St. Adrian III |
St. Aguila & Prisca |
St. Procopius |
St. Gregory Grassi |
|
|
ஜுலை 8 தூய மூன்றாம் அத்ரியன்
தூய மூன்றாம் அத்ரியன்
பிறப்பிடம் : உரோம், இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 8
தகுதியான தலைவர்
திருத்தந்தை 3ஆவது அத்ரியன் சில காலம் திருத்தந்தையாக பொறுப்பு வகித்தார். திருத்தந்தை ஆவதற்கு முன்பாக அல்லது திருத்தந்தையாக அவரைப்ப ற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும் இவர் உரோமில், பெனதிக்த் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் என்பது தெரிகிறது. 884 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் அத்ரியன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்ரியன் ஒரு வலுவான ஆனால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய தலைமைப் பண்பைப் பெற்றிருந்தார் என்பது அவரது வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தெரிகிறது. உரோமையை தாக்கிய ஒரு கொடிய பஞ்சத்தை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றியதால், அவர் பரவலாக புகழ்ந்து பேசப்பட்டார், மற்ற ஆயர்களை விட அதிகம் இரக்கமுள்ளவராகத் திகழ்ந்தார்.
திருத்தந்தை பதவியானது, அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சர்ச்சைக்குள்ளானபோது அத்ரியன் ஆட்சிப் பொறுப்பிலிருந்தார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்துவ மறையைப் பரப்ப திருச்சபை போராடியது. கிரேக்க திருச்சபையாலும், பைசாந்திய பேரரசனாலும் உரோமுக்கு அவ்வப்போது சோதனைகள் வந்தன. உரோமில் சில சபைகளை தங்கள் வயப்படுத்த பெருமகனார்களிடம் திருத்தந்தையர் சண்டையிட்டு வந்தனர்.
திருத்தந்தை எட்டாம் யோவானின் கொள்கைகளை, திருத்தந்தையான அத்ரியன் கடைப்பிடித்து வந்தார். அத்ரியன் திருத்தந்தையாக அரியணையில் அமர்ந்தபோது, அத்ரியன் அவர்களை அமைதிப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவர் தனது ஆளுமையை நிலைநாட்டினார். மேலும் அவரது கொள்கைகளை பின்பற்றுவதை உறுதிசெய்தார்.
பேரரசருக்கு பணிபுரிய :
மேற்கு ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகளால் அந்தக் காலத்தில் திருத்தந்தையர் சிக்கிக் கொண்டனர். அத்ரியனும் அதற்கு விதிவிலக்கல்ல. 885 ஆம் ஆண்டு மூன்றாம் சார்லஸ் பேரரசன் வார்ம்ஸ் நகரில் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டான். சார்லஸின் வாரிசு அல்லாத மகனுக்கு வாரிசு உரிமை எதிர்பார்த்து அவனது அரசவைக்கு அழைத்தான். ஆனால் அத்ரியன் வார்ம்ஸக்குச் செல்லவில்லை. இத்தாலியில் மோதனா அருகில் அவர் இறந்தார். அவர் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டார் என்று வதந்திகள் தெரிவித்தன. நோனந்துலாவில் தூய சில்வெஸ்டர் குருமடத்தில் திருத்தந்தை அத்ரியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செபம் :
விண்ணகத் தந்தையே, குழப்பம், பஞ்சம், சச்சரவு போன்ற காலங்களில், சரியானவற்றையே செய்வதற்கு எங்கள் தலைவர்களுக்கு ஞானத்தையும் வலிமையையும் தந்தருளும். அவர்கள் உம்முடைய அன்பில் பங்கு கொண்டு, எல்லோருக்கும் மிகுந்த நன்மை பயக்கும் பாதையைக் கண்டடைய அருள்புரியும். சில நேரங்களில் தீமைக்கு எதிராக கரங்களை உயர்த்தத் தயாராயிருக்கவும், அமைதி நிலைக்கப் பாடுபடவும், வேதனைகளைக் குறைக்க வழிதேடவும் செய்தருளும். சோதனை வேளைகளில் உமது மகனாகிய இயேசுவின் ஆறுதலைப் பெறவும் அருள்புரியும்.
