St. Laurence St. Philomena

ஆகஸ்டு 10

புனிதர் லாரன்ஸ்

mary

✠ புனிதர் லாரன்ஸ் ✠
(St. Lawrence)

திருத்தொண்டர், மறைசாட்சி :
(Deacon and Martyr)

நிகழ்வு

உரோமை நகரை வலேரியான் என்ற கொடுங்கோலன் ஆட்சிசெய்த தருணம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிறிஸ்தவத் தலைவர்களைக் கொன்றுபோட்டால் கிறிஸ்தவர்கள் சிதறுண்டு போவார்கள் என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது. எனவே, அவன் அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவரை அவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சிறைபிடித்துச் சென்றான். இதைப் பார்த்த, அவருடைய முதன்மைத் திருத்தொண்டராகிய லாரன்ஸ் திருத்தந்தையிடம், “தூய தந்தையே! வழக்கமாக நீங்கள் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வீர்களே, இன்றைக்கு மட்டும் ஏன் நீங்கள் தனியாகச் செல்கிறீர்கள். அப்படி நான் என்ன பாவம் செய்தேன். தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார். அதற்கு அவர், “இன்னும் மூன்று நாட்கள் கழித்து என்னைப் போன்று நீயும் மறைசாட்சியாகக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவாய், அதுவரை பொறுத்திரு மகனே” என்றார்.

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட இழுத்துச் செல்லப்பட்ட நாள் 258 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள். அதிலிருந்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் பத்தாம் நாள் திருத்தொண்டர் லாரன்ஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

திருத்தொண்டர் லாரன்ஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹுஸ்கா (Huesca) என்னும் நகரில் பிறந்து, அங்கேயே வளர்ந்தார். ஒருசமயம் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைபோதகப் பணிக்காக அங்கு சென்றபோது லாரன்சை சந்தித்தார். அவர் பக்தியுள்ள, துடிப்புள்ள இளைஞராய் இருப்பதைப் பார்த்த திருத்தந்தை அவரைத் தன்னோடு உரோமை நகருக்கு அழைத்துக்கொண்டு வந்து முதன்மைத் திருத்தொண்டராக நியமித்தார்.

திருத்தொண்டராக மாறிய லாரன்சுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் இரண்டு. ஒன்று இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தைதையும் இறைமக்களுக்குக் கொடுப்பது. இரண்டாவது திருச்சபையின் சொத்துகளுக்குப் பொறுப்பாய் இருந்து, அவற்றை தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது. இந்த இரண்டு பணிகளையும் திருத்தொண்டரான லாரன்ஸ் சிறப்பாகச் செய்தார். இத்தகைய தருணத்தில்தான் கொடுங்கோலன் வலேரியன் திருச்சபைச் சொத்துகளை, திருப்பலிக்காக பயன்படுத்தப்படும் திருப்பண்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கச் சொன்னான். இதற்கிடையில் திருத்தந்தை சிக்ஸ்துஸ் என்பவரையும் அவரோடு சேர்த்து நான்கு திருத்தொண்டர்களையும் அவன் கொன்றுபோட்டான்.

திருச்சபையின் சொத்துகள், உடைமைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசன் சொன்னதால், திருச்சபையின் உடமைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார். அது வேறொன்றுமில்லை, திருச்சபையின் உடைமைகள் அனைத்தையும் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அரசன் திருத்தொண்டர் லாரன்சை அழைத்து, திருச்சபையின் சொத்துக்கள் எங்கே என்று கேட்டபோது, அவர் ஏழைகள், அனாதைகள், வறியவர்கள் போன்றோரை அழைத்து வந்து, இவர்கள்தான் திருச்சபையின் சொத்துக்கள் என்றார். இதைக் கேட்டு சினமடைந்த அரசன், அவரை ஒரு இரும்புக் கட்டிலில் கிடத்தி, அதன் அடியில் தீமூட்டச் சொன்னான். திருத்தொண்டர் லாரன்ஸ் தீயில் எரிந்தபோது, எதற்கும் பயப்படாமல் கடவுளைப் போற்றி புகழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய உடல் நன்றாக எரிந்துவிட்ட வேளையில், அங்கிருந்தவர்களைப் பார்த்து, “என்னுடைய உடல் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது. இன்னொரு பக்கம் சரியாக எரியவில்லை, அதனால் என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள்” என்றார். இதைக் கேட்ட அரசனும் அங்கிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். லாரன்ஸ் இறுதி வரைக்கும் இறைவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இறந்த லாரன்சை காம்போ வேறோனாவில் அடக்கம் செய்தார்கள். இந்த இடத்தில் மன்னன் கான்ஸ்டாண்டிநோபல் என்ற மன்னன் ஓர் ஆலயம் எழுப்பினான். ஆறாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கொனோரியஸ் என்பவர் அதனை அழகுபடுத்தி மிகப்பெரிய பேராலயமாக மாற்றினார். இன்றைக்கு உரோமை நகரில் உள்ள ஏழு பேராலயங்களில் திருத்தொண்டர் லாரன்சின் பேராலயமும் ஒன்று.

