ஆகஸ்டு 13 தூயவர்களான போந்தியன் மற்றும் ஹிப்போலிடஸ்
தூயவர்களான போந்தியன் மற்றும் ஹிப்போலிடஸ்
“ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” (மத் 5: 23 -24).
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் இரு தூயவர்களை ஒருசேர நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ஒருவர் போந்தியன், இன்னொருவர் ஹிப்போலிடஸ்.
போந்தியோனோ, உரோமையைச் சேர்ந்தவர். இவர் திருத்தந்தை முதலாம் சிச்ஸ்துசிற்குப் பிறகு 230 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 21 ஆம் நாம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று திருச்சபையை நல்லவிதமாய் வழிநடத்தி வந்தார். இவர் திருத்தந்தையாக இருந்த ஐந்து ஆண்டுகளும் திருச்சபையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காட்டிவந்தார்.
இந்த சமயத்தில் உரோமையின் மன்னனாக மாக்சிமினுஸ் பொறுப்பேற்றான். இவன் கிறிஸ்தவர்களை அறவே வெறுத்தான். எனவே இவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியும் படுகொலையும் செய்து வந்தான். இதன் நீட்சியாக, திருத்தந்தை போந்தியனை இத்தாலியில் இருந்த சர்டினியா என்ற பகுதிக்கு அவன் நாடுகடத்தினான். அங்கே திருத்தந்தை தனிமைச் சிறையில் பலவிதமான வேதனைகளை அனுபவித்து வந்தார்.
ஹிப்போலிடசோ, உரோமையைச் சேர்ந்த ஒரு குருவானவர். இவர் மிகச் சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய Apostolic Tradition என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. இப்படிப்பட்டவருடைய போதனைக் கேட்க பலர் கூடிவந்தார்கள். இதனை தவறுதலாக எடுத்துகொண்டு தன்னை திருத்தந்தையாக முன்னிறுத்த முயன்றார் இவர் இத்தனைக்கும் போந்தியன் திருத்தந்தையாக இருக்கும்போது. ஆனால், நடந்தது வேறொன்று. அது என்னவென்றால் உரோமை மன்னன் மாக்சிமினுஸ் ஹிப்போலிடஸ் செய்துவந்த குளறுபடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரையும் திருத்தந்தை போந்தியன் இருந்த அதே இடத்திற்கு நாடு கடந்தினான். இதனால் மாற்றுக்கருத்து உடைய இருவரும் ஒரே இடத்தில் இருக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் சமரசம் செய்துகொண்டு, கடைசிவரைக்கும் அங்கே வாழ்ந்து இறந்தார்கள்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய போந்தியன் மற்றும் தூய ஹிப்போலிடசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து னியாரிவு செய்வோம்.
திறந்த மனத்தவராய் வாழ்வோம்.
தூய போந்தியன், தூய ஹிப்போலிடஸ் இவர்கள் இருவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், அவர்களிடம் இருந்த திறந்த மனம்தான். ஒருகாலத்தில் அவர்கள் இருவரும் தங்களுடைய கருத்துதான் உயர்ந்தது என நினைத்து வந்தார்கள். என்றைக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டு, ஓரிடத்தில் வைக்கப்பட்டார்களோ அன்றைக்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்த நல்ல கருத்துகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் அவர்கள் சமரசத்தோடு வாழத் தொடங்கினார்கள்.
இன்றைக்கு நம்முடைய குடும்பங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏற்படுகின்ற பல பிரச்சனைகளுக்குக் காரணம், ஒருவர் மற்றவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாததுதான். அல்லது ஒருவர் மற்றவர் சொல்வதில் இருக்கின்ற நியாயத்தை ஏற்றுக்கொள்ளாததுதான். பலரும் ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்’ என்பதுபோல், தாங்கள் சொல்வதுதான் சரி என்ற மனப்பான்மையில் இருக்கின்றார்கள். இதுவே மேலும் மேலும் பிரச்சனைகள் உருவாகக் காரணமாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில்தான் திறந்த மனதோடு வாழ்வதற்கான தேவை இன்றியமையாததாக இருக்கின்றது.
‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமே’ என்ற தவறான கண்ணோட்டத்தோடு இருந்தார் இயேசுவின் சீடர்களுள் ஒருவாரகிய நத்தனியேல். அப்படிப்பட்டவர் உண்மையை அறிந்துகொண்ட பிறகு, தன்னுடைய மனதை மாற்றிக்கொள்கின்றார்; நாசரேத்திலிருந்து நல்லது வரும் என்று நம்பத் தொடங்குகின்றார். நாமும் உண்மையை அறிந்துகொள்ளும்போது, அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தைப் பெறவேண்டும். இல்லையென்றால் வளர்ச்சிக்கான வழி இருக்கவே இருக்காது.
திறந்த மனது இருக்கின்றபோது அங்கே சமரசம் பிறக்க வாய்ப்பிருக்கின்றது. சமரசம் பிறந்துவிட்டால் அங்கே அங்கே அமைதி பிறக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
ஆகவே, தூய போந்தியன் மற்றும் தூய ஹிப்போலிடசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று திறந்த மனதோடு வாழப்பழகுவோம். நம்மிடம் இருக்கின்ற முன்சார்பு எண்ணங்களை வேரறுத்து, ஒருவர் மற்றவரோடு நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம் |