இவர்களின் அடிச்சுவற்றில் :
அரசியல் கிளர்ச்சிகளுக்கும், திருத்தந்தையர் படுகொலை செய்திகளுக்கும் நடுவில் குழப்பமான சூழ்நிலையில் அத்ரியன் ஆட்சியைப் பிடித்தார். சில கூட்டத்தினரை பகைக்காமலும், சில எதிரிகளை உருவாக்காமலும் பதவிக்கு வருவது அத்ரியனுக்கு கடினமானதாக இருந்திருக்கும்.
போராட்ட நேரங்களில், அரசியல் தலைவர்கள், அதிகமாக ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். 5,00,000 போர் வீரர்கள் வியட்நாமில் போர்புரிந்தபோதுதான் ரிச்சர்ட் நிக்ஸன் 1969 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ராபர்ட் கென்னடி மற்றும் மார்ட்டின் லூத்தர்கிங் கொலை செய்யப்பட்டு அமெரிக்காவில் குழப்பநிலை இருந்தது. நிக்ஸன், எல்லா குழப்பங்களையும் தீர்க்க இயலவில்லை என்றாலும் அவரது வாட்டர்கேட் ஊழல் அவரது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தினாலும், அவரது ஆட்சியில் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டாலும் நிக்ஸன் அவரது நாட்டுக்கு நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
கம்யூனிச சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார்.
அணுஆயுத, குறைப்புக்காக சோவியத் யூனியனுடன் முதல் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க உலக அளவில் செலவு செய்வதை ஆதரித்தார்.
கெட்ட காலத்தை நல்லதாக மாற்ற நாம் சில நேரங்களில் அழைக்கப்படுகிறோம். உங்களுடைய நம்பிக்கையும் கிறிஸ்துவ மதிப்பீடுகளும் உங்கள் வழிகாட்டியாக அமையட்டும்.
லி.ஜெ. ஜோசப்
|
ஜுலை 8 புனிதர்கள் அக்கிலாவும் பிரிஸ்காவும்
புனிதர்கள் அக்கிலாவும் பிரிஸ்காவும்
பிறப்பிடம் : ஏசியா மைனர்
நினைவு நாள் : ஜூலை 8
கற்றுக்கொடுத்தலும் பகிர்தலும்
பவுலின் சீடர்கள் மற்றும் தொடக்க கால மறைபரப்பாளர்கள்
அக்கிலா மற்றும் அவர் மனைவி பிரிஸ்கா பற்றி தெரியவருவதெல்லாம் புதிய ஏற்பாட்டின் பல புத்தகங்கள் வழியாகத்தான் முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அக்கிலாவும் பிரிஸ்காவும் உரோமில் வசித்து வந்தனர். கிளாதியஸ் பேரரசர் அனைத்து யூதர்களையும் உரோமிலிருந்து துரத்தியடித்தபோது, யூதர்களான இந்த தம்பதியரும் உரோமை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். அக்கிலாவும் பிரிஸ்காவும் கொரிந்து நகர் சென்று குடியேறினர். அங்கு, திருச்சபையை நிறுவுவதற்கு காரணமாயிருந்தவர்களில் முக்கியமானவரான பவுலை முதன் முறையாகச் சந்தித்தனர். இதுதான் ஒரு நீண்ட நெருக்கமான நட்பின் தொடக்கமாகும்.
பவுலைப் போலவே, அக்கிலாவும் பிரிஸ்காவும் கூடாரம் செய்பவர்களாக இருந்தார்கள். இந்த மூவரும் ஒன்றிணைந்து வேலை செய்யத் தொடங்கினர். மேலும் பவுல் அவர்களோடு வசித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில் தங்களது வாழ்வை திருச்சபைக்காக அர்ப்பணம் செய்து, அக்கிலாவும் பிரிஸ்காவும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். திருத்தூது பயணமாக பவுல் சிரியா சென்றபோது, அக்கிலாவும் பிரிஸ்காவும் அவரைத் தொடர்ந்து சென்றனர்.
