*பிறப்பு : -
சார்டீனியா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Sardinia, Western Roman Empire)
*இறப்பு : ஃபெப்ரவரி 29, 468
ரோம், மேற்கத்திய ரோமப் பேரரசு
*கல்லறை : புனித லாரன்ஸ் பெருங்கோவில்
திருத்தந்தை ஹிலாரியஸ் (Pope Hilarius) கத்தோலிக்க திருச்சபையின் 46ம் திருத்தந்தையாக 461ம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ம் நாளிலிருந்து, 468ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் நாள்வரை ஆட்சி செய்தார். அவர் ஒரு புனிதராக கத்தோலிக்க திருச்சபையால் வணங்கப்படுகின்றார்.
வரலாறு :
ஹிலாரியஸ், மேற்கத்திய மத்தியதரைக் கடலில் உள்ள "சார்டீனியா" (Sardinia) தீவில் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை. திருத்தந்தை "முதலாம் லியோவின்" (Pope Leo I) ஆட்சிக் காலத்தில் ஹிலாரியஸ் அவருக்கு "தலைமைத் திருத்தொண்டராகப்" (Archdeacon) பணிபுரிந்தார். அவர் ரோம திருப்பீடத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தீவிரமாக உழைத்தார்.
449ம் ஆண்டில், கூட்டப்பட்ட "இரண்டாம் எஃபேசஸ் பொதுச்சங்கத்திற்காக" (Second Council of Ephesus) ஹிலாரியஸும், "புடேயோலி ஆயரான" (Bishop of Puteoli) "ஜூலியசும்" (Julius) திருத்தந்தை லியோவின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அப்பொதுச் சங்கம் "காண்ஸ்டாண்டிநோபிள்" (Archbishop of Constantinople) பேராயரான "ஃபிளேவியனைக்" (Flavian) கண்டித்ததை ஹிலாரியஸ் வன்மையாக எதிர்த்தார்.
திருத்தந்தை லியோவின் கடிதத் தொகுப்பில் ஹிலாரியஸ், "பைஸான்டைன் பேரரசி" (Empress of the Byzantine Empire) "தூய ஏலியா புல்ச்சேரியா" (St. Aelia Pulcheria) என்பவருக்கு எழுதிய கடிதமும் உள்ளது. அக்கடிதத்தில், அவர் திருத்தந்தையின் கடிதத்தைப் பொதுச்சங்கத்திற்குப் பிறகு பேரரசியிடம் ஒப்படைக்கத் தவறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால், எபேசில் நடந்த முறைகேடான சங்கத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை அவர் திருத்தந்தைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. அவர் ரோமுக்கோ "காண்ஸ்டாண்டிநோபிளுக்கோ" செல்வதை விரும்பாத "அலெக்சாந்திரியாவின் டயோஸ்குருஸ்" (Dioscurus of Alexandria) என்பவரின் கைகளிலிருந்து தப்பிச் சென்று, திருத்தந்தைக்கு செய்தி அளிக்க பெரும் பாடுபட்டார்.
ஆற்றிய பணிகள் :
ஹிலாரியஸுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் லியோ, ரோம திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். ஹிலாரியஸ் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார் என்றாலும் லியோவைப் போன்று புகழ் பெறவில்லை. இருப்பினும் அவர் ஆற்றிய பணிகளுள் சில குறிப்பிடத் தக்கவை.
திருச்சபையில் நிகழ்ந்த நீசேயா பொதுச்சங்கம் (ஆண்டு: 325), எபேசு பொதுச்சங்கம் (ஆண்டு: 431), கால்செதோன் பொதுச்சங்கம் (ஆண்டு: 451) திருத்தந்தை லியோ கால்செதோன் பொதுச்சங்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவற்றில் அடங்கியிருந்த போதனைகளை வலியுறுத்தி ஹிலாரியஸ் கீழைத் திருச்சபைத் தலைவர்களுக்கு எழுதியதாகத் தெரிகிறது.
ஹிலாரியஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த திரிபுக் கொள்கைகளைக் கண்டித்தார். ரோம திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார்.
இத்தாலியில் ஹிலாரியஸ் "ஆரியுசுக் கொள்கை" (Arianism) என்று அழைக்கப்பட்ட ஒரு திரிபுரக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியுசுக் கொள்கை, இயேசு கிறிஸ்து பற்றிய ஒரு தவறான கருத்தைப் பரப்பியது. அதாவது, "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" என்றும், "கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுள்ளும் இயேசு ஒரு முதன்மையான படைப்பு மட்டுமே" என்றும் ஆரியசுக் கொள்கை கூறியது.
திருத்தந்தை ஹிலாரியஸ் ரோமின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் திரிபுக்கொள்கையினருக்கு ரோமில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் "ஸ்பெயின்" (Spein), "கால்" (Gaul) (இன்றைய ஃபிரான்ஸ் பகுதி) முதலிய பிரதேசங்களில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார்.
