St. Mark the Evangelist

ஏப்ரல் 25

புனித மாற்கு, நற்செய்தியாளர். (Evangelist)

mary

mary

புனித மாற்கு, நற்செய்தியாளர். (Evangelist)

*பிறப்பு : கி. பி. 1ம் நூற்றாண்டு

*இறப்பு : ஏப்ரல் 25, 68

*சித்தரிக்கப்படும் வகை :
பாலைவனத்தில் சிங்கம்; சிங்கங்கள் சூழ்ந்த அரியணையில் ஆயர் உடையில்; வெனிசு நகரின் மாலுமிகளைக் காப்பது போல; "pax tibi Marce" என்னும் எழுத்துக்களை தாங்கிய புத்தகத்தோடு; இரு இரக்கைகள் உடைய சிங்கம்

*பாதுகாவல் :
பார் அட் லா (Bar at Law), வெனிஸ் (Venice), எகிப்து (Egypt)

நற்செய்தியாளரான புனிதர் மாற்கு, பாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும், இவர் கிறிஸ்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் (Church of Alexandria) நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.

வரலாற்றாசிரியரான யூசெபியஸ் (Eusebius of Caesarea) என்பவரின் கூற்றின்படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப் பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி. 68ம் ஆண்டு, இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.

மாற்கு நற்செய்தி 14:51-52ல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப் பிடித்தபோது, தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25ல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.

திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே.
புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே.

இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர். மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேதுருடைய சீடரும், அவருடைய மொழி பெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர்.

எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார். எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்தவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய்.

முதன் முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும் போது இவரை உடன் அழைத்துச் சென்றார்.
அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று அச்சம் கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத்து செல்லவில்லை. இதனால் பர்ணபாவும் பவுலை விட்டுப் பிரிந்தார்.

ரோம் நகரில் பவுல் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல், தான் இறக்கும்முன்பு, ரோம் சிறையில் இருந்தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.

பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள்.

மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர் இதே மாற்குதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர்.

பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830ம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றப்படுகின்றார்.

இறக்கையுள்ள சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார். எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர்.

நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய ரோமப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது.

ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.


நிகழ்வு

மாற்கு அலெக்ஸாண்ட்ரியா நகருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார். அவர் அந்நகருக்குள் நுழையும்போது அவருடைய காலணிகளில் ஒன்று அறுந்துபோய்விட்டது. எனவே, அவர் அருகே இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று தன்னுடைய காலணியைத் தைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். செருப்பு தைக்கும் தொழிலாளி மாற்குவின் காலணியைத் தைக்கும்போது தவறுதலாக அவர் பயன்படுத்திய ஊசி அவருடைய இடது கையில் பட இரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தது. அப்போது அவர் �கடவுள் ஒருவரே' என்று சத்தமாகக் கத்தினார். உடனே மாற்கு அருகே கிடந்த மணலைக் குழப்பி சேறு உண்டாக்கி, அதனை எடுத்து அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் காயம்பட்ட கையில் வைத்தார். அவருடைய கையிலிருந்து வழிந்த இரத்தம் முற்றிலுமாக நின்றுபோனது, அவருக்கு இருந்த வலியும் காணாமல் போனது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அம்மனிதர் மாற்குவிடம், "நீர் யார்?" என்று கேட்டார். அதற்கு மாற்கு, "நான் ஆண்டவர் இயேசுவின் ஊழியர், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக இங்கே வந்தவர்" என எடுத்துரைத்தார்.

மாற்குவின் வார்த்தைகளால் தொடப்பட்ட செருப்பும் தைக்கும் தொழிலாளி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். அவர் பெயர் அணியானுஸ் என்பதாகும். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பம் முழுவதும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியது. இதனால் அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். இதற்கிடையில் இச்செய்தி எப்படியோ நகரத்தவர் காதுகளை எட்ட அவர்கள் மாற்குவை கொல்லத் தீர்மானித்தார்கள். இதனால் மாற்கு அணியானுசை அலெக்ஸாண்ட்ரிய நகரின் ஆயராக திருப்பொழிவு செய்துவிட்டு வேறொரு நகருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

வாழ்க்கை வரலாறு

மாற்கு எருசலேமில் வாழ்ந்த மரியா (திப 12: 12-16) என்பவருடைய மகன். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். சிறையில் இருந்த பேதுரு அற்புதமாக தப்பித்து வெளியே வந்தபோது இவருடைய இல்லத்தில்தான் அடைக்கலம் புகுந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பர்னபாஸ் என்பவர் ஆவார். விவிலியத்தில் இவர் ஒருசில இடங்களில் ஜான் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜான் என்பது இவருடைய யூதப் பெயர். மாற்கு என்பது இவருடைய உரோமைப் பெயர்.

