு ஏதும் கூறாத உதவும் கரமாக மார்க்கிரேட் விளங்கினார். தூய வாழ்வு நோக்கிப் பயணம் தொடர ஆயத்தமானார்.
வேறு ஊருக்குப் பயணம் புறப்பட்ட மார்க்கிரேட்டின் கணவர் விபத்தில் இறந்தார். போக்கிடமற்ற அநாதையான மார்க்கிரேட் பெற்றோரைத் தேடி வந்தார். பெற்றோர் அவளை ஏற்க மறுத்தார்கள். “எங்கு செல்வது என்று தெரியாத குழப்பமான நிலையில் தம் உடலை விற்றுப் பிழைக்கலாமா என்று கூட நினைத்தேன்” என்று மார்க்கிரேட் கூறியுள்ளார். இருப்பினும் அந்த இக்கட்டான நிலையிலும் செபித்தார். கடவுளும் அவருக்கு வழிகாட்டினார். கோர்டோனாவில் இருந்த பிரான்சிஸ்கன் துறவியர் இல்லத்திற்குச் சென்று அடைக்கலம் வேண்டினார். அவர்கள் தாயையும், மகனையும்; ஏற்றுக் கொண்டார்கள். கடந்தகால பாவ வாழ்விற்காக மார்க்கிரேட் மனம் வருந்தினார். தமக்கான ஆன்ம வழிகாட்டி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். எப்போதும் இவர் தனிமையாய் இருப்பதைப் பார்த்து இரு பெண்கள் மார்க்கிரேட்டைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றார்கள். மேலும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிரான்சிஸ்கன் துறவு மடத்திற்குப் போகுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தீவிர நோன்பு இருந்து ஒறுத்தல் செய்து, தமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டி மூன்று ஆண்டுகள் அங்கேயே இருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புனித பிரான்சிசின் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவு வாழ்வை ஆரம்பித்தார். எளிமையைத் தமது அடையாளம் ஆக்கினார். புனித பிரான்சிஸ் போலவே பிச்சை எடுத்துச் சாப்பிட்டார். அச்சூழலிலும் ஏழைகளுக்கு மனநிறைவோடு உதவினார். நோயுற்ற ஏழைகளைப் பராமரித்தார். எந்நேரமும் ஆண்டவரையே நினைத்திருந்தார்.
அவர் ஒருமுறை செபித்துக் கொண்டிருந்தபோது காட்சி கொடுத்த ஆண்டவர் இயேசு, “ஏழைப் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு மார்க்கிரேட், “உம்மைத் தவிர வேறு என்ன வேண்டும். நான் வேறு எதையும் விரும்பவோ, தேடவோ இல்லை” என்று பதிலளித்தார். அன்று முதல் இன்னும் அதிகமாக ஒறுத்தல் செய்து பக்தியும், தூய்மையும் நிறைந்து வாழ்ந்தார். அதன்பிறகு காட்சி கொடுத்த இயேசு தமக்குச் சொன்னவற்றைத் துறவி குவின்டாவிடம் சென்னார். அவரும் சிலவற்றை எழுதி வைத்தார்.
ஏழை நோயாளர்களுக்கு நிரந்தரமாகப் பணிசெய்ய 1286-ஆம் அண்டு அனுமதி கிடைத்தது. பலர் இவர்களுக்கு உடல் உழைப்பு செய்தார்கள். சிலர் பண உதவி செய்தார்கள். எல்லாரும் இணைந்து ஒரு குழுவானார்கள். ஏழை நோயாளர்களுக்கு வாழ்வளித்தார்கள். காலம் கனிந்தபோது, புதிய துறவற சபையாக உருவாக்கினார்கள். கோர்ட்டோனாவில் மருத்துவமனை ஆரம்பித்தார்கள். ஏழை நோயாளர்களுக்கு உதவுவதும் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதுவும் இவர்களின் முக்கிய பணியாக வரையறுக்கப்பட்டது.
மனம் திரும்பிய மார்க்கிரேட் தமது வாழ்நாள் முழுவதும் நற்கருணை மீது அளவுகடந்த நேயமும், இயேசுவின் பாடுகள் மீது தீராத பாசமும் கொண்டவராக விளங்கினார். இளமையில் தாம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக, 29 ஆண்டுகள் ஏழை நோயாளர்களுக்கு சேவை செய்து, 1297 பிப்ரவரி 22 அன்று இறந்தார். திருத்தந்தை 10-ஆம் சிங்கராயர் 1515-இல் மார்க்கிரேட்டை அருளாளராக உயர்த்தினார். திருத்தந்தை 13-ஆம் ஆசிர்வாதப்பர் 1728 மே 16-இல் புனிதராக உயர்த்தினார்.
