அரகான் நாட்டு அரசரின் அழகிய மகள் எலிசபெத் 1271 ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவ முதல், அவள் பக்தியும் செபமும் கலந்த ஒரு தனித்துவம் மிக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது பெற்றோர் நலமெனக் கருதியதால் அவர் தமது 12 ஆவது வயதில் போர்த்துக்கல் அரசர் டினிஸ் என்பவரை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
திறமைமிக்க தலைவராகிய டினிஸ் அவரது மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒழுக்கம் மற்றும் பிரமாணிக்கம் இல்Vத கணவராயிருந்தார். இருந்தபோதிலும், எலிசபெத் கணவரை மதிப்புடன் நடத்தி வந்தார். மேலும் தவறான முறையில் பிறந்த அவர் குழந்தைகளையும் படிக்க வைக்க உதவினார். ஆனால் தனது தந்தை, மாற்றாந்தாய் குழந்தைகள் மீது பிரியமாய் இருப்பதைக் கண்டு மகன் அல்போன்ஸா பொறாமை கொண்டு கொதித்தெழுந்தான். எலிசபெத் இவர்களிடையே சமாதானம் செய்ய முயன்றாலும், இருவருக்கும் இடையே வேற்றுமை வளர்ந்து, போர்க்களத்தில் போர் மூண்டது. அமைதியை ஏற்படுத்தும் இறுதி முயற்சியாக, எலிசபெத் இரண்டு படைகளுக்குமிடையே பயணித்து சமாதானம் செய்து வைத்தார்.
சேவையில் ஈடுபட்ட அரசி :
ஞானமும், கரிசனமும் உள்ள பெண்ணாகிய எலிசபெத் அனாதைகள் இல்லம் நிறுவினார். வீடில்லாதவர்க்கு தங்குவதற்கு இருப்பிடம் அமைத்து தந்தார். ஒரு கன்னியர் மடமும் ஏற்படுத்தினார். அவர் கணவர் உடல்நிலை மோசமானபோது அவரை விட்டு நீங்காமல் எலிசபெத் மட்டுமே உடனிருந்து கவனித்து வந்தார்.
கணவரது பிரிவினால் துயருற்று, தூய பிரான்சிஸ் சபையின் மூன்றாம் நிலையில் இணைந்து, ஏழைகளுக்கும் நோயுற்றோருக்கும் உதவுவதில் தன்னையே அர்ப்பணித்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அரசராகியிருந்த அல்போன்ஸோ ஒரு தனிப்பட்ட தகறாரின் காரணமாக காஸ்டைல் நாட்டு அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார். மறுபடியும் வயதான எலிசபெத் குதிரை மீதேறி படையைத் தொடர்ந்து சென்றார். அமைதி ஏற்பட அவரது முயற்சி வெற்றியளித்தது என்றாலும் இந்த முறை இந்த முயற்சி அவருக்கு வினையாய் இருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டு விரைவில் உயிர் நீத்தார். அவரது விருதுவாக்கு இன்று நமக்கு கிடைத்துள்ளது. நீ அமைதியை விரும்பினால் எல்லாம் நல்லதே நடக்கும்.
செபம் :
எங்கள் தந்தையே இறைவா, உமது வார்த்தையான இயேசு கிறிஸ்து இந்த பாவ உலகிற்கு சமாதானம் போதித்து வந்தார். மனுக்குலத்திற்கு மன்னிப்பு வழங்கினார். சாவை வென்றார். அவரது பெயரைத் தாங்கியிருக்கும் மக்களாகிய எங்களுக்கு அவரது முன் மாதிரியைப் பின்பற்றக் கற்பித்தருளும். எங்களது விசுவாசமும், நம்பிக்கை, நற்செயல்கள், வெறுப்பை அன்பாகவம் வேற்றுமையை ஒற்றுமையாகவும், சாவை நித்திய வாழ்வாகவும் மாற்றச் செய்தருளும். ஆமென்.
இவரது அடிச்சுவற்றில் :
தனது கணவர் மற்ற பெண்களோடு உறவு வைத்திருந்தது எலிசபெத்துக்கு எவ்வளவு மனவேதனை கொடுத்திருக்கும். பொறுமையுடனும் கனிவுடனும் கவனித்துக் கொண்டது நமக்கெல்லாம் வியப்பைத் தருகிறது. திருத்தந்தை அலெக்ஸாண்டர் இத்தகைய மனவலிமை குறித்து எழுதுகிறார். தவறுவது மனித இயல்பு, மன்னிப்பது இறை இயல்பு.