நம்பிக்கையின் ஆசிரியர்கள் :
இந்த மறைபரப்பாளர்கள் எபேசில் தங்கி விட்டனர். பவுல் மட்டும் அந்தியோக்கு வரை பயணத்தைத் தொடர்ந்தார். எபேசு நகரில், கிறிஸ்துவத்தை சமீபத்தில் தழுவி, தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் போதித்து வந்த அப்பல்லோஸ் என்பவரைப் பற்றி அக்கிலாவும் பிரிஸ்காவும் கேள்விப்பட்டனர். திடமான நம்பிக்கையாளராகவும், தூண்டி எழுப்பக்கூடிய பேச்சாளராக இருந்தாலும் தனது புதிய மறைக்கொள்கைகளின் நுணுக்கங்களை கூறுகளைச் சொல்ல மறந்து விட்டார். அக்கிலாவும் பிரிஸ்காவும் அவருக்குக் கற்றுக்கொடுத்தனர், கடவுளின் திருவுளத்தை வெளிப்படுத்தினர்.
கோவிலுக்காக வழங்கப்பட்ட கோவில் :
பவுல் பின்னர் எபேசுக்குத் திரும்பி வந்தார், அக்கிலா பிரிஸ்காவுடன் மீண்டும் தங்கினார். தங்கள் இல்லத்தை கோவிலாகப் பயன்படுத்த அனுமதித்தனர். அவர்கள் ரோமுக்கு திரும்பிய பின்னரும் இதே போன்று செய்தனர். கடவுளுக்காக அவர்கள் செய்த சேவையை தனியாக எடுத்துச் சொன்னார். இரண்டு முறை கிறிஸ்துவ கூட்டமைப்புகளுக்கு எழுதிய கடிதங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது அயராத உழைப்பு கிறிஸ்துவம் தழைத்தோங்க காரணமாயிருந்தது. ஏசியா மைனரில் அக்கிலாவும் பிரிஸ்காவும் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்று உரோமை மறைசாட்சிகள் சரிதை கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கைக்குரிய தம்பதியர் உரோமையில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்று பாரம்பரியம் கூறுகிறது.
செபம் :
ஓ இயேசுவே, உலகின் எல்லா வயல்களிலிருந்தும் அறுவடைகளை சேகரிக்க உமது திருத்தூதர்களை அனுப்பினீர். எல்லா மக்களினங்களையும் சிலுவையில் உயிர்நீத்த உம்மிடம் அழைத்துக் கொள்வதாக வாக்களித்தீர். எங்களுக்கு உண்மையை உணர்த்தியவர்களையும், உமது அருளில் பங்குபெறச் செய்தவர்களையும் எங்களிடம் அனுப்பியதற்காகவும் நாங்கள் நன்றி கூறுகிறோம் - திருத்தந்தை 23 ஆம் யோவான்.
இவர்களது இடிச்சுவட்டில் :
அர்ப்பண உணர்வுள்ள மறைபரப்பாளர்கள் அக்கிலாவும் பிரிஸ்காவும் மனப்பூர்வமாக தங்கள் இல்லத்தை கோவிலாக மாற்றினார்கள். கடவுளுடைய வார்த்தைகயை பரப்புவதற்கு மற்றுமொரு மறைபரப்புப் பணி தம்பதியர் ஜெரியும், ஃபெயித் மேக் கொல்லோவும் ஆர்வம் கொண்டனர்.
மத்திய ஐரோப்பாவில், மறைபரப்பாளர்களான ஜெர்ரியும், ஃபெயித்தும் சமயம் சார்ந்த நூல்கள் வழியாக மக்களைத் தொடர்பு கொண்டனர். அதிகமான மக்கள் குறிப்பாக முந்தைய கம்யூனிச நாடுகளிலுள்ளவர்கள் பெரும்பாலான தலைவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் என்பதை அறியாதிருந்தார்கள். இந்த தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து ஒவ்வொரு தலைவருடைய கிறிஸ்துவ பின்னணியையும் புத்தகங்கள் வாயிலாக எடுத்துச் சொல்லி நற்செய்தி நூலிலிருந்து அறிவுரைகளையும் எடுத்துரைத்தார்கள்.
ஃபெயித்தும் ஜெர்ரியும் வேறு வழிகளிலும் தங்கள் செய்தியைப் பரப்பினர்.
மறைபரப்புப் பணியில் ஈடுபடும் குடும்பத்தினர் மற்றும் தந்தையர்களுக்கான படவிளக்கப் புத்தகங்கள் வெளியிட்டனர்.
பைபிள் கதை, சிரிப்பு புத்தகங்கள் அச்சிட்டு 27 மொழிகளில் வெளியிட்டனர்.
கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக தங்களது சிலேவிக் பண்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினர். கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொல்வதற்காக, கடவுள் உனக்குக் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்தி செயல்படுவாயாக.
