St. Adrian St. Casimir

மார்ச் 4

தூய கசிமிர்

mary

mary

தூய கசிமிர் (மார்ச் 04)
இளைஞர்களின் பாதுகாவலர்

“மனிதன் உலகம் முழுவதும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானெனில் அதனால் வரும் பயனென்ன? (மத் 16: 26)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், போலந்து நாட்டு மன்னர் நான்காம் கசிமிர் என்பவருக்கு மகனாக 1458 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்த கசிமிர், துளுகோஸ் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது பாடங்களை கற்று வந்தார்.

இந்த சமயத்தில் துருக்கி நாட்டவரால், ஹங்கேரி நாட்டு மக்களுக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரி நாட்டு மக்கள், மன்னர் நான்காம் கசிமிரை அணுகி வந்து அவருடைய மகனான கசிமிரை தங்களுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தன் மகன் கசிமிரை அவர்களுக்குத் தலைமை தாங்கப் பணித்தார். சில ஆண்டுகள் கசிமிர் ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று சீரும் சிறப்புமாக மக்களை வழிநடத்தி வந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அந்த சிறிய வயதிலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய திறமையை இறைவன் கசிமிருக்குக் கொடுத்திருந்தார்.

ஒருசில ஆண்டுகள் ஹங்கேரியில் இருந்து பணியாற்றிவிட்டு, கசிமிர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார். ஹங்கேரிக்கு வந்த சமயத்தில் அவருடைய தந்தை, லித்துவேனியாவில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அரச பதவியை கசிமிரிடம் கொடுத்துவிட்டு அங்கு சென்றார். அவர் திரும்பி வரும்வரை கசிமிர் மக்களை நல்லமுறையில் வழி நடத்திச் சென்றார். தன் மகனுக்கு இருக்கின்ற இந்த அசாதாரண திறமையைப் பார்த்துவிட்டு மன்னர், அவரை ஜெர்மன் நாட்டு மன்னரின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். ஆனால், அவரோ அதற்கு இசையாது, ஆண்டவருக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

கசிமிர், ஜெப வாழ்க்கையிலும் மேலோங்கி விளங்கினார். குறிப்பாக மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். ‘தினமும் வாழ்த்துவோம், ஓ அன்னையே’ என்ற பாடலை அவர் எப்போதும் பாடி ஜெபித்துக்கொண்டே இருந்தார். சில நேரங்களில் அவர் இரவில் தூங்காமல் ஜெபித்துவந்தார். இப்படி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த கசிமிர், மிகக் குறைந்த வயதிலே, அதாவது அவருக்கு 24 வயது நடந்துகொண்டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்தார். கசிமிர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கல்லறையைத் தோண்டிப் பார்த்தபோது அவருடைய உடல் அழியாது இருப்பது கண்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர் தன்னோடு வைத்திருந்த ஜெபப்புத்தகம் கூட அழியாமல் இருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கசிமிரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரியன்னையிடம் பக்தி

தூய கசிமிரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் மரியன்னையின் மீது கொண்டிருந்த பக்தி, அந்த பக்தியினால் அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை நம்மை வியக்க வைக்கின்றது. புனிதரைப் போன்று நாமும் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இடைக்காலத்தில் உரோமையில் பத்திரிசியா அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மரியன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அதன் பொருட்டு அவர் ஏழைகளுக்கும் பிச்சைகாரர்களுக்கும் நிறைய தான தர்மங்களைச் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் மூப்பெய்தி இறந்துபோனார்.

இதற்கிடையில் உரோமையில் இருந்த செசிலியம்மாள் ஆலயத்தில் குருவானவர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில், விண்ணகத்தில் மரியன்னை வானதூதர்கள் புடைசூழ அரியணையில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக ஒரு பிச்சைக்காரி அழுது புரண்டு மன்றாடினாள். “அன்னையே! உன் அடியாராகிய பத்திரிசியா அருளப்பர், மண்ணுலகில் செய்த ஒருசில தீயச் செயல்களுக்காக இப்போது உத்தரிக்க தளத்தில் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நிறைய தான தர்மங்களைச் செய்தவர். இதோ நான் போர்த்தியிருக்கின்றனே இந்த போர்வை, இதுகூட அவர் போர்த்தியதுதான்” என்றார். உடனே மரியன்னை அவரிடம், “பத்திரிசிய அருளப்பரை எனக்குக் காட்டும்” என்றார். அந்தப் பிச்சைக்காரியும் அவரை மரியன்னையிடம் காட்ட, மரியன்னை அவர்மீது இரக்கம்கொண்டு அவருக்கு விண்ணகத்தில் இடமளிக்க தன் மகனை வேண்ட, அவரும் அவருக்கு விண்ணகத்தில் இடமளித்தார்.

மரியன்னையிடம் வேண்டுவோருக்கும் அவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோருக்கும் இறைவன் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், மரியன்னையியம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததால்தான் என்னவோ அவருடைய உடல் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க மரியா துணைபுரிந்தார் என்று நம்பத் தோன்றுகின்றது.

ஆகவே, தூய கசிமிரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடமும் அவர் மகன் இயேசுவிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

 

image