ஜுலை 17
தூய நான்காம் சிங்கராயர்
தூய நான்காம் சிங்கராயர் (ஜூலை 17)
நிகழ்வு
Incendio di Borgo என்ற புத்தகத்தில் திருத்தந்தை நான்காம் சிங்கராயரைக் குறித்து இடம்பெறுகின்ற நிகழ்வு. ஒருசமயம் உரோமையானது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மக்களெல்லாம் செய்வதறியாது திகைத்தார்கள். அப்போது திருத்தந்தை அவர்கள் தன்னுடைய சிற்றாலயத்தில் முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் ஜெபிக்கத் தொடங்கிய ஒருசில மணிநேரங்களிலே பற்றி எரிந்த தீ, அப்படியே அணைந்து போனது. இதைப் பார்த்த மக்கள் அனைவரும் திருத்தந்தை அவர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவு கூரும் நான்காம் சிங்கராயர் 790 ஆம் ஆண்டு உரோமையில் பிறந்தார். இவர் வளர்ந்தது படித்தது எல்லாமே உரோமையில்தான். உரோமையில் இவர் படித்துக் கொண்டிருக்கும்போது, திருத்தந்தை நான்காம் கிரகோரியாரின் நட்பு கிடைத்தது. அதன்மூலம் இவர் திருத்தொண்டராக உயர்ந்தார்.
பின்னாளில் திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுசின் மறைவிற்குப் பின்னர், இவர் நான்காம் சிங்கராயர் என்ற பெயருடன் திருத்தந்தையாக உயர்ந்தார். அந்நாட்களில் அரேபியர்களின் படையெடுப்புகளால் உரோமையில் இருந்த பல ஆலயங்கள் சேதமுற்று இருந்தன. அவற்றுக்கெல்லாம் புதுவடிவம் கொடுத்து, புதுப் பொழிவாக்கினார். அதோடு கூட, உரோமைக்குள் எதிரிகளின் படைகள் வராத வண்ணம் சுற்றிலும் மதில்சுவர்களைக் கட்டியெழுப்பினார். இதனால் எதிரிகளின் தாக்குதல் படிப்படியாகக் குறைந்தன.
847 ஆம் ஆண்டிலிருந்து 855 வரையிலாக இவர் திருத்தந்தையாக பணியாற்றிய கால கட்டங்களில் மூன்று முறை குருக்கள் மன்றத்தைக் கூட்டி, வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தார் அதே நேரத்தில் குருக்களிடம் இருந்த ஒருசில தவறான போக்குகளையும் கடுமையாகக் கண்டிருந்தார். இதனால் ஒருசிலரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் தன்னுடைய கண்ணியமான நடத்தையால் சரிசெய்தார்.
இப்படி திருச்சபையின் வளர்ச்சிப் பணிகளின் தன்னை முழுமையாய் கரைந்துக்கொண்டு, திருச்சபையை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காத்த திருத்தந்தை நான்காம் சிங்கராயர் 855 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 17 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய நான்காம் சிங்கராயரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஆண்டவரின் துணை நம்பி இறைப்பணியை திறம்படச் செய்வோம்.
திருத்தந்தை நான்காம் சிங்கராயருடைய வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் திருச்சபையின் வளர்சிக்காக பல பணிகளையும் செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. இத்தகைய வளர்ச்சிப் பணிகளையெல்லாம் செய்வதற்கு, அவருக்கு எது ஆற்றலையும் வல்லமையையும் தந்தது என்று பார்க்கின்றபோது, அவர் இறைவன்மீது கொண்ட நம்பிக்கைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகையால், இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கையே ஒருவருக்கு எல்லாவிதமான ஆற்றலையும் வல்லமையையும் தருகின்றது என்பது உண்மையாகின்றது.
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் கூறுவார், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று. (4:13) ஆம், பவுலடியார் மேற்கொண்ட திருத்தூது பயணங்கள், செய்த வல்ல செயல்கள், நற்செய்தி அறிவிப்புகள் யாவும், அவர் இறைவன் மீது கொண்ட நம்பினால் மட்டுமே சாத்தியப்பட்டது என உறுதியாகச் சொல்லலாம்.
இன்றைக்குப் பலர் இருக்கின்றார்கள். இவர்களுடைய நினைப்பு எல்லாம், தங்களால் எதையும் செய்துவிட முடியும் என்பதுதான். தன்னம்பிக்கை இருப்பதில் தவறில்லை. அதற்காக தலைக்கனத்தோடு தன்னால் எதையும் செய்துவிட முடியும் என்று இருந்தால், நம்மால் ஒன்றுமே செய்துவிட முடியாது. தொடக்க நூல் பதினோறாவது அதிகாரத்தில் வரக்கூடிய ஒரு நிகழ்வு பாபேலில் கோபுரம் கட்டுவதாகும். பாபேலில் மக்கள் கோபுரத்தைக் கட்டுகின்றபோது, உலகில் தங்களைவிட பெரியவர் யாருமில்லை, தங்களுடைய பெயர் என்றைக்கும் நிலைக்கவேண்டும் என்ற ஆணவத்தில் கட்டுகின்றார்கள். ஆனால் நடந்தோ வேறொன்று. ஆம், அவர்கள் ஆணவத்தோடு கோபுரம் கட்டியதால், கடவுள் அவர்களை சிதறடிக்கின்றார். இறைவனின் துணையில்லாமல் நம்மால் எதையும் சாதித்துவிட முடியும் என்று நினைக்கின்றபோது, நமக்கு பாபேலில் கோபுரம் கட்டியவர்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்.
ஆகவே, நம்முடைய ஆன்மீக பயணத்தில், திருத்தந்தை நான்காம் சிங்கராயரைப் போன்று இறைவனுடைய துணையை நம்பி, நம்முடைய பணிகளைச் செய்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் எப்போதும் நடப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம் |