ஏப்ரல் 24 தூய பிதேலிஸ்
தூய பிதேலிஸ் (ஏப்ரல் 24)
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் (மத் 5: 6)
வாழ்க்கை வரலாறு
தூய பிதேலிஸ், 1577 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சிக்மரின்ஞன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து ரேபர்க் நகரில் இருந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பின்னாளில் தான் எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே அவர் பேராசிரியராகப் பணிசெய்தார். ஒருசில ஆண்டுகளில் இவர் சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலத்தில் நிறைய ஏழைகள் வழக்குகளைத் தீர்த்து வைக்க போதிய பணமில்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிதேலிஸ் அவர்களுக்கு இலவசமாகவே வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இப்படி அவர் பணம் வாங்காமலே, ஏழைகளின் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைத்ததால், ‘ஏழைகளின் வழக்குரைஞர்’ என அழைக்கப்படவும் தொடங்கினார்.
தொடர்ந்து வழக்குரைஞர் பணியை செவ்வனே செய்துவந்த பிதேலிஸ், ஒரு கட்டத்தில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் 1617 ஆம் ஆண்டு, எல்லாவற்றையும் துறந்து, கப்புசியன் சபையில் துறவியாக வாழத் தொடங்கினார். வழக்குரைஞர் பணியைவிட்டு துறவியாக வாழத் தொடங்கிய காலகட்டங்களில் தான் பெரிய பதவியில் இருந்தோம் என்ற மமதையில் எல்லாம் அவர் இருக்காமல், மிகவும் தாழ்ச்சியோடு பணிசெய்தார். இதனால் சபையில் இருந்த எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார்.
இவருடைய காலத்தில் கால்வினியன், ஸ்விங்கிளியன் போன்ற தப்பறைக் கொள்கைகள் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. பிதேலிஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கால்வினியனிசமோ முன்விதிப்படியே எல்லாமும் நடக்கும், அதாவது யார் யார் விண்ணகம் செல்வார், யார் யார் நரகம் செல்வார் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுப்விட்டது என்று சொல்லி வந்தது. அதோடு திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டு மட்டும் திருவருட்சாதனங்கள் என்று போதித்து வந்தது. இதனை பிதேலிஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். எனவே அந்த தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தவர்கள் பிதேலிசுக்கு எதிரான சதி வேளையில் இறங்கினார்கள். அந்த அடிப்படையில் 1622 ஆம் ஆண்டு, அவரைக் கொலை செய்தார்கள். பிதேலிசுக்கு 1746 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பிதேலிசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நேர்மையுடன் பணிசெய்வோம்
தூய பிதேலிசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, அவருடைய நேர்மையான வாழ்வும், அதன்மூலம் அவர் ஏழைகளுக்கு இயன்ற உதவியைச் செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. ஒரு வழக்குரைஞராக இருந்துகொண்டு நேர்மையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் நேர்மையாக இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. தூய பிதேலிசைப் போன்று நாம் நேர்மையாக வாழ முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த இடத்தில் ஆப்ரிக்காவில் நீதியரசராகப் பணி செய்து வந்த ஹம்மாஸ் என்பவருடைய வாழ்க்கையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும் என்று தோன்றது. ஹம்மாஸ் தான் செய்துவந்த பணிக்காக ஊதியம் வாங்குவதில்லை, மாறாக அதனை ஒரு சமூகப் பணியைப் போன்று செய்து வந்தார். பிழைப்புக்காக இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதி, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
அவர் ஒவ்வொருநாளும் ஆற்றுக்குச் சென்று, குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் அவ்வாறு ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்ட வந்தபோது, அவரை இடைமறித்த இருவர், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நடைபாதையில் குடிசை அமைப்பது நல்லதா? என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “நாம் இப்போது நின்றுகொண்டிருப்பது நடைபாதையில். இங்கே இருந்துகொண்டு வழக்கினை விசாரித்தால் அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால் ஒரு ஓரமாகப் போய் பேசுவோம்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவர்கள் இவரும், “ஐயா எங்களுடைய வழக்குக்கான நல்லதொரு தீர்வு உங்களுடைய பேச்சிலிருந்தே கிடைத்துவிட்டது. அதனால் போகிறோம்” என்று விடைபெற்றுச் சென்றார்கள்.
நடைபாதையில் நின்றுகொண்டு பேசுவதே குற்றம் என்று நினைப்பவர், நடைபாதையில் குடிசை அமைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வார் என்பதாலேயே அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்கள். நீதியரசர் ஹம்மாஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வு அவருடைய நேர்மையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் நேர்மையோடு நடப்பதே ஆகச் சிறந்த ஒரு செயலாகும்.
ஆகவே, தூய பிதேலிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நேர்மையோடும் இரக்கத்தோடும் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம் |