புனித தோமினிக் சாவியோ (இத்தாலியம்: Domenico Savio; ஏப்ரல் 2, 1842 – மார்ச் 9, 1857, இத்தாலியைச் சார்ந்த புனித ஜான் போஸ்கோவின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர். இவர் குருவாகும் ஆசையில் படித்துக் கொண்டிருந்தபோது தனது 14ஆம் வயதில் நோயுற்று இறந்தார்.[7] பதினான்கு வயதே நிரம்பிய தோமினிக் சாவியோவின், வீரத்துவம் நிறைந்த அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தியது. கத்தோலிக்க திருச்சபையில் மறைசாட்சியாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.
வீட்டு வாழ்வு
தோமினிக் சாவியோ, 1842 ஏப்ரல் 2ந்தேதி இத்தாலியில் உள்ள ரிவா ப்ரெஸோ சியரியில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரது குடும்பமும் சூழ்நிலையும் இவரை புனிதத்தில் வளர்த்தன. இவரது பெற்றோர் இவரை கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.[10] நான்கு வயதிலேயே இவர் தனியாக செபிக்கும் திறமை பெற்றிருந்தார்.[11]
சாவியோ தான் முதல் நற்கருணை பெற்ற நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் அற்புதமானதுமான நாள் அது" என்கிறார்.[12] இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து திருப்பலியில் குருக்களுக்கு உதவி செய்தார்; அதிகாலை 5 மணிக்கே ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மழையிலும், குளிரிலும் இவர் ஆலயத்திற்கு தவறாமல் சென்றார்.
ஆரட்டரியில்
12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனித ஜான் போஸ்கோ நடத்திய ஆரட்டரியில் சாவியோ சேர்ந்தார். 1854 அக்டோபர் முதல் திங்கள் கிழமை தனது தந்தையுடன் புனித ஜான் போஸ்கோவை சந்தித்த இவர்,[13] “நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி” என்று அவரிடம் கூறினார்.
கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார்.
குருத்துவ படிப்பு
இறுதியில் சாவியோ குரு மடத்தில் சேர்ந்தார். ‘பாவம் செய்வதை விட சாவதே மேல்’ என்பது இவரது விருதுவாக்கு ஆகும். 14ஆம் வயதில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மிகவும் பலவீனம் அடைந்தார். 1857 மார்ச் 9ந்தேதி விண்ணகக் காட்சியால் பரவசம் அடைந்து, “ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த அற்புத காட்சி!” என்று கூறியவாறே தோமினிக் சாவியோ உயிர் துறந்தார்.
தோமினிக் சாவியோ இறந்ததும் புனித ஜான் போஸ்கோ இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார்.[4] அது இவரது புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
புனிதர் பட்டம்
சாவியோவின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவைத்த திருத்தந்தை 10ம் பயஸ்,[14] “தோமினிக் என்னும் இளைஞர், திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றி காப்பாற்றிக் கொண்டவர்" என்று இவரைப் புகழ்கின்றார்.
1933ல் இவருக்கு வணக்கத்திற்குரியவர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ம் பயஸ், “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறுகிறார்.
திருத்தந்தை 12ம் பயஸ், தோமினிக் சாவியோவுக்கு 1950 மார்ச் 5ந்தேதி அருளாளர் பட்டமும், 1954 ஜூன் 12ந்தேதி புனிதர் பட்டமும்[15] வழங்கி உரை நிகழ்த்திய போது, “இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
மார்ச் 9
உரோமை நகர தூய பிரான்செஸ
உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)
“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25: 40)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் பிரான்செஸ், 1384 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இவர் வளர்ந்து பெரியவரானபோது இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பத்திற்கு மாறாக லொரென்சோ என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என முதலில் வருத்தப்பட்ட பிரான்செஸ், பின்னாளில் அதனை இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டார்.
திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாகவும் எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாகவும் வாழ்ந்துவந்தார். குறிப்பாக இவர் ஏழை எளிய மக்களிடத்தில் காட்டிய அன்பு எல்லாரையும் வியக்க வைத்தது. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பிரான்செஸ் தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்தார். இன்னொரு சமயம் நாட்டில் கொள்ளை நோய் ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று எல்லாரிடத்திலும் உணவுப் பொருட்களை வாங்கி, அதனைத் தேவையில் இருநத மக்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தக் கொள்ளைநோயில் பிரான்செசின் இரு பிள்ளைகளும் இறந்து போனார்கள். அப்போது அவர் அடைந்த துயரை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.
பிரான்செஸ், எப்போதுமே தன்னுடைய வாழ்வில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் செய்துவந்த ஜெபம் எல்லாப் பணிகளையும் சிறப்புடன் செய்ய உதவி புரிந்தது. ஏழை நோயாளிகள் தங்க இடமில்லாமல் தவித்தபோது அவர்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தார். இப்படி அவர் எந்நேரமும் ஏழைகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் அவருக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அத்தகைய செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கான எல்லா ஊக்கத்தையும் அளித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் பிரான்செசின் கணவர் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் தனிமரமான பிரான்செஸ் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்குப் பணிசெய்வதையே தன்னுடைய முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.
இப்படி எந்நேரமும் ஏழைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்த பிரான்செஸ், அவர்களுக்காக ஒரு சபையை நிறுவினார். அந்த சபையின்மூலம் அவர் தன்னாலான உதவிகளை ஏழைகளுக்குச் செய்து வந்தார். இப்படி ஏழைகள் வாழ்வுபெற தன்னையே கரைத்துக்கொண்ட பிரான்செஸ், 1440 1440, மார்ச் ஒன்பது அன்று இறையடி சேர்ந்தார். திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1608, மே 29 தேதி இவரை புனிதராக உயர்த்தினார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஏழை எளியவரிடத்தில் அக்கறை
தூய பிரான்செசின் வாழ்வை ஒருமுறை படித்துப் பார்க்கும்போது அவர் ஏழை எளியவரிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நமக்குப் புரியும். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று ஏழைகளை மையப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழைகளை மையப்படுத்திய வாழ்கையை வாழ்கின்றபோது, அவரது அன்புச் சீடர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
அன்னைத் தெரசா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் அருமையான நிகழ்ச்சி. அன்னைத் தெரசா கன்னியர் மடத்தை விட்டுவிட்டு, கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் பணிசெய்யத் தொடங்கிய முதல் நாளன்று, சாலையோரத்தில் உடல் முழுவதும் புண்களாக இருந்த ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். அவரைப் பார்த்த அன்னைத் தெரசா அவரைத் தூக்கி எடுத்துக் குளிப்பாட்டி, அவருக்கு புத்தாடை அணிவித்தார். இவற்றையெல்லாம் பார்த்த அந்த நோயாளி, “அம்மா! என்னை நீங்கள் இந்தளவுக்குப் பரிமாரித்துக் கொள்கின்றீர்களே. எது உங்களை இவற்றையெல்லாம் எனக்கு செய்யத் தூண்டியது?” என்று கேட்டார். அதற்கு அன்னை அவரிடத்தில், “உன்மீது நான் வைத்திருக்கும் அன்புதான் என்னை இவ்வளவு காரியங்களையும் செய்யத் தூண்டியது” என்றார்.
ஆம், அன்னைத் தெரசா ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் போன்றோரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரை எல்லாப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்ய தூண்டியது. நாமும் அன்னைத் தெரசாவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்செஸ் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கும்போது, நம்மால் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் என்பது உறுதி.
ஆகவே, பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.