St. Damien of Molokai

மே 10

✠ புனிதர் தமியான் ✠(St. Damien of Molokai)

mary

✠ புனிதர் தமியான் ✠(St. Damien of Molokai)

*மத குரு, மத போதகர் :
(Religious Priest and Missionary)

*பிறப்பு : ஜனவரி 3, 1840
ட்ரெமெலோ, ப்ரபன்ட், பெல்ஜியம்
(Tremelo, Brabant, Belgium)

*இறப்பு : ஏப்ரல் 15, 1889 (வயது 49)
கலாவுபப்பா, மொலகாய், ஹவாயி
(Kalaupapa, Molokai, Hawaii)

*அருளாளர் பட்டம் : ஜூன் 4, 1995
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : அக்டோபர் 11, 2009
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

*முக்கிய திருத்தலங்கள் :
லுவென், பெல்ஜியம் (உடலின் மிச்சங்கள்)
(Leuven, Belgium (bodily relics)
மோலக்காய், ஹவாய் (அவரது கையின் மிச்சங்கள்)
(Molokaʻi, Hawaii (relics of his hand)

*நினைவுத் திருவிழா : மே 10

*பாதுகாவல் : தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்.

ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட புனிதர் தமியான், "இயேசு மற்றும் மரியாளின் திருஇருதய சபை" (Congregation of the Sacred Hearts of Jesus and Mary) என்னும் கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவியும், குருவும் ஆவார்.

பிறப்பும் துறவறமும்:
தந்தை தமியான் 1840ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாளன்று பிறந்தார். அவர் பிறந்த இடம் பெல்ஜியம் நாட்டில் உள்ள "ட்ரெமெலோ" (Tremelo) என்னும் ஊர் ஆகும். அவருடைய இயற்பெயர் "ஜோசெஃப் டி வெய்ஸ்ட்டெர்" (Jozef De Veuster) ஆகும். அவர் "இயேசு மற்றும் மரியாள் ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவற சபையின் உறுப்பினராக இருந்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.

புனிதர் தமியான், "தொழுநோயாளரின் திருத்தூதர்" (The Apostle of the Lepers) என்னும் பெயராலும் அறியப்படுகிறார். மேலும் அவருக்கு, "தொழுநோய்த் துறவி" (Leper Priest) என்னும் பெயரும் உண்டு.

தமியானின் இளமைப் பருவம்:
"ஜோசெஃப் டி வேய்ஸ்ட்டர்" (Jozef De Veuster) எனும் இயற்பெயர் கொண்ட தந்தை தமியான், பெல்ஜியம் நாட்டில் "ஃப்ளேமிஷ்" (Flemish) மொழி பேசும் மக்கள் குழுவைச் சார்ந்த "ஜோவான்னெஸ் ஃப்ரான்சிஸ்கஸ் டி வெய்ஸ்ட்டர்" (Joannes Franciscus De Veuster) என்பவருக்கும் அவரது மனைவி "ஆனி-காதரின் வூட்டெர்ஸ்" (Anne-Catherine Wouters) என்பவருக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது தந்தை சோளம் வியாபாரியாக இருந்தார். அவர் "ப்ரேய்ன்-லெ-கோம்த்" (Braine-le-Comte) என்னும் இடத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார்.

துறவு வாழ்க்கையைத் தழுவுதல்:
இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல விரும்பி, துறவற வாழ்க்கையைத் தழுவ எண்ணிய தமியான், "இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவறக் குழுவில் உறுப்பினராகச் சேர முன்வந்து, அச்சபைக்கான புகுமுகப் (Novitiate) பயிற்சி பெற்றார். அப்போது அவர் தேர்ந்துகொண்ட துறவறப் பெயர் "தமியானஸ்"ஆகும்.

அவருடைய குருத்துவப் படிப்புக் காலத்தின் போது அவர் ஒவ்வொரு நாளும் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித ஃபிரான்சிஸ் சவேரியாரின் படத்தின் முன் அமர்ந்து, தாமும் ஒருநாள் நாடுகடந்து சென்று கிறிஸ்தவ மறைப்பணி புரிய இறைவன் அருளவேண்டும் என்று வேண்டுதல் செய்வது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. தமியானின் சகோதரர் "அருட்தந்தை பாம்ப்பில்" (Father Pamphile) அவர்கள் நோய்வாய்ப்பட்டதால் ஹவாயி இராச்சியத்துக்கு மறைப்பணியாளராகச் செல்ல இயலாமல் போயிற்று. அவருக்குப் பதிலாக, அவருடைய தம்பி தமியானை ஹவாயிக்கு மறைப்பணியாளராக அனுப்புவது என்று சபை முடிவுசெய்தது. அண்ணனுக்குக் கிடைக்காத பேறு தம்பிக்குக் கிடைத்தது.

