St. Domitian of Maastricht St. Rose Venerini St. John of Beverley

மே 7

பெவெர்லி நகர தூய யோவான்

mary

பெவெர்லி நகர தூய யோவான் (மே 07)

இயேசு அங்கு சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே இருந்த உடல்நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார் (மத் 14: 14).

வாழ்க்கை வரலாறு

யோவான், இங்கிலாந்தில் உள்ள யோர்க்க்ஷேர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் கண்டர்பெரி ஆயரான தியோடரிடமும் ஆதீனத் தலைவரான அட்ரியனிடமும் கல்வி கற்றார். அதன்பிறகு விட்பியில் உள்ள தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதாவது 687 ஆம் ஆண்டு இவர் ஹக்ஸ்ஹாம் என்னும் இடத்தின் ஆயரானார். அங்கு சில காலம் இறைப்பணியை சீரும் சிறப்புமாகச் செய்து வந்தார். அதைத் தொடந்து 705 ஆம் ஆண்டு யோர்க் என்னும் இடத்தின் ஆயரானார். இறைவனின் திருவருளால், தான் ஏற்றுக்கொண்ட பணிகள் அனைத்தையும் யோவான் மிகச் சிறப்பாகச் செய்து வந்தார். ஒருகட்டத்தில் இவர் ஆயர் பதவியைத் துறந்துவிட்டு, துறவற மடத்திற்குச் சென்று, ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது நல்லது என்று உணர்ந்தார். எனவே இவர் தன்னுடைய ஆயர் பதவியைத் துறந்துவிட்டு பெவெர்லி நகரில் முன்பு தான் எழுப்பிய துறவற மடத்தில் சேர்ந்து, துறவற வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தொடங்கினார்.

துறவற மடத்தில் இருந்த நாட்களில் எல்லாம் யோவான் கருணைக்கும் பிறரன்புச் சேவைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். அது மட்டுமல்லாமல் யோவான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் வல்லவராக விளங்கினார். இவர் கற்றுக்கொடுத்ததனால் பயன்பெற்று பின்னாளில் ஒரு புனிதராக உயர்ந்தவர்தான் தூய பீத் என்பவர். யோவான் 721 ஆம் ஆண்டு உடல் நலம் குன்றி, இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பிறகு இவருடைய கல்லறையில் நிறைய புதுமைகள் நடைபெற்றன. அதனால் இவருடைய கல்லறை இடைக்காலத்தில் ஒரு புனிதத் தலமாக உயர்ந்து நின்றது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

பெவெர்லி நகர தூய யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பிறரன்புப் பணிகளில் சிறந்து விளங்குவோம்

தூய யோவானின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசிக்கும்போது அவரிடத்தில் விளங்கிய பிறரன்புப் பணிகள் நமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. அவரை நினைவுகூரக்கூடிய நாம், பிறரன்புப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய உலகில் மனிதர் தானுண்டு தன்னுடைய குடும்பம் உண்டு என்றே வாழப் பழகிவிட்டார்கள். அதனால் யாருக்கும் யார்மீது அக்கறை இல்லாத ஒரு சூழ்நிலை நிலவி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் நாம், பெவர்லி நகரத் தூய யோவானைப் போன்றது பிறரன்புப் பணிகளில் நம்மையே ஈடுபடுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு நான்கு வயதான அலெக்ஸ்சாண்ட்ரா என்ற சிறுமிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட சிகிச்சையிலே, அவள் அதிக நாள் உயிர் வாழமாட்டாள் என்பது தெரிந்துவிட்டது. சிறுமியோ மனம் தளராமல் ஆரம்பச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், தன் வீட்டு வாசலில் எலுமிச்சை ஜூஸ் விற்கும் கடை திறந்தாள்.

அதன் முக்கிய நோக்கம், அதில் கிடைக்கும் பணத்தில், தன்னைப் போல புற்றுநோய் பாதித்த சிறுவர்களுக்கு உதவி செய்வது. அந்த அக்கறையும் ஈடுபாடும் 2000 டாலரை ஒரே ஆண்டில் வசூல் செய்துதந்தது. தன்னையொத்த சிறுவர்களின் நலனுக்காக அதைச் செலவிட்ட அலெக்ஸ்சாண்ட்ரா, நோய் முற்றி 2004 ஆம் ஆண்டு இறந்துபோனாள். ஆனால், அவள் தொடங்கி வைத்த எலுமிச்சை ஜூஸ் கடைகள் உலகெங்கும் பரவி, இன்று சிறுவர்களைப் புற்றுநோயில் இருந்து காக்க உதவும் அறிய திட்டமாக வளர்ந்துவருகின்றன. ஒரு சிறுமி முன்னெடுத்த காரியம், இன்று பல கோடி நிதி திரட்டி, உலகுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.

அலெக்ஸ்சாண்ட்ரா, சிறுவயதிலே இறந்துபோனாலும் அவள் செய்த காரியம் நிறையப் பேருக்குப் பலன் தரக்கூடியதாக இருக்கின்றது. நாமும் நான், எனது குடும்பம் என்று இருந்து விடாமல், பிறரில் அக்கறைகொண்டு வாழ்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

ஆகவே, தூய யோவானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று பிறரன்புப் பணிகளில் நம்மை முழுவதும் ஈடுபடுத்தி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image