இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர். திருத்தூதர்களான ஜேம்ஸ் மற்றும் யூதாவின் தாய் இவர். இயேசுவின் உயிர்ப்பிற்கு சான்று பகர்ந்தவர்களுள் இவரும் ஒருவர். இயேசு சிலுவையில் உயிர் துறக்கும் நேரத்தில் மரியாளோடு நின்றவர். இயேசுவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் வரை அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தார். இயேசுவின் உடலுக்கு வாசனைத்திரவியங்களை பூச வந்தபோது அங்கு இயேசுவி; உடல் இல்லை என்பதை உணர்ந்தவர்.
ஏப்ரல் 9
தூய வால்டேட்ரூடிஸ்
தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)
“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றார்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5: 11-12)
வாழ்க்கை வரலாறு
வால்டேட்ரூடிஸ், பெல்ஜியம் நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய குடும்பமே புனிதர்களின் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இவரது தாய், தந்தை, இவருடைய அக்காள், கணவர், இவருடைய நான்கு பிள்ளைகள் என எல்லாரும் பின்னாளில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.
வால்டேட்ரூடிஸ், அழகில் சிறந்தவராய் இருந்தார். அதனால் இவரை மணந்து கொள்வதற்கு நிறையப் பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் வால்டேட்ரூடிசின் தந்தையோ அவருக்குப் பிடித்தாற்போல் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வால்டேட்ரூடிசை மணமுடித்துக் கொடுத்தார். அவர் பெயர் மடெல்கார் என்பது ஆகும். மடெல்கர் வால்டேட்ரூடிஸ்மீது அன்பு மழை பொழிந்து அவரை நல்ல விதமாய் பார்த்துக் கொண்டார்.
இப்படி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த தருணத்தில், வால்டேட்ரூடிஸ்மீது பொறமை கொண்டவர்கள் அவர் மிகவும் தவறான பெண்மணி என்று பழி போட்டார்கள். அத்தகைய தருணங்களில் வால்டேட்ரூடிஸ் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவின்மீது மக்கள் அபாண்டமாகப் பழி போட்டபோது, அவர் எப்படி அதை எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் மக்கள் தன்மீது சுமத்திய அபாண்டமான பழிகளை துணிவோடு எதிர்கொண்டார்.
இதற்கு மத்தியில் வால்டேட்ரூடிஸ் – மடெல்கர் தம்பதியினருக்கு இறைவன் நான்கு குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். நான்காவது குழந்தையைப் பெற்ற சிறுது நாட்கள் கழித்து வால்டேட்ரூடிசின் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதாக அவரிடத்தில் சொன்னார். வால்டேட்ரூடிஸ் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், தன் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கு முழு அனுமதியும் கொடுத்தார். இதற்கு பின்னர் வால்டேட்ரூடிஸ் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்த பின் வால்டேட்ரூடிசும் துறவற மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
துறவற மடத்தில் சேர்ந்த பின்பு வால்டேட்ரூடிஸ் ஏழைகள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி இறைவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின்னர் இவருடைய கல்லறையில் நிறைப் புதுமைகள் நடக்கத் தொடங்கின.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்
தூய வால்டேட்ரூடிஸ் மிகவும் அழகாக இருந்ததால், அவர்மீது பொறமை கொண்ட ஒருசில விஷமிகள் அவரைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் இயேசுவையே முன்மாதிரியாகக் கொண்டு, அவர் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டார்.
பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம் ஒவ்வொரின் மீதும் பலர் தேவையில்லாமல் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் தூய வால்டேட்ரூடிசை போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பலருக்கு நல்லத்தைப் பார்த்து பாராட்டக்கூடிய மனப்பக்குவம் வருவதில்லை. அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒரு சமயம் காட்டு வழியாகப் போன ஒருவன் அதிசய நாயைக் கண்டான். அது தண்ணீரில் சாவகாசமாய் நடந்து போகக்கூடிய நாய். மட்டுமல்லாமல் கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போடும். அந்த அதிசய நாயோடு நட்பு பாராட்டி ஊருக்குள் அழைத்து வந்து, ஆசையோடு வீட்டுக் காரியிடம் காட்டினான். அவளும் ஆசையோடு பார்த்தாள். அவளுடைய கண் முன்னாலே அந்த நாய் தண்ணீரில் நடந்து போனது; கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போட்டது. இதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னங்க இந்த நாய் தண்ணீரில் நடந்து போகிறது, இதற்கு நீந்தத் தெரியாதா?” என்றாள். இதைக் கேட்டு அவளுடைய கணவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
தண்ணீரில் நடந்து போகக்கூடிய அற்புத நாயாக அது இருக்க, அந்த நாய்க்கு நீந்தத் தெரியாது என்று நொட்டை சொன்ன அந்தப் பெண்மணியைப் போன்று நிறையப் பேர், பாராட்டுவதற்கு நிறைய இருந்தும் விமர்சிக்கவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை விவேகத்தோடு எதிர்கொள்வது சிறப்பு.