ஹவாயிக்கு மறைப்பணியாற்றச் செல்லுதல்:
1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் நாள், தமியான் மறைப்பணியாளராக ஹவாயி நாட்டின் "ஹொனலூலு" (Honolulu Harbor) துறைமுகம் வந்திறங்கினார். அங்கு, இவர் நிறுவிய சபையினர் கட்டியிருந்த "அமைதியின் அன்னை பேராலயத்தில்" (Cathedral of Our Lady of Peace) 1864ம் ஆண்டு, மே மாதம், 21ம் நாளன்று, தமியான் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

1865ம் ஆண்டு, தமியானுக்கு ஹவாயியின் "வட கோஹலா" (Catholic Mission in North Kohala) பகுதியில் அமைந்திருந்த இயேசுவின் திரு இருதய ஆலய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஹவாயியில் மருத்துவ நெருக்கடி:
ஹவாயி இராச்சியத்தின் "ஓவாஹூ" (Oahu) பகுதியில் பல பங்குகளில் மறைப்பணி செய்தார் தந்தை தமியான். அவ்வாறு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஹவாயியின் மருத்துவ சேவை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாயிற்று. வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் கடற்பயணிகளும் சுமந்துவந்த சில நோய்கள் அவர்கள் ஹவாயியின் ஆதி குடிமக்களோடு கொண்ட தொடர்பின் பயனாக அம்மக்கள் சிலரிடையே பரவின.

இதனால் ஆயிரக்கணக்கான ஹவாயி மக்கள் ஃபுளூ சளிக்காய்ச்சல், பால்வினை நோயாகிய மேகப்புண் (smallpox, cholera, influenza, syphilis, and whooping cough) போன்ற நோய்களுக்கு ஆளாகி இறந்தனர். இந்த நோய்கள் அப்பகுதிகளில் முன்னால் கண்டதில்லை. இவ்வாறு வந்து பரவிய நோய்களுள் ஒன்று "ஹான்சன் நோய்" (Hansen"s disease) என்று அழைக்கப்படுகின்ற தொழுநோய்.

அச்சமயத்தில் தொழுநோய் மிகவும் பயங்கரமான தொற்றுநோயாகக் கருதப்பட்டது. ஆனால் 95% மனிதர்கள் அந்நோய்க் கிருமியைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்று அறியப்பட்டது. தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்றும் அக்காலத்தில் கருதப்பட்டது.

ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு மக்கள் நல வாரியம் உணவும் பிற பொருள்களும் கொடுத்தது. ஆனால் நாள்கள் போகப்போக அம்மக்களின் நலனைக் கவனிக்க போதுமான ஆள்களோ பொருள்களோ அனுப்பப்படவில்லை.

தந்தை தமியான் தொழுநோயாளர் நடுவே பணி செய்ய முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார். ஒதுக்கப்பட்ட இடமாகிய கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பில் தமியான் 1873ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாள், சென்றடைந்தார். அங்கு வாழ்ந்த 816 தொழுநோயாளர் முன்னிலையில் "ஆயர் மேக்ரே", தந்தை தமியானை அறிமுகம் செய்தார்.

தொழுநோயாளர் குடியிருப்பில் போய்ச் சேர்ந்த உடனேயே அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து தமியான் சிந்திக்கலானார். முதல் வேலையாக ஒரு கோவில் கட்டுவது என்று முடிவுசெய்து, கோவிலைக் கட்டி அதைப் புனித ஃபிலோமினாவுக்கு அர்ப்பணித்தார். ஆனால் அவரது பணி மறைசார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்கவில்லை.

தொழுநோயாளரின் புண்களைக் கட்டுவது, அவர்கள் வசதியாகத் தங்கியிருக்க வீடுகள் கட்டுவது, அவர்களுக்குத் தேவையான மரச்சாமான்களைச் செய்துகொடுப்பது, இறந்தோரை அடக்கம் செய்ய அடக்கப்பெட்டிகள் செய்வது, கல்லறைக் குழிகள் தோண்டுவது என்று பல பணிகளையும் தமியான் செய்யலானார்.

தந்தை தமியானுக்கும் தொழுநோய் தொற்றிவிட்டது. தமக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்று தெரிந்த பிறகு, தமியான் முன்னைப் போலவே ஊக்கத்தோடு தம் பணிகளில் ஈடுபட்டார்.

1889ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 15ம் தேதியன்று காலை 8 மணிக்குத் தந்தை தமியான் தொழுநோயால் இறந்தார். அப்போது அவருக்கு வயது 49.

================================================
தூய பீட்டர் தமியான் (மே 10)

நிகழ்வு

தன்னுடைய இருபத்து மூன்றாவது வயதில் எல்லாவற்றையும் துறந்து, மொலோக்காய் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த தொழுநோயாளர்களுக்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்தவர் இன்று நாம் நினைவு கூரக்கூடிய பெல்ஜியம் நாட்டை சார்ந்த பீட்டர் தமியான்.