தவறுவது இயல்பானாலும் மாற்றங்கள் செயல்களில் வெளிப்படும் போதுதான் உள்ளத்தில் உறையும் இறைவன் உள்ளார்ந்த மனமாற்றத்தைக் காண்கிறார்.
பிப்ரவரி 22
புனித பேதுருவின் தலைமைப் பீடம்
புனித பேதுருவின் தலைமைப் பீடம்
நிகழ்வு :
தலைமை திருத்தூதரான பேதுரு, அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிந்தபோது அந்நகரின் ஆளுநராக இருந்த தியோப்பிலிஸ் என்பவன் பேதுருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தான். சிறையில் இருந்த பேதுருவுக்கு அவன் சரியாக தண்ணீர், உணவு கூடக் கொடுக்கவில்லை. இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து வேண்டினார், “இயேசுவே! என் தலைவரே! எனக்கு எதற்கு இத்தகைய கொடிய தண்டனை?” .அதற்கு ஆண்டவர் இயேசு அவருக்கு இவ்வாறு பதிலுரைத்தார். “பேதுரு! நான் உன்னை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?, சிறுது பொறுத்திருந்து பார். எல்லாமே நல்லதாகவே நடக்கும்”.
இந்நேரத்தில் பேதுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பவுல் அந்தியோக்கியா நகர் ஆளுநரைச் சந்தித்து, “நீங்கள் சிறை பிடித்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் இறை மனிதர். அவரால் இறந்துபோன உங்களது மகனை உயிர்த்தெழ வைக்க முடியும்” என்றார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஆளுநன் தியோப்பிலிஸ், “ஒருவேளை நீ சொல்வது உண்மையானால், நான் அவரை விடுதலை செய்து அனுப்புவேன்” என்றான். பின்னர் பவுல் ஆளுநனோடு சிறைகூடத்திற்கு வந்து, பேதுருவை இறந்த ஆளுநனின் மகனை உயிர்பெற்றழச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பேதுரு, “அது எப்படி என்னால் முடியும்?” என்று சொல்ல, “இறைவனை வேண்டிவிட்டு காரியத்தில் இறங்கு, எல்லாம் உன்னால் முடியும்” என்றார். பவுல்.
உடனே பேதுரு இறைவனிடம் உருக்கமாக வேண்டிவிட்டு, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன ஆளுநனின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைக் கண்டு பிரமித்துப் போன ஆளுநன், பேதுருவை விடுதலைசெய்ததோடு மட்டுமல்லாமல், அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்தான். மேலும் நகரின் மையத்தில் ஒரு பெரிய ஆலயம் கட்டி, அதன் நடுவே ஓர் அரியணையை நிறுவி, அதில் பேதுருவை அமரச் செய்தான். இவ்வாறு அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரும் பேதுரு பேசுவதை கேட்கக்கூடிய அளவில் அந்த அரியணையை நிறுவினான். அங்கே பேதுரு ஏழு ஆண்டுகள் நற்செய்திப் பணியாற்றினார். பின்னர் அவர் உரோமைக்குச் சென்று நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக கிறிஸ்துவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். ( பேதுருவின் தலைமைப்பீடம் தொடர்பாக சொல்லப்படும் ஒரு தொன்மம்)
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் பேதுருவின் தலைமைப் பீட விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் ஆண்டவர் இயேசு பேதுருவுக்குக் கொடுத்த ஆட்சியுரிமையை, அதிகாரத்தை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்கிறார் (மத் 16: 18 -19). இவ்வார்த்தைகளைக் கொண்டு, இயேசு கிறிஸ்து பேதுருவை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி அதனைக் கட்டிக்காக்கின்ற எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்துவிட்டார் என நாம் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தியின் இன்னும் ஒருசில இடங்களிலும் இயேசு, பேதுருவின் தலைமைப் பொறுப்பை வலியுறுத்திக் கூறுகின்றார். “சீமோனே! சீமோனே! நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிபடுத்து” என்று வார்த்தைகளிலும் (லூக் 22:32), “என் ஆடுகளை பேணி வளர்” என்ற வார்த்தைகளிலும் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஆகவே, பேதுருவை ஆண்டவர் இயேசு திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, அதனை கட்டிகாட்டும் எல்லாப் பொறுப்புகளையும் அவருக்கும் அவர் வழிவரும் திருத்தந்தையர், மற்றும் ஆயர்களுக்கும் கொடுத்திருக்கிறார் என நாம் புரிந்துகொள்ளலாம்.
