“ஆண்டவர் தம் கையை நீட்டி, என் வாயைத் தொட்டு, என்னிடம் கூறியது: இதோ பார் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும் அவிழ்க்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்” (எரே 1: 9-10).
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் சிரில் எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் 376 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய தொடக்க மற்றும் உயர் கல்வியை தன்னுடைய சொந்த மண்ணிலே கற்றார்.
412 ஆம் ஆண்டு அப்போது அலெக்ஸாண்ட்ரியா நகரின் மறைத்தந்தையாக இருந்த தியோபிலிஸ் இறந்துவிட சிரில் அலெக்ஸாண்ட்ரியா நகரின் மறைத்தந்தையாக, ஆயராகப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் அப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் பணிசெய்து வந்தார்.
சிரில் அலெக்ஸாண்ட்ரிய நகர ஆயராக இருந்து பணிசெய்த காலங்களில் திருச்சபை பல்வேறு விதமான தப்பறைக் கொள்கைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக கொன்ஸ்டாண்டிநோபில் நகரத்தின் ஆயராக இருந்த நொஸ்டோரியஸ் என்பவர், ‘இயேசு படைக்கப்பட்ட பொருள். அவர் மனித இயல்புடையவர். அவரிடம் இறையியல்பு என்பது இல்லவே இல்லை. ஆகையால் மரியா இயேசுவின் தாய் மட்டுமே, இறைவனின் தாய் அல்ல’ என்று சொல்லி வந்தார். இதனை சிரில் மிகக் கடுமையாக எதிர்த்தார்.
மேலும் நொஸ்டாரியஸ் பரப்பி வந்த இந்த தப்பறைக் கொள்கையை அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் செலஸ்டினின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவர் சிரிலை தன்னுடைய பிரிதிநிதியாக நியமித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சிரிலை முடுக்கிவிட்டார். அதனால் எபேசு நகரில் 431 ஆம் ஆண்டு பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. அந்த சங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து, இயேசு மனித மற்றும் இறையியல்பினைக் கொண்டவர் என்றும் அதனால் மரியா இறைவனுக்கே தாய் என்று அறிக்கையிட்டனர். இதனால் நொஸ்டோரியஸ் தப்பறைக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதன் பிறகு சிரில் அமைதியான வாழ்க்கை வாழத் தொடங்கினார், விவிலியம் தொடர்பாக பல நூல்களை எழுதினர். இப்படிப்பட்டவர் 444 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1882 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுனர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அலெக்ஸாண்ட்ரியா நகர தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
உண்மையின் உரைகல்லாயிருப்போம்
தூய சிரிலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் பொய்மையை எதிர்த்து, உண்மையை உரக்கச் சொன்னதுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகிறது. தூய சிரிலைப் போன்று நாம் உண்மையை உரக்கச் சொல்கிறோமா? அல்லது உண்மையைப் பேசுகின்றவர்களாக வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்பார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம், நாம் உண்மையின் வழியில் நடக்கின்றபோது, உண்மையைப் பேசுகின்றபோது அது நமக்கு எப்போதும் நலம் பயக்கும்.
ஒரு ஊரில் ஒருவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவன் செய்யாத பாவங்கள் இல்லை. ஒருநாள் ஒரு சாமியார் அவனிடம் வந்தார். "உன் பாவங்களை விட்டுவிடு!'' என்றார். அவனோ, "முடியாது!'' என்றான்.
"சரி பொய் மட்டுமாவது சொல்லாமல் இரு!'' என்றார். அவனும் சம்மதித்தான்.
மறுநாள் அவன் திருடுவதற்காக அரண்மனை பக்கம் வந்தான்.
அங்கே ராஜா மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தார். அவனிடம், "எங்கே போகிறாய்?'' என்று விசாரித்தார். அவனோ, "திருடப் போகிறேன்!'' என்றான். அரசர் தானும் வருவதாகச் சொன்னார். இவனும் சேர்த்துக் கொண்டான்.
அரண்மனைக்குள் சென்றான் திருடன். அரசர் காவல் காத்துக்கொண்டிந்தார். திரும்பி வந்த திருடன், "பெட்டியில் மூன்று ரத்தினங்கள் இருந்தன. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்து வந்தேன். ஆளுக்கு ஒன்று!'' என்று சொன்னான். அரசர் சம்மதித்தார்.
மறுநாள் விடிந்ததும் மந்திரியைக் கூப்பிட்டு, "அரண்மனையில் களவு போயிருக்கிறதா பார்த்து விட்டு வா!'' என்றார்.
பார்க்கப் போன மந்திரி ஒரு ரத்தினத்தை எடுத்து ஒளித்து வைத்தார். அரசனிடம் வந்து பெட்டியில் மூன்று ரத்தினங்கள் இருந்தன. காணப்படவில்லை என்று சொன்னார். அரசருக்கு உண்மை தெரிந்தது. அயோக்கிய மந்திரியை நீக்கிவிட்டு திருடனை மந்திரியாக்கிக் கொண்டார்.
உண்மை உங்களை விடுவிக்கும் என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு சான்று பகர்வதாய் இருக்கின்றது இந்தக் கதை.
ஆகவே, தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உண்மைக்கு சான்று பகர்வோம். உண்மையின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.