ஆகவே, தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு வெல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
புனிதர் கஸில்டா, ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார்.
கஸில்டா, பத்தாம் நூற்றாண்டில், ஸ்பெயின் (Spain) நாட்டின் "டோலேடோ" (Toledo) மாகாணத்தின் இஸ்லாமிய மத தலைவர் ஒருவரது மகளாகப் பிறந்தவர் ஆவார்.
இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட கஸில்டா, கிறிஸ்தவ கைதிகளின் மீது மிகுந்த இரக்கம் காட்டினார். தமது இஸ்லாமிய மதத்தின்மீது விசுவாசம் கொண்டிருந்த இவர், தினந்தோறும் கிறிஸ்தவ கைதிகளுக்கு ரொட்டிகளை மறைவாகக் கொண்டுவந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கிறிஸ்தவ கைதிகளுக்கு கொடுப்பதற்காக ரொட்டிகளை தமது ஆடையில் மறைத்து எடுத்துச் செல்கையில், எதிர்ப்பட்ட இஸ்லாமிய போர் வீரர்களால் சோதனையிடப்பட்டார். அவர்கள் அவரை சோதித்தபோது, அவரது ஆடையில் மறைவாக வைக்கப்பட்டிருந்த ரொட்டிகள் அழகிய ரோஜா மலர்களாக மாறினவாம்.
கஸில்டா தமது இளம் வயதில் நோய்வாய்ப்பட்டார். உள்ளூர் அரேபிய மருத்துவர்கள் அவரை குணப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாதிருந்தது. அதனால், அவர் உள்ளூர் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவில்லை.
வடக்கு ஸ்பெயினிலுள்ள "ஸான் விகென்ஸோ" (San Vicenzo) திருத்தலத்திற்கு புனித பயணம் மேற்கொண்டால் தமது நோய்கள் தம்மை விட்டு விலகும், தாம் குணமடைவோம் என்று கஸில்டா நம்பினார். அவரைப் போலவே நோய்வாய்ப்பட்ட மக்கள் திருத்தல புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களில் அநேகர் இரத்த ஒழுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கஸில்டா "ஸான் விகென்ஸோ" திருத்தலத்தின் புனித நீரை வேண்டி அருந்தினார். அவரை இந்த திருத்தலத்திற்கு இட்டுச் சென்ற சக்தி என்னவென்று இதுவரை யாருமறியார். ஆனால், வியக்கத்தக்க வகையில் அவர் குணமுற்றார்.
இதன் பிரதிபலனாக, கஸில்டா கிறிஸ்தவ மதத்தை மனமார ஏற்றார். "பர்கோஸ்" (Burgos) எனும் இடத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார். தனிமையிலும் தவ வாழ்வினை வாழ்ந்தார். இவர் சுமார் நூறு வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர் கி.பி. சுமார் 1050ம் வருடம் இறந்ததாக நம்பப்படுகிறது.
சரித்திரம் முழுதுமே, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே ஒரு பதட்ட சூழ்நிலையே நிலவி வந்திருக்கிறது. சில வேளைகளில் அவை இரத்தக்களறியான போர்களாகவும் வெடித்திருக்கின்றன. கஸில்டா தமது அமைதியான, எளிய வாழ்க்கை மூலம் தம்மைப் படைத்த இறைவனுக்கு - முதலில் ஒரு விசுவாசத்திற்கும் - பின்னர் வேறொன்றுக்குமாக - சேவை செய்திருந்தார்.