பேதுரு தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சிறப்பாக செயல்படுத்தினார் என்பதையும் நாம் விவிலியத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசிக்கின்றோம். மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது பேதுருதான் எல்லார் சார்பாகவும் பேசுகின்றார் (திப 2). அதேபோன்று பேதுரு ஆண்டவர் இயேசுவிடமிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார் என்பதை அவரால் ஆகும் வல்ல செயல்கள் வழியாகக் காண முடிகின்றது. இயேசு எப்படி இறந்தவர்களை உயிர்பித்தாரோ அது போன்று பேதுருவும் இறந்த தபித்தா என்ற பெண்மணியை உயிர்பிக்கின்றார். இயேசுவின் நிழல்பட்ட நோயாளிகள் எப்படி குணமடைந்தார்களோ அதுபோன்று பேதுருவின் நிழல் பட்ட நோயாளிகள் குணமடைந்தார்கள். இவ்வாறு பேதுரு, தான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து அதிகாரத்தை வல்லமையைப் பெற்றுகொண்டவர் என்பதை வெளிபடுத்தினார்.
பேதுருவின் தலைமைப்பீடத்திற்குக் அல்லது அவரது அதிகாரத்திற்கு மரியாதை செலுத்தக்கூடிய மரபு தொடக்கக் காலத்திலிருந்தே இருந்திருந்திருக்கிறது என்பதை அந்தியோக்கு நகர இஞ்ஞாசியாரின் எழுத்துக்களிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். அவர் பேதுருவுக்கும் அவருக்குப் பின்னால் வந்த திருத்தந்தையர்களுக்கும் தகுந்த மரியாதை செலுத்தினார். அதேபோன்று லியோன்ஸ் நகர எரேனியுசும் இதற்கு தகுந்த மரியாதை செலுத்தினார் என நாம் அறிகின்றோம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பேதுருவின் தலைமை என்பது குருத்துவத்திற்கும் குருமரபினருக்கும் நாம் எந்தளவுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்பதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழாவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. பொறுப்புகளை கட்டாயத்தினால் அல்ல, மன உவப்புடன் செய்வோம்.
பொறுப்புகளில், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை கட்டாயத்தினால் அல்ல, மாறாக மன உவப்புடன், மகிழ்வுடன் செய்யவேண்டும் அதைத்தான் இந்த விழா நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
பேதுரு தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை கட்டாயத்தினால் செய்யவில்லை. அவர் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு மன உவப்போடுதான் செய்தார். அதைதான் அவர் மக்களுக்கும் போதிக்கின்றார், “உங்கள் பொறுப்புகளிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக் கொள்வீர்கள்” ( 1 5: பேதுரு 2-4).
ஆகவே நாம் எந்தப் பணியைச் செய்தாலும் அது குருத்துவப்பணியாக இருக்கட்டும் வேறு எந்தப் பணியாக இருக்கட்டும் நமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மன உவப்புடன் செய்யவேண்டும். அதேநேரத்தில் நமக்குக் கீழே இருப்பவர்களை அடக்கியாள நினைக்காமல், உண்மையான அன்போடு அவர்களுக்குப் பணி செய்யவேண்டும்.
ஓர் உதாரணம். ஒரு விஞ்ஞானக்கூடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார். “நான் என் பிள்ளைககளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதி வேண்டும்”. அதற்கு அந்த மேலதிகாரியும் அனுமதித்தார். வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தபோது மணி இரவு எட்டரை. ஒரு நிமிடம் அவர் திடுக்கிட்டுப் போனார். பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் அந்த விஞ்ஞானி போனார்.
வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். “குழந்தைகள் எங்கே?” என்று அவர் அவளிடத்தில் கேட்டதும் மனைவி சொன்னார். “சரியாக ஐந்தரை மணிக்கு இங்கிருந்து கிளம்பி கண்காட்சிக்குப் போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அவர்களை அழைத்துப் போனார்” என்று. விஞ்ஞானி வேலையில் மூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார். அந்த மேலதிகாரியின் பெயர்... ஏ.பி.ஜே அப்துல் கலாம். நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர்.
ஒரு தலைவர் தனக்குக் கீழே பணிபுரியும் பணியாளர்களிடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை இந்த நிழவானது அருமையாக விளக்குகின்றது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இதை நன்கு உணர்ந்து வாழவேண்டும். அதே நேரத்தில் பணியாளர்களும் தலைமைக்கு தகுந்த மதிப்பளித்து வாழவேண்டும்.
ஆகவே, பேதுருவின் தலைமைபீட விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் திருச்சபையின் திருமரபிற்கு தகுந்த மரியாதை செலுத்துவோம், குருத்துவத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை நன்கு பேணுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.