மன்னிப்பது என்பது குறிப்பாக நாம் அதிகமாக பாதிக்கப்படும் பொழுது, மிகவும் கடினம். ஆனால் குற்றம் சுமத்துவது, நம்மை அதிகமாகப் பாதிக்கும். பதிலாக, மன்னிபதற்கு உறுதுணையாக இருக்கும் புரிதல் கிடைப்பதற்கு செபம் செய்வோம். மன்னிப்பின் வழியாக, நீங்கள் அமைதியைக் கண்டடைவீர்கள்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் மன்னிப்புக்கு ஒரு அருமையான முன்னுதாரணம். அவர் உண்மையான மன்னிப்பு வழங்கினார். மேலும் தேவையானபோது மன்னிப்பு வேண்டினார்.
1981 ஆம் ஆண்டு தன்னை கொலை செய்ய முயற்சித்த மெக்மெத் அலி அக்கா என்பவருக்கு மன்னிப்பு வழங்கினார்.
மார்ச் 2000 ஆண்டில், ஹோலோகாஸ்ட்டில் பலியானவர்களுக்கும் மற்றும் பெண்கள் மாற்று சமயங்களைச் சேர்ந்த உயிர்த் தியாகிகளுக்காகவும் திருத்தந்தை மன்னிப்புக் கோரினார்.
மன்னிப்பது என்பது பணிந்து போவது அன்று ; அது கடவுள் வழியில் பயணிப்பதாகும்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 4
ஆகஸ்பர்க்கின் தூய உல்ரிச்
ஆகஸ்பர்க்கின் தூய உல்ரிச்
பிறப்பிடம் : ஆகஸ்பர்க், ஜெர்மனி
நினைவு நாள் : ஜூலை 4
ஆகஸ்பர்க்கின் ஆயர் மற்றும் பாதுகாவலர்
உல்ரிச் 890 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உயர்குடிமகனாகப் பிறந்தார். தூய கால் ஊரிலுள்ள பெனதிக்தன் துறவி மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஒரு மேன்மையான மாணவராக விளங்கினார். ஒரு குருவானவராகவோ அல்லது துறவியாகவோ ஆகவேண்டும் என்ற தெளிவில்லாமல் தனது மாமா, ஆக்ஸ்பர்க்கின் ஆயர் அடல்பெரோ அவர்களின் கீழ் மேற்கொண்டு பயிற்சி பெற்று வந்தார். அடல்பெரோ உல்ரிச்சை ஒரு மறைவட்டத் தலைவராக்கினார். சில ஆண்டுகளுக்குப் பின் அவரைத் தொடர்ந்து உல்ரிச் ஆயராக பொறுப்பேற்றார்.
உல்ரிச் ஒரு கண்டிப்பான ஆனால் கண்ணியமான ஆயராகவும் தனது சபை குருக்களின் ஒழுக்க நெறிகளை மேம்படுத்தவும் பாடுபட்டார். மக்களுக்கு மதம் எளிதாகப் பின்பற்றக்கூடியதாக இருப்பதற்காக அவர் அதிகமான தேவலாயங்களைக் கட்டி எழுப்பினார். மேலும் அவரது மறைமாவட்டத்தை ஒழுங்காக பார்வையிட்டு வந்தார். முதலாம் ஓட்டோ அரசருக்கு ஒரு வெற்றிகரமான ஆலோசகராகவும் இருந்த உல்ரிச் அரசவைக் கூட்டங்களில் கலந்து கொண்டும், அரசருக்கும் அவரது மகனுக்கும் ஏற்படும் பூசல்கள் பெரிதாகுமுன் அவற்றைத் தீர்த்து வைக்கவும் உதவினார்.