லி.ஜெ. ஜோசப்
|
ஜுலை 8 தூய புரோகோபியஸ்
தூய புரோகோபியஸ்
பிறப்பிடம் : ஜெருசலேம்
நினைவு நாள் : ஜூலை 8
வீரம் விழைபவர்
கசாரியா வின் முதல் மறைசாட்சி
மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் எருசலேம் நகரில், பழங்கால மறைசாட்சி புரோகோபியஸ் பிறந்தார். கெசாரியா மறைமாவட்ட ஆயரும், திருச்சபையின் வரலாற்று அறிஞருமான ஈசுபியஸ் எழுதிய பாலஸ்தீன மறைசாட்சிகள் என்ற நூலில் இவரது வாழ்க்கை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஈசுபியஸ்டன்படி புரோகோபியஸ் ஒரு எளிய மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அந்த கடமையுணர்வுள்ள மனிதர் ஒவ்வொரு இரண்டாம் அல்லது மூன்றாம் நாளில் ரொட்டியும் தண்ணீரும் பருகி வந்தார். கடுமையான தவத்திலும் திருநூல்களைப் படிப்பதிலும் தனது நாட்களைச் செலவிட்டு வந்தார்.
பின்னர், புரோகோபியஸ், சைதோபோலிஸ் நகரில் வசிக்கச் சென்று அங்கு ஆய்வு படிப்பாளராகவும் சிரியாக் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். இதன் காரணமாக அவரது பணியினிமித்தம் கசாரியா சென்றார். இந்தக் காலக்கட்டத்தில் உரோமை பேரரசு முழுவதிலும், தியோகிளேசியன் என்னும் உரோமைப் பேரரசன், கிறிஸ்தவர்களைக் கொடுமைப் படுத்தத் தொடங்கினான். புரோகோபியஸ் கசாரியாவுக்குள் நுழைந்ததும், அவர் கைது செய்யப்பட்டு, ஆளுநருக்கு முன் கொண்டு செல்லப்பட்டார்.
கிறிஸ்துவின் மறைசாட்சி :
பொய் தெய்வங்களுக்கு பலியிட இவருக்கு நடுவர் பணித்தபோது புரோகோபியஸ் ஒரே ஒரு கடவுள் மட்டும் இருக்கிறார் என்று உரக்க ஆணைவிட்டார். அரசருக்கு ஒரு பலிசெலுத்த அவரை அந்த நடுவர் வற்புறுத்தினார். இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே அரசர் ஒரே ஆட்சியாளர் என்று கூறி புரோகோபியஸ் மறுபடியும் மறுத்தார். புரோகோபியஸ் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததால், அவரது சிறைச்சேதம் ரத்து செய்யப்பட்டு, கெசாரியாவின் முதல் மறைசாட்சியானார்.
உண்மையான புரோகோபியஸ் :
காலப்போக்கில், நாட்காட்டி நிபுணர்களுக்கும் குழப்பம் விழைவிக்கும் வண்ணம் புரோகோபியஸின் தனித்தும் பற்றி வியத்தகு கதைகள் புனையப்பட்டன. அவர் ஒரு கடுந்துறவி என்றும், ஒரு பலமிக்க படைவீரர் என்றும், ஒரு பாரசீகத்தவர் என்றும் வருணிக்கப்பட்டார். ஆனால், உண்மையான புரோகோபியஸ் தனது அசையாத நம்பிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பணிவான துறவி.
