St. Catherine of Vadstena Bl. Oscar Arnulfo Romero

மார்ச் 24

ஸ்வீடன் நாட்டு தூய கத்ரீன்

mary

mary

ஸ்வீடன் நாட்டு தூய கத்ரீன் (மார்ச் 24)

இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார் (மத் 19: 21).

வாழ்க்கை வரலாறு

கத்ரின், 1331 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு அரசன் உல்ப்குத்மர்சன் என்பவருக்கும் தூய பிரிஜித் என்பவருக்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். அரச குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் சிறு வயதிலே மிகவும் பக்தியுள்ளவராக வளர்ந்து வந்தார். கத்ரினுக்கு 14 வயது நடக்கும்போது அவருடைய விரும்பத்திற்கு எதிராக எர்கார்டு என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். இவர் ஓர் உடல் ஊனமுற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரவு அன்று எர்கார்டு, கத்ரினை நெருங்கி வந்தபோது, கத்ரின் அவரிடம், “நான் ஆண்டவருக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன். அதனால் தாம்பத்திய உறவு நமக்குள்ளே வேண்டாமே” என்று சொல்ல அவரும் அதற்குச் சரியென்று சொல்ல, அன்றிலிருந்தே கத்ரின் தன்னை ஆண்டவருக்காக அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

இதற்கிடையில் கத்ரினின் தாய் பிரிஜித் உரோமைக்குச் சென்று, அங்கு நற்செய்திப் பணியைச் செய்துவந்தார். அவரோடு சென்று கத்ரினும் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். அந்த நேரத்தில் கத்ரினின் தந்தை உல்ப்குத்மர்சன் இறந்து போனார். அவர் இறந்த ஒருசில மாதங்களில் கத்ரினின் கணவரும் இறந்து போனார். இதனால் இரண்டு பேருமே கைம்பெண்கள் ஆனார்கள். இந்தத் துயர நிகழ்வுகளுக்குப் பிறகு இரண்டுபேருமே புனித நாடுகளுக்கு திருப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்தார்கள். அவர்கள் போகின்ற வழியில் பலருக்கும் நற்செய்தி அறிவித்துக் கொண்டும் ஏழை எளியவருக்கு உதவிகள் பல செய்துகொண்டும் சென்றார்கள்.

ஒருசில மாதங்கள் கழித்து அவர்கள் இருவரும் புனித நாடுகளை அடைந்தார்கள். புனித நாடுகளை அடைந்த பின்பு அவர்கள் இறைவனை முகமுகமாகத் தரிசித்துவிட்டு, தங்களுடைய நாடு திரும்ப நினைத்தார்கள். ஆனால், அதற்குள் கத்ரினின் தாயார் பிரிஜித் இறந்துபோனார். இதனால் அவரது உடலை, அவர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்துவிட்டு, கத்ரின் தன் உடைமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு பிரிஜித்தியன் சபையில் சேர்ந்து முழுமையான துறவியாக வாழத் தொடங்கினார். கத்ரினின் தூய, தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, சில மாதங்களிலே சபையில் இருந்தவர்கள் அவரை சபைத் தலைவியாக உயர்த்தினார்கள்.

அந்த காலக்கட்டத்தில் திருத்தந்தையாக யார் இருப்பது என்ற குழப்பம் மூன்று பேருக்குள் இருந்தது. கத்ரினோ முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஆறாம் அர்பனுக்கு தன்னுடைய முழு ஆதரவைக் கொடுத்து, அவரையே இறுதியில் திருச்சபையின் தலைவராக இருக்கச் செய்தார். இப்படி திருச்சபையின் வளர்ச்சிக்கும் சபையின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட கத்ரின், 1381 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு விழா எடுத்துக் கொண்டாட மூன்றாம் இன்னொசென்ட் முழு அனுமதி அளித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கத்ரினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்தல்

தூய கத்ரினின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கின்றபோது அவருடைய அர்ப்பண வாழ்வுதான் நம்மை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கின்றது. கத்ரின், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் முடித்துக் கொண்டபோதும் தான் ஆண்டவருக்கே சொந்தம் என்ற நிலையில், அவருக்கே தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார். இறைவனால் மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த வாழக்கையினை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்தல் என்று சொல்கின்றபோது, இந்த உலக காரியங்களில் பற்று கொள்ளாமல், உண்மையான இறைவன்மீது பற்றுக்கொண்டு வாழ்தல் என்ற விதத்தில் புரிந்துகொள்ளலாம். மனிதர்களில் நிறையப் பேர் இந்த மண்ணுலக வாழ்க்கையே நிலையானது, நிரந்தரமானது என்று நினைத்துக்கொண்டு மாய கவர்ச்சிகளில் சிக்குண்டு வாழ்ந்து அழிந்துபோவது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் இறைவனுக்காக தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்த தூய கத்ரின் நமது கவனத்துக்கு உரியவராக இருகின்றார். அவர் இறைவனுக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்ததனால் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்தினார். நாமும் இறைவனுக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவது உறுதி

ஆகவே, தூய கத்ரினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்மை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வோம், இவ்வுலக மாயக் கவர்ச்சிகளிலிருந்து விடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image