ஆயர்கள் நியமனம் பற்றி :
திருத்தந்தை ஹிலாரியஸ் 465ம் ஆண்டில் ரோம் நகரின் புனித மரியா பெருங்கோவிலில் (Basilica of Santa Maria Maggiore) ஒரு சங்கத்தைக் கூட்டினார். இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்தது.
கட்டடப் பணிகள் :
திருத்தந்தை ரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். புனித யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான புனித யோவானுக்கு அர்ப்பணித்தார். இது பற்றிய விளக்கம் வருமாறு:
திருத்தந்தை லியோவின் காலத்தில் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் லியோவின் பதிலாளாகச் செயல்பட்ட ஹிலாரியஸ் தம் கருத்தை ஆதரிக்கவில்லை என்று கருதிய சிலர் அவரைப் பிடிக்க திட்டம் தீட்டினார்கள். இதை அறிந்த ஹிலாரியஸ் அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த புனித நற்செய்தி யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். இவ்வாறு தாம் உயிர் பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்த ஹிலாரியஸ் புனித யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு மேற்கூறிய சிறுகோவிலைக் கட்டுவித்தார்.
455ம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியஸ் பல நன்கொடைகளை வழங்கினார்.
மேலும், திருத்தந்தை ஹிலாரியஸ் புனித லாரன்ஸ் பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார்.
இறப்பும் அடக்கமும் :
திருத்தந்தை ஹிலாரியஸ், 468ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 29ம் நாள் மரித்தார். அவர் அழகுபடுத்திய "புனித லாரன்ஸ் பேராலயத்தில்" (Basilica of St. Lawrence outside the Walls) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிப்ரவரி 28
✠ அருளாளர் டேனியல் ப்ரோட்டியர் ✠
✠ அருளாளர் டேனியல் ப்ரோட்டியர் ✠ நினைவுத் திருநாள் : பெப்ரவரி 28
*பிறப்பு : செப்டம்பர் 7, 1876
லா-ஃபெர்ட்-செயின்டஸிர், ஃபிரான்ஸ் (La Ferté-Saint-Cyr, Loir-et-Cher, France)
*முக்திபேறு பட்டம் : நவம்பர் 25, 1984
திருத்தந்தை 2ம் ஜான் பால் (Pope John Paul II)
அருளாளர் டேனியல் ப்ரோட்டியர், "தூய ஆவியானவரின் சபையைச்" (Congregation of the Holy Spirit) சேர்ந்த ஃபிரென்ச் ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். முதலாம் உலகப் போரின்போது (World War I), ஒரு கத்தோலிக்க குருவாக, இராணுவத்தினருக்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக ஃபிரான்ஸ் நாட்டு இராணுவத்தின் மிகவும் உயர்ந்த பதக்கங்களான (Croix de guerre) மற்றும் (Légion d'honneur) ஆகிய பதக்கங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன.
இவர் மேற்கு ஆபிரிக்க (West Africa) நாடான "செனெகல்" (Senegal) நாட்டில் மறை போதகராக பணியாற்றினார். பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான "ஒடேயுல்" (Auteuil) எனும் இடத்தில் உள்ள ஒரு அனாதைகள் இல்லத்தையும் நடத்தினார்.
"டேனியல் ஜூலஸ் அலெக்ஸிஸ் ப்ரோட்டியர்" (Daniel Jules Alexis Brottier) எனும் இயற்பெயர் கொண்ட இவர், 1876ம் ஆண்டு, "ஜீன்-பாப்டிஸ்ட் ப்ரோட்டியர்" (Jean-Baptiste Brottier) என்ற தந்தைக்கும் "ஹெர்மினி" (Herminie) என்ற தாயாருக்கும் பிறந்த இரண்டாவது மகனாவார். தமது பத்து வயதில் புது நன்மை (First Communion) பெற்ற இவர், அடுத்த வருடமே இளைஞர்களுக்கான குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். தமது இருபது வயதில் "ப்லாயிஸ்" (Blois) நகரில் ஒரு வருட இராணுவ சேவை புரிந்தார். 1899ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன் பின்னர், ஃபிரான்ஸ் நாட்டின் "போன்ட்லேவோய்" (Pontlevoy) எனும் இடத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியராக பணியாற்ற அனுப்பப்பட்டார்.