செபம் :
தந்தையே, தவறு செய்பவர்களை கண்டிக்கும் மனத்திடன் உண்மையிலேயே வரவழைப்பது கடினம். தன்னுடைய முன்னுதாரணத்தினால் தூய புரோகோபியஸின் இந்த தியாகம் விண்ணுலகில் பெரிய வெகுமதியைப் பெற்றுத்தரும் என்று காட்டியுள்ளார். நேர்மையான வழிகளிலிருந்து தடுமாறச் செய்யும் பயத்தை விட்டொழிக்கவும், உறுதியான மனதையும் அறிவையும் உருவாக்க மனவலிமை தாரும். இறைவா, எப்போதும் என்னருகில் இரும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மேலெழுந்த வாரியான அறிவினால் முடிவெடுக்கும் மக்களால் தீர்ப்பிடப்படுவது எவ்வளவு தவறானது என்று புரோகோபிய‘க்குத் தெரியும். பல நூற்றாண்டுகளுக்குப் பின், லிடியா ஓ லியரி என்பவரும், அவரை முழுவதுமாக அறியாமல் அவசரத்தில் தீர்ப்பிடும் மக்களிடமிருந்து வேற்றுமைப்படுத்தப்படும் அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
தனது முகத்தில் ஒரு சிவப்பு புள்ளி பிறவியிலேயே இருந்ததால், 1940 களில், லிடியா வேலை தேடுவதில் சிரமப்பட்டார். தோல்விக்கு அடிபணியாமல், அதை மேற்கொள்ள ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தார். வேதியலிலும், ஓவியக்கலையிலும் தேர்ச்சி பெற்றவரான இவர் தனது முகத்திலுள்ள புள்ளியை மறைப்பதற்கு ஒரு மேல்பூச்சு உருவாக்கினார். அதை மறைக்கும் பூச்சு என்றழைத்தார். அந்த மேல் பூச்சு பயன்படுத்தி ஒரு வேலையில் அமர்ந்தார். லிடியாவின் ஆக்கப்பூர்வ செயல் மற்றும் பலருக்கு உதவியாயிருந்தது.
அவரது முகப்பூச்சு வெறும் அலங்கார முகப்பூச்சு அல்ல என்று அங்கீகரித்து அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டு அதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தந்தது.
இதுபோன்று முகத்தில் பழுது பட்டவர்களுக்கு, லிடியா முகப்பூச்சு செய்து அவர்களது முகத்தோற்றத்தை சரிசெய்தார்.
லிடியாவின் இந்த முனைப்பு, அவரை தாழ்வாக நடத்தியவர்களை எதிர்த்து போராட மன உறுதியைத் தந்தது.
லி.ஜெ. ஜோசப்
|
ஜுலை 8 ✠ புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி ✠
✠ புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி ✠
✠ புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி ✠
துறவி, ஆயர், மறைசாட்சி :
பிறப்பு : டிசம்பர் 13, 1833
காஸ்டெல்லஸோ போர்மிடா, பிட்மாண்ட், இத்தாலி
இறப்பு : ஜூலை 9, 1900
டையுவன், ஷன்க்ஸி, சீனா
புனிதர் பட்டம் : அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள் : ஜூலை 8
புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி, ஒரு “இத்தாலிய பிரான்சிஸ்கன் துறவியும்” (Italian Franciscan Friar), ஆயரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் மறைசாட்சியாகவும் புனிதராகவும் கௌரவிக்கப்படுபவருமாவார். 2000ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் தேதியன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட 120 சீன மறைசாட்சியருள் (120 Martyrs of China) இவரும் ஒருவராவார்.
“பியர்லுய்கி கிரஸ்ஸி” (Pierluigi Grassi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலி நாட்டின் “பியட்மாண்ட்” (Piedmont) பிராந்தியத்தின் “காஸ்டெல்லஸோ போர்மிடா” (Castellazzo Bormida) எனுமிடத்தில், கி.பி. 1833ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதியன்று, பிறந்தார்.
தமது 15 வயதில், 1848ம் ஆண்டு, நவம்பர் மாதம், 2ம் தேதியன்று, “ரொமாக்னா” (Romagna) பிராந்தியத்திலுள்ள “மான்ட்டியானோ” (Montiano) என்னுமிடத்திலுள்ள ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்தில் வார்த்தைப்பாடு எடுத்துக்கொண்டார். தமது பெயரையும் “கிரகோரி” (Gregory) என்று ஏற்றுக்கொண்டார். பின்னர், இறையியல் கற்பதற்காக “போலோக்னா” (Bologna) அனுப்பப்பட்ட இவர், 1856ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 17ம் நாளன்று, “மிரண்டோலா” (Mirandola) நகரில், குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
பின்னர், சீன (China) நாட்டில் செய்யவேண்டிய மறைப்பணிக்கான தயாரிப்புக்கான பயிற்ச்சிகளுக்காக ரோம் (Rome) அனுப்பப்பட்டார்.
கி.பி. 1860ம் ஆண்டு, வட சீனாவிலுள்ள “டையுவன்” (Taiyuan) நகர் அனுப்பப்பட்ட இவர், மறைப்பணி பரப்பாளராகவும், மறைப்பணியின் அனாதைகள் இல்லத்தின் இயக்குனராகவும், பாடல் குழுவின் தலைவராகவும் நியமனங்களைப் பெற்றார்.