மாற்கு கி.பி. 46 ஆம் ஆண்டு பவுல் மேற்கொண்ட அந்தியோக்கு நகர் நோக்கி முதலாவது திருத்தூது பயணத்தில் உடன் சென்றார். ஆனால் பெர்கே என்ற நகரில் பவுலுக்கும் மாற்குவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாற்கு தனியாகப் பிரிந்துபோனார். கி.பி. 60 ஆம் ஆண்டு பவுல் உரோமை நகருக்கு வந்தபோது, மாற்கு மீண்டுமாக அவரோடு சேர்ந்துகொண்டார். பவுல் இவரைக் குறித்து குறிப்பிடும் போது "என்னுடைய பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்" (2 திமோ 4:11) என்று குறிப்பிடுகின்றார். மாற்கு பேதுருவின் சீடராகவும், செயலராகவும், விரிவுரையாளராகவும் இருந்து செயல்பட்டு இருக்கிறார். அதனால்தான் பேதுரு இவரை, "மாற்கு என்னுடைய அன்பிற்குரிய மகன்" என்று குறிப்பிடுகின்றார் (1 பேதுரு 5:13). பேதுருவிடமிருந்துதான் மாற்கு கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டார்.

மாற்கு, இரண்டாம் நற்செய்தி எனப்படும் �மாற்கு நற்செய்தியை' எழுதியிருக்கிறார். இச்செய்தியை அவர் உரோமையில் இருந்த காலகட்டங்களில் உரோமைக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதினார். இது எழுதப்பட்ட காலம் கி.பி. 65 ஆகும். இந்நற்செய்தி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதலாவது இந்நற்செய்தி நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் வருகின்ற நிகழ்வுகள் தத்தூரூபமாக, கண்முன்னே நடப்பது போன்று எழுதப்பட்டிருக்கும். மாற்கு அத்தகைய ஒரு சிறப்பாற்றலைப் பெற்றிருந்தார். இரண்டாவதாக மாற்கு, ஆண்டவர் இயேசுவை ஒரு துன்புறும் ஊழியராக, இறைமகனாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது வேறு எந்த ஒரு நற்செய்தி நூலுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். மூன்றாக மாற்கு திருமுழுக்குக் யோவானை 'பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக' சுட்டிக்காட்டுகின்றார். அதனால்தான் மாற்கு நற்செய்தியாளருக்கு 'சிங்கம்' சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்கு அலெக்ஸ்சாண்ட்ரியா, எகிப்து போன்று இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். இவர் அலெக்ஸ்சாண்ட்ரியா நகரில் நற்செய்தி அறிவிக்கும்போது கயவர்கள் சிலர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள். அடுத்த நாள் இவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி தெருவெங்கும் இழுத்துச் சென்றார்கள். அவர் அப்படி இழுத்துச் செல்லப்படும் போதே உயிர் துறந்தார். அவர் தன்னுடைய உயிரைத் துறந்த நாள் கிபி 68 ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியாகும். பின்னர் மாற்குவின் பணியாளர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று, வெனிஸ் நகரில் அடக்கம் செய்தார்கள். அவருடைய கல்லறை வெனிஸ் நகரில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

நற்செய்தியாளர் தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

மாற்கு நற்செய்தியாளர் ஒரு மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்பு பணியாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் முதலில் அவர் பவுலோடு சேர்ந்து நற்செய்தி அறிவித்தார். அதன்பிறகு தூய பேதுருவோடு நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தார். இறுதியாக இவர் அலெக்ஸ்சாண்ட்ரிய நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுவார், "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15). ஆகவே, ஆண்டவர் இயேசு சொன்ன கட்டளையை, மாற்கு நற்செய்தியாளர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ முயல்வோம்.

ஐரோப்பாக் கண்டத்தில் ருட்டெல் நோரிஸ் (Ruddell Norris) என்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற ஆர்வம்தான். இருந்தாலும் அவரிடத்தில் எல்லாரிடத்திலும் எப்படிச் சென்று பேசுவது, அறிவிப்பது என்ற கூச்ச சுபாவம் இருந்தது. அதனால் அவர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். அதாவது விவிலியத்தின் சில பகுதிகளையும், அதன் விளக்க உரைகளையும் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து, அதனை மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய மருத்தவமனைகள், வழிபாட்டு மையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் வைத்துவிட்டுச் சென்றார். இதனை எடுத்து படித்தவர்கள் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அதிகமாக அறிந்துகொண்டார்கள்.

ஒருநாள் இவர் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, மருத்துவமனையின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டுத் போகும்போது பின்னாலிருந்து, "யாரோ ஒரு புண்ணியவாளன் செய்யக்கூடிய இந்த நல்ல காரியத்தினால் நான் கிறிஸ்துவைப் பற்றிய அதிகமாக அறிந்துகொண்டேன்" என்றது. இதைக் கேட்ட ருட்டெல் நோரிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தான் செய்யக்கூடிய இந்த சிறிய நற்செயலால் ஒருசிலராவது கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்கிறார்களே என்று அவர் தன்னுடைய மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

கடல் கடந்து சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் இருக்கும் இடத்தில், நம்மால் முடிந்த அளவு நற்செய்தி அறிவிக்கலாம். அதற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். நற்செய்தியாகவே வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

 

image