ஆசிரியர் பணியில் முழுதும் அமைதியடையாத டேனியல், மறை போதக பணியாற்ற முடிவு செய்தார். பின்னர் அவர் 1902ம் ஆண்டு, "ஒர்லி" (Orly) எனுமிடத்திலுள்ள "தூய ஆவியாரின் சபையில்" (Congregation of the Holy Spirit) இணைந்தார். அங்கே துறவறப் புகுநிலையை பூர்த்தி செய்தார். 1903ம் ஆண்டு, அச்சபை அவரை மேற்கு ஆபிரிக்காவின் "செனெகல்" (Senegal) நாட்டில் மறை போதகராக பணியாற்ற அனுப்பியது. எட்டு வருடங்கள் அங்கே பணியாற்றிய அவர், தமது உடல்நிலையில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக 1911ம் ஆண்டு, ஃபிரான்ஸ் திரும்பினார்.
முதல் உலகப்போர் வெடித்ததும் அவர் ஃபிரான்ஸ் நாட்டின் இராணுவப் படைகளின் தன்னார்வ மறை போதகராக இணைந்தார். நான்கு வருடங்களுக்கும் மேலாக யுத்த பூமியில் இராணுவ வீரர்களிடையே மதப் பணியாற்றிய டேனியல் ஒருபோதும் தமது பணியில் சுணங்கியதேயில்லை. மாறாக, தமது உயிரைப் பணயம் வைத்து மறை போதக பணியாற்றினார். துணிச்சலுக்காக ஆறுமுறை மேற்கோள் காட்டப்பட்ட டேனியலுக்கு, ஃபிரான்ஸ் நாட்டு இராணுவத்தின் மிகவும் உயர்ந்த பதக்கங்களான (Croix de guerre) மற்றும் (Légion d'honneur) ஆகிய பதக்கங்கள் அளிக்கப்பட்டன. யுத்த பணிகளின்போது இவர் ஒரு சிறு காயம் கூட இன்றி தப்பினார் என்பதே பெரும் அதிசயமாக கருதப்படுகின்றது. போர்முனைகளில் தாம் தப்பிப் பிழைத்தற்கெல்லாம் காரணம், புனிதர் தெரசாவின் (St. Thérése of Lisieux) பரிந்துரையே என்றார்.
புனிதர் தெரசாவின் (St.Thérése of Lisieux) புனிதர் பட்டமளிப்பின்போது, பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான "ஒடேய்ல்" (Auteuil) எனும் பகுதியில் அவருக்காக ஒரு சிற்றாலயம் கட்டினார். அதுவே அப்புனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயமாகும்.
போருக்குப் பிறகு, "இராணுவத்தினரின் தேசிய ஒன்றிப்பு" (National Union of Servicemen) எனப்படும், பல்வேறு போர்களில் ஈடுபட்ட முன்னாள் ஃபிரெஞ்ச் இராணுவ தியாகிகளின் அமைப்பை நிறுவினார்.
முதல் உலகப்போரின் பின்னர், பாரிஸ் நகரின் கர்தினால் பேராயரான (Cardinal Archbishop of Paris) "லூயிஸ் எர்னெஸ்ட் டுபோய்ஸ்" (Louis-Ernest Dubois), 1923ம் ஆண்டு, நவம்பர் மாதம், பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான "ஒடேய்ல்" (Auteuil) எனும் பகுதியில், அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றினை நடத்துமாறு "தூய ஆவியானவரின் சபையை" (Congregation of the Holy Spirit) கேட்டுக்கொண்டார். அருட்தந்தை டேனியலும், அவரது உதவி குருவான "ய்வெஸ் பிசொன்" (Yves Pichon) இருவரும், இல்லத்தின் வசதிகளை விரிவுபடுத்த 13 ஆண்டுகள் பணியாற்றினர். மற்றும், அனாதைகளின் நலனுக்காக வேலை செய்தார்கள். அவர் தனது பணியை இரு நோக்கங்களுக்கு அர்ப்பணித்தார்: ஒன்று, மிகவும் எளிய மற்றும் துரதிர்ஷ்டசாலிகளை பாதுகாப்பது; இரண்டாவதாக, புனிதர் தெரசாவின் (St.Thérése of Lisieux) பரிந்துரைகளுக்காக அம்முயற்சிகள் மற்றும் உழைப்புகளை அர்ப்பணித்தல் ஆகியனவாகும்.
டேனியலின் உழைப்பின் பலனாக, அவ்வில்லத்தில், கட்டுமானப் பணிகளின் பட்டறைகள், திரையரங்கம், பத்திரிக்கைகள் மற்றும் அச்சகங்கள் உள்ளிட்டவை நிறுவப்பட்டு நடத்தப்பட்டன.
சுமார் 140 அனாதைகளுடன் பணியைத் தொடங்கிய அவர் பதின்மூன்று வருடங்கள் அங்கே பணியாற்றினார். 1936ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் நாளன்று, பாரிஸ் நகரிலுள்ள "தூய ஜோசஃப் மருத்துவமனையில்" (Hospital of St. Joseph) அவர் மரணமடையும்போது, 1400க்கும் மேற்பட்ட அனாதைகள் அங்கே பராமரிக்கப்பட்டனர்.