St. Nicholas Owen

மார்ச் 22

✠ புனித நிக்கோலஸ் ஓவென் ✠

mary

✠ புனித நிக்கோலஸ் ஓவென் ✠(St. Nicholas Owen)

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறை சாட்சிகள் :
(Forty Martyrs of England and Wales)

*பிறப்பு : கி.பி.1562
ஆக்ஸ்ஃபோர்டு, இங்கிலாந்து அரசு
(Oxford, Kingdom of England)

*இறப்பு : மார்ச் 1/ 2, 1606
லண்டன் கோபுரம், இங்கிலாந்து அரசு
(Tower of London, Kingdom of England)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

இங்கிலாந்து நாட்டின் "மகாராணி முதலாம் எலிசெபெத்" (Queen Elizabeth I) மற்றும் அரசன் "முதலாம் ஜேம்ஸ்" (James I ) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க துறவியர் ஒளிந்து கொள்ளும் இடங்களைக் (Priest Holes) கட்டியதாக அறியப்பட்ட புனிதர் நிக்கோலஸ் ஓவென், இயேசு சபையைச் சேர்ந்த, உறுதிமொழி பிரமாணங்களைப் பெறாத ஒரு அருட்சகோதரர் (Jesuit Lay Brother) ஆவார். "லிட்டில் ஜான்" என அறியப்பட்ட இவர், உருவத்தில் சிரியவராயிருப்பினும், சக இயேசு சபையினரின் மதிப்பில் பெரியவராயிருந்தார். இவருக்கும் இயேசு சபையினருக்கும் இடையேயிருந்த தொடர்புகள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

இவரது கடைசி கைதுக்குப் பின், இவர் இங்கிலாந்து நாட்டின் சிறைத்துறை அதிகாரிகளால் லண்டன் கோபுரத்தில் வைத்து சாகும்வரை துன்புறுத்தப்பட்டார்.

1562ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு (Oxford) நகரில் பக்தியுள்ள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் வளர்ந்த காலத்தில், "குற்றவியல் நடைமுறை சட்டங்கள்" (Penal Laws) அமலில் இருந்தன. இவரது தந்தை "வால்ட்டர் ஓவென்" (Walter Owen) ஒரு தச்சுத் தொழிலாளி ஆவார்.

1577ம் ஆண்டு, தச்சுத் தொழிலில் பயிற்சி பெற்ற இவர், கத்தோலிக்க துறவியர் ஒளிந்து கொள்ளும் மறைவிடங்களை கத்தோலிக்க குடும்பங்களின் இருப்பிடங்களில் சுமார் பதினெட்டு வருடங்களாகக் கட்டினார். இவர் அடிக்கடி ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு "லிட்டில் ஜான்" ("Little John") என்ற பெயரில் பயணித்தார். மற்றும், "லிட்டில் மைக்கேல்" (Little Michael), "ஆண்ட்ரூவெஸ்" (Andrewes) மற்றும் "ட்ராப்பர்" (Draper) ஆகிய புனைப்பெயர்களையும் உபயோகித்தார். பகல் நேரங்களில் சந்தேகத்தின் திசை திருப்புவதற்காக, தாம் ஒரு பயணம் செய்து பணி புரியும் தச்சுத் தொழிலாளியாக தம்மைக் காட்டிக்கொண்டார்.

சற்றே குள்ளமான உருவம் கொண்ட நிக்கோலஸ், குடலிறக்க (Hernia) நோயால் அவதிப்பட்டார். இருப்பினும், அவருடைய பணிகள் பாதிக்கப்படவில்லை. அவர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே, அதுவும் தனிமையிலேயே பணிபுரிந்தார். அவருடைய பணியின் நேர்த்தியானது, இன்றளவும் அவர் கட்டிய பல மறைவிடங்கள் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன.

1594ம் ஆண்டு, கைது செய்யப்பட்ட இவர், ஒரு கோழிப் பண்ணையில் வைத்து துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் இவரிடமிருந்து உண்மைகள் எதுவும் வெளிப்படவில்லை. ஒரு பணக்கார கத்தோலிக்க குடும்பத்தினர் இவருக்காக அபராதத் தொகையைக் கட்டி இவரை விடுவித்தனர். நிக்கோலஸ் மீண்டும் தமது பணியை தொடர்ந்தார்.

1597ம் ஆண்டு, லண்டன் கோபுர சிறைச் சாலையிலிருந்து அருட்தந்தை "ஜான் ஜெரார்டு" (Father John Gerard, S.J) தப்பிக்க மூளையாக இருந்து செயல்பட்டவர் நிக்கோலஸ் என்று இன்றளவும் நம்பப்படுகிறது.

இறுதியாக, 1606ம் ஆண்டு, கைது செய்யப்பட்ட நிக்கோலஸ், தேம்ஸ் நதியின் தெற்குக் கரையோரம் (Southern Bank of the Thames) உள்ள "மார்ஷல்சீ" (Marshalsea) சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், லண்டன் கோபுர சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டார். கொடிய துன்புறுத்தல்களின் பிறகும் அவர் கத்தோலிக்க துறவியரின் மறைவிடங்களைப் பற்றிய உண்மைகள் எதையும் வெளியிடவில்லை. பலவாறான சித்திரவதைகளின் பிறகு, அவர் 1606ம் ஆண்டு, மார்ச் மாதம், ஒன்று மற்றும் இரண்டு ஆகிய நாட்களின் இடைப்பட்ட காலத்தில் உயிர் துறந்தார்.

நிக்கோலஸ் ஓவென், 1970ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பால் அவர்களால் கத்தோலிக்க திருச்சபையின் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

image