ஒரு வீரமுள்ள மனிதர் :
ஜெர்மனி மீது மேக்யார் மலைவாழ் மக்கள் போர் தொடுத்தபோது, உல்ரிச் ஒரு முக்கியமான ஊக்கமூட்டுபவராக செயல்பட்டார். காட்டு மிராண்டித்தனமான குதிரை வீரர்கள் ஆக்ஸ்பர்க்கை சூறையாட நுழைந்தபோது, உல்ரிச், மக்களை உசுப்பி விட்டு அவர்களை எதிர்க்கச் செய்தார். எல்லோரும் சேர்ந்து நகரைச் சுற்றி பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு, அரசர் வந்து அவர்களோடு போரிட வந்து அவர்களைத் துரத்தியடிக்கும் வரைக்கும் அவர்களை எதிர்த்து வெற்றிகரமாக சமாளித்தனர். அந்த நகரை திரும்பவும் கட்டியயழுப்ப உல்ரிச் உதவினார். மாவட்ட தலைமைக் கோவிலையும் புதுப்பித்தார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை தாராளமாக வழங்கினார்.
அவரது இறுதிக்காலத்தில், உல்ரிச் நோய்வாய்ப்பட்டார். ஒரு மடத்துறவியாக செயிண்ட்காலுக்கு திரும்புவதற்கு உறுதிகொண்டு, 972 இல் தனது மறைமாவட்ட ஆயர் பொறுப்பை விட்டு விலகினார். பின்பு நோயுற்று, சிலுவை வடிவில் சாம்பல் பரப்பப்பட்ட தரையின் மீது படுத்து சில நாட்களில் உயிர் துறந்தார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை 15 ஆம் யோவான் அவரை ஒரு புனிதராகத் திருநிலைப்படுத்தினார். இதுவே திருத்தந்தை புனிதர் பட்டம் அளித்ததின் முதல் எழுத்து வடிவிலான நிகழ்வாகும்.
செபம் :
தமது மக்களுக்கு உதவுவதற்கு உல்ரிச்சுக்கு வழிகாட்டிய அன்புத்தந்தையே, எங்களுக்குள்ளும் தலைமைப் பண்புகளை உயிர்ப்பூட்டச் செய்தருளும். கடினமான முடிவுகள் மேற்கொள்ள மனத்திடனையும், அடுத்தவரது தேவைகளுக்கு கருணையுடன் உதவவும், உண்மைகளை எதிர்கொள்ள உறுதியையும், அறிவார்ந்த முடிவுகள் எடுக்க ஞானத்தையும் தந்தருளும். உலகிற்கு முன்மாதிரியாகவும், நீதிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கச் செய்தருளும். உமக்கும் மக்களுக்கும் பணிபுரிவதே எங்கள் பணி என்பதை மறவாதிருக்கச் செய்தருளும்.
இவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி:
உல்ரிச், தலைவருக்கு ஒரு முன் மாதிரி. ஏழைகளுக்கு உதவுவதிலும், தனது மக்களை கடுமையான தாக்குதலிலிருந்து பாதுகாப்பதிலும், அரசியல் பிளவுகளைச் சரிசெய்வதிலும், தனது மக்களின் தேவைகளை நிறைவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். தங்களது பதவிகளை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள் பற்றிப் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். மனிதாபிமானத்தோடு உதவும் மக்களும் அதிகம் உள்ளனர். வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளிலிருந்து வந்தாலும் அடுத்தவருக்கு உதவுவதில் தன்னலமற்ற, அமைதியான ஈடுபாடு காட்டுகிறார்கள். உர்ரிச்சைப் போன்று பிறருக்கு பணிபுரிவதில் இவர்கள் முதன்மையானவர்கள்,
வகுப்புக்கு வெளியேயும் மாணவர்களைக் கண்காணித்;து கலந்து பேசுபவர்கள்
தங்கள் சமுதாயத்தில் தலைவர்களை ஒருங்கிணைத்து பொதுப்பணியாற்றும் இளைஞர்கள்.
தங்களின் பணியாட்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்தும் அலுவலக மேலாளர்கள்.
தங்களின் தொகுதி மக்களின் தேவைகளை முதன்மையாகக் கருதும் சட்டப் பேரவை உறுப்பினர்கள்.
தேசிய சாரணி படையினர் அல்லது இளைஞர் குழுக்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்.
உலகெங்குமுள்ள கணக்கிலடங்கா தன்னார்வ தொண்டர்கள் கடவுன் உதவியோடு, ஒரு தலைவனாக பணிபுரிய நீ மட்டும் உனது மனதைத் திறக்க வேண்டும்.