கி.பி. 1876ம் ஆண்டு, (Apostolic Vicariate of Shansi) ஆக தேர்வு செய்யப்பட்டார். 1891ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6ம் தேதியன்று, சீன மக்களுக்கு பிரான்சிஸ்கன் வாழ்வில் அணுகல் வழங்குவதற்காக “ஷன்க்ஸி” (Shanxi) எனுமிடத்தில் ஒரு புகுநிலை (Novitiate) மடம் ஒன்றினை நிறுவினார். அதிகமாக உழைக்கும் மறைப் பணியாளர்களுக்காக ஒரு ஓய்வு இல்லம் ஒன்றினையும் கட்டினார்.
பிளேக் (Plague) மற்றும் பஞ்சம் (Famine) போன்ற பேரழிவுகளால் பாதிப்படைந்த மக்களுக்காக அக்கறையுடன் சேவையாற்றினார். இவர்களுக்காக நகரில் ஏற்கனவேயுள்ள அநாதை இல்லங்களை பெரிது படுத்தினார். வேறு பல இல்லங்களையும் நிறுவினார்.
கி.பி. 1899ம் ஆண்டு முதல் 1901ம் ஆண்டு வரை, சீனாவிலிருந்த வெளிநாட்டினர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கெதிராக பெரும் கலகம் ஒன்று வெடித்தது. இது “பாக்ஸர் கலகம்” (Boxer Rebellion) என்று அழைக்கப்பட்டது. பேரரசி “டோவகர் சிக்ஸி” (Empress Dowager Cixi) “வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போரை அறிவிக்கும் அரசு ஆணை’யை” (Imperial Decree of declaration of war against foreign powers) பிரகடனப்படுத்தினார்.
கிரகொரி தப்பி ஓடுமாறு வலியுறுத்தப்பட்டார். ஆனால் கிரெகொரி பின்வருமாறு பதிலளித்தார்.:
“நான் எனக்கு பன்னிரண்டு வயதானபோதே, கடவுளுக்காக மறைசாட்சியாக உயிர்த்தியாகம் செய்யும் நிலை வேண்டி வரம் கேட்டேன். இப்போது நான் ஏங்கின காலம் வந்துவிட்டது, நான் ஓடிப்போகலாமா?”
“டையுவன்“ (Taiyuan) நகரில் கிரகொரியும் அவருடன் சுமார் பன்னிரண்டு மிஷனரிகளும், நான்கு பிற துறவியரும், “மரியாளின் பிரான்சிஸ்கன் மிஷினரிகள்” (Franciscan Missionaries of Mary) ஏழு பேரும், “புனிதர் பிரான்ஸிசின் மூன்றாம் நிலை (Third Order of St. Francis) சபையின் 11 சீன நாட்டு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். அடித்து சிதைக்கப்பட்ட அனைவரும் இரும்பு கூண்டுகளில் அடைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டனர். அக்கம்பக்கத்து கிராமங்களினூடே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஜூலை மாதம், 8ம் தேதியன்று, அவர்கள் “டையுவன்“ (Taiyuan) நகருக்கு திரும்ப இழுத்து வரப்பட்டனர். மறுநாள் ஒன்பதாம் தேதி, “யூக்ஸியன்” (Yuxian) என்ற ஆளுநர் அத்தனை பேரையும் கழுத்தை வெட்டி கொன்றான். இதனை “டையுவன் படுகொலை“ (Taiyuan Massacre) என்றழைக்கின்றனர்.
“பாக்ஸர் கலகம்” (Boxer Rebellion) காலத்தின்போது, 5 ஆயர்களும், 50 குருக்களும், 2 அருட்சகோதரர்களும், 15 அருட்சகோதரியரும் 40,000 சீன கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1906ம் ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் துறவியரால் சேவை செய்யப்பட்ட 146,575 கத்தோலிக்கர்கள், கி.பி. 1924ம் ஆண்டு, 303,760 பேராக பல்கிப் பெருகினர். அப்போது, 282 ஃபிரான்சிஸ்கன் துறவியரும், 174 உள்ளூர் குருக்களும் இருந்தனர்.
லி.ஜெ. ஜோசப்
|
|