தமியான் இத்தகைய ஒரு துணிச்சலான முடிவினை எடுத்தபோது அவருடைய குடும்பத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பயங்கர எதிர்ப்பு வந்தது. ஆனால் அவர் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்ததால், எந்தவொரு எதிர்ப்பும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் தொழுநோயாளர்களிடையே ஆற்றிய பணி மிகவும் அசாதாரணமானது. யாருமே அருகில் செல்வதற்கு யோசிக்கும் தொழுநோயாளர்களை அவர் அதிகமாக அன்பு செய்தார்; அவர்களுடைய உடலில் ஏற்பட்டிருந்த புண்களைத் துடைத்து மருந்து தடவினார். அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.

தமியான் இப்படி அர்ப்பண உள்ளத்தோடு தொழுநோயாளர்கள் மத்தியில் பணி செய்து வந்தாலும், தொழுநோயாளர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். அந்த இடைவெளியைக் குறைத்து, அவர்களோடு இன்னும் நெருக்கமாவது எப்படி என்று அவர் நீண்ட நாட்களாக யோசித்து வந்தார். ஒரு நாள் அவர் தொழுநோயாளர்களுக்கு மறையுரை ஆற்றும்போது, "தொழுநோயாளர்களாகிய நாம்" என்று பேசத் தொடங்கினார். இதைக் கேட்ட தொழுநோயாளர்கள் யாவரும் தமியானை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர். அன்றிலிருந்து தமியான் தம்மை தொழுநோயாளர்களில் ஒருவராக பாவித்து, அவர்களுக்குச் சேவை செய்துவந்தார்; அதனாலேயே தொழுநோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். பின்னாளில் அவர் புனிதராகவும் உயர்ந்தார்.

வாழ்க்கை வரலாறு

தமியான், 1840 ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் உள்ள ட்ரேமிலோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஜோசப் தே வஸ்டர் என்பதாகும். துறவியாகச் சேர்ந்த பிறகே தமியான் என்ற பெயர் இவருக்கு வந்தது. தமியான் 13 வயதுவரை நன்றாகப் படித்துவந்தார். 13 வயது நடக்கும்போது இவருடைய தந்தை இவரிடம், "படிப்பெல்லாம் வேண்டாம், தோட்டத்தில் வந்து வேலை செய்" என்றார். தமியான் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் தோட்டத்தில் போய் வேலை பார்த்து வந்தார். ஐந்து ஆண்டுகள் கழித்து, மீண்டுமாக அவருடைய தந்தை அவரைக் கூப்பிட்டு படிக்கச் சொன்னார். தந்தையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு மீண்டுமாக படிக்கச் சென்றார். அவ்வாறு அவர் படித்துக் கொண்டிருக்கும்போது இறைவனுடைய அழைப்பினை உணர்ந்தார். எனவே துறவற மடத்தில் சேர்ந்து துறவியானார்.

இதற்கிடையில் பாம்பில் என்பவருடைய தலைமையில் ஹவாய் தீவிற்குச் சென்று, பணிசெய்ய ஒருசில மறைப்பணியாளர்கள் புறப்பட்டார்கள். ஆனால் பாம்பில் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, தமியான் அந்த இடத்தைப் பெற்றார். கப்பல் பயணம் புறப்பட்டது. முதலில் ஹவாய் தீவிற்குச் சென்ற கப்பல் அங்கிருந்து மொலோக்காய் என்ற தீவிற்குச் சென்றது. மொலோக்காய் தீவில் நிறையத் தொழுநோயாளர்கள் இருந்தார்கள். தமியான் அவர்களுக்கு மத்தியில் பணிசெய்யத் தொடங்கினார். தொடக்கத்தில் தொழுநோயாளர்களுக்கு மத்தியில் பணிசெய்வதைக் குறித்து மிகவும் யோசித்த யோசித்த தமியான், பின்னர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பணிசெய்தார். இதனால் அவருக்கு 1884 ஆம் ஆண்டு தொழுநோய் தாக்கியது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் மனந்தளராமல் பணி செய்தார். இதனால் அவருடைய நோய் முற்றி 1889 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். தமியானுக்கு 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தமியானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நோயாளிகளிடத்தில் அக்கறை

தொழுநோயாளர்களின் பாதுகாவலராக அறியப்படுகின்ற தூய பீட்டர் தமியானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் தொழுநோயாளர்களிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய நோயாளிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித்தீர்ப்பின் போது இயேசு தனக்கு முன்பாகக் கூடியிருந்தவர்களைப் பார்த்து, "நான் நோயுற்று இருந்தேன். என்னை கவனித்துக் கொண்டாயா? என்றுதான் கேட்கின்றார். இயேசு அவர்களிடம் கேட்கக்கூடிய கேள்வியை, நம்மிடத்திலும் கேட்கின்றார். நாம் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
ஆகவே, தூய பீட்டர் தமியானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடத்தில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

image