கி.பி.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான புருடேன்சியஸ், “திருதொண்டராகிய லாரன்சின் மன்றாட்டினால்தான் உரோமை நகரானது ஒளிபெற்றது” எனச் சொல்வார். அந்தளவுக்கு இவரின் வேண்டுதல் வல்லமை மிக்கதாக இருந்தது. அதேபோன்று தொடக்க திருச்சபையில் திருத்தொண்டர் லாரன்ஸ் திருத்தூதர்களான தூய பேதுரு, பவுல் போன்றோருக்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட்டர். அந்தளவுக்கு இவர் தொடக்க திருச்சபையில் மிகவும் பிரபலமாக இருந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தொண்டரான தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவன்மீது அன்பு

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?” (உரோ 8:35). ஆம், பவுலிடம் இவ்வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் தூய லாரன்ஸ். அவர் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் எதையும், ஏன் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் நாம், நம் திருத்தொண்டராகிய தூய லாரன்சை போன்று, கிறிஸ்துவுக்காக நம்முடைய உயிரையும் இழக்கத் துணிந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் கூறுவார், “எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைத்திருக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கின்றார். சிறுதுகாலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிபடுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்” (1 5:10-11). ஆம், நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் அவருக்காக நாம் துன்பங்களை ஏற்றுகொள்ளும்போது அவர் நம்மை மகிமைப்படுத்துவார் என்பது உறுதி.

அடுத்தவர்மீது அன்பு

திருத்தொண்டரான தூய லாரன்ஸ் இறைவன்மீது மட்டும் அன்பு கொண்டிருக்கவில்லை. அவர் தன்னோடு வாழ்ந்த சக மனிதர்களிடத்திலும் குறிப்பாக ஏழை எளிய மக்களிடத்திலும் அன்பு கொண்டிருந்தார். அவர்களுக்காக திருச்சபையின் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்தார். தூய லாரான்சைப் போன்று நாம் நம்மோடு வாழும் ஏழை எளிய மக்களிடத்தில் அன்பு கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்வார், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று (மத் 25:40). ஆகவே, நாம் எளியவருக்கு ஒன்று கொடுக்கின்றபோது, அது இறைவனுக்கே கொடுப்பதற்கு சமமாக இருக்கின்றது. எனவே, நாம் எளியவருக்கு கொடுத்து வாழ்ந்து அதன்வழியாக இறைவனுக்கு கொடுத்துவாழும் மக்கள் ஆவோம்.

2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பத்திரிகையில் வந்த செய்தி. மோடி அரசாங்கம் 500, 1000 நோட்டுங்களை செல்லாது என்று அறிவித்திருந்த தருணம். அப்போது கொச்சி அருகே காக்கநாடு மார்ட்டின் சீரோ மலபார் கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர், ஞாயிறு காலைத் திருப்பலி முடிந்த பின் ஆலயத்தில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டுகொண்டன. அப்போது அவர் அவர்களிடம் “அன்பானவர்களே! நமது ஆலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும், பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ, அப்போது உண்டியலில் போட்டால் போதும். அவ்வளவுதான்!” என்றார்.

பங்குத்தந்தையின் இவ்வறிவிப்பைக் கேட்ட அனைத்து மக்களும் ஒன்று திரண்டனர் .
உண்டியல் திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள், உண்டியலில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் தவிர மீதி இருந்த அத்தனை பணமும் காலியாகிவிட்டது. “ஏன் சுவாமி இப்படி செய்தீர்கள்?” என்று ஒருசிலர் அவரிடம் கேட்டதற்கு, அவர் கண் கலங்க சொன்ன பதில்: “என்ன செய்வது? இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்கள் அரிசி வாங்கக்கூட சில்லறை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அரிசி இல்லாமல் சிரமப்படும்போது, ஆண்டவருக்காக உண்டியலில் லட்சக்கணக்கான பணம் இருந்து என்ன பயன்?”. மீண்டுமாக அவர்கள் அவரிடம் “சரி சுவாமி யார் யார் எவ்வளவு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்பது எப்படித் தெரியும்?” என்று கேட்டதற்கு அவர், “தெரியாதுதான். அதற்கான கணக்கையும் நான் வைத்து கொள்ளவில்லை. இறை நம்பிக்கை உள்ள எல்லோரும், தாங்கள் எடுத்த பணத்தை உண்டியலில் திரும்பவும் கொண்டுவந்து போடுவார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது” என்றார்.

இக்கட்டான சூழலில் ஏழைகள்மீது கரிசனையோடும் அன்போடும் செயல்பட்ட அந்த பங்குத்தந்தையின் செயல்பாடு உண்மையிலே பாராட்டுக்குரியது. நம்மிலும் அத்தகைய எண்ணம் வளரும்போது நாமும் உண்மையான கிறிஸ்தவர்கள் ஆவோம்.

ஆகவே, தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைவனையும் நம்மோடு வாழும் சக மனிதர்களையும் அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image