✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠(St. Joseph of Arimathea)
✠இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர் :
(Secret Disciple of Jesus)
✠பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு
✠இறப்பு : ----
பழைய எருசலேம் நகரிலுள்ள "தூய செபுல்ச்ர்", சிரியாக் மரபுவழி சிற்றாலயம்
(Syriac orthodox Chapel in Holy Sepulchre)
✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31
✠பாதுகாவல் : நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.
மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.
யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.
இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.
"நிக்கதேம்" (Nicodemus) துணையோடு "கொல்கொதாவில்" (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.
ஆகஸ்டு 31
✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)
✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)
✠கிறிஸ்துவின் பாதுகாவலன் :
(Defender of Christ)
✠பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு
✠இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு
யூதேயா (Judea)
✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31
✠பாதுகாவல் : ஆர்வமுள்ளவர்களின் (Curious)
புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு "பரிசேயரும்" (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார்.
இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:
முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)
இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)
இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)
இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.
4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத "நிக்கதேம் நற்செய்தி" (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.
கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.
ஆகஸ்டு 31
✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠(St. Raymond Nonnatus)
✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠(St. Raymond Nonnatus)
✠மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர் :
(Religious, Priest and confessor)
✠பிறப்பு : கி.பி. 1204
போர்டெல், செகர்ர, பார்செலோனா, அரகன், (தற்போதைய ஸ்பெயின்)
(Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)
✠இறப்பு : ஆகஸ்ட் 31, 1240
கார்டோனா கோட்டை, பார்செலோனா, அரகன், ஸ்பெயின்
(Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)
✠புனிதர் பட்டம் : கி.பி. 1657
திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர்
(Pope Alexander VII)
✠நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 31
✠பாதுகாவல் :
பைத்தோவா (Baitoa); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); குழந்தைப் பிறப்பு; கர்ப்பிணி பெண்கள்; பிறந்த குழந்தைகள்; குழந்தைகள்; மகப்பேறு மருத்துவர்கள்; தாதிகள்; காய்ச்சல்; பொய்யான குற்றச்சாட்டு; ஒப்புதல் வாக்குமூலம்
புனிதர் ரேமண்ட், ஸ்பெயின் (Spain) நாட்டின் "கட்டலோனியா" (Catalonia) நகரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். இவரது தாயார், இவரை பிரசவிக்கும்போதே மரித்து போனார். அதனால் அறுவை சிகிச்சை (Caesarean) செய்துதான், தாயின் வயிற்றிலிருந்து இவரை எடுத்தனர்.
நன்கு கல்வி கற்றிருந்த இவரது தந்தை, இவருக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தர முனைந்தார். "அரகன்" அரசின் (Kingdom of Aragon) அரசவையிலே சிறந்ததோர் உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. ஆனால், இவரது எண்ணங்களோ கிறிஸ்துவின் மீதும் அவர்தம் இரக்கத்தின் மீதுமே இருந்தது. அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். இதனால், தமது பண்ணைகளிலொன்றினை நிர்வகிக்க அறிவுறுத்தியிருந்தார். சிறு வயது பிராயத்திலிருந்தே தமது வீட்டினருகேயிருந்த "தூய நிக்கோலஸ்" (St. Nicholas) சிற்றாலயத்தில் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
பின்னர், "பார்சிலோனா" (Barcelona) நகரிலிருந்த "மெர்சிடரியன்" (Mercedarians) துறவற மடத்தின் சீருடைகளை ஏற்க ரேமண்டை அனுமதித்தார். "மெர்சிடரியன்" (Mercedarians) சபை, வட ஆபிரிக்காவின் முகம்மதியர்களிடம் (Moors of North Africa) பிடிபட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்காக நிறுவப்பட்டதாகும். ரேமண்ட், அச்சபையின் நிறுவனரான "தூய பீட்டர் நோலாஸ்கோவிடம்" (St. Peter Nolasco) பயிற்சி பெற்றார். 1222ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பின்னர் அச்சபையின் தலைமை (Master General) பொறுப்பேற்றார்.
பின்னர் வலென்சியா (Valencia) நாட்டிற்கு மறைப்பணியாற்ற சென்ற ரேமண்ட், மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அந்நாட்டில் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்த சுமார் 140 கிறிஸ்தவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டார்.
அதன்பிறகு, ரேமண்ட் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற சென்றார். அங்கும் அடிமைகளாக இருந்த 250 கிறிஸ்தவர்களை "அல்ஜியர்ஸ்" (Algiers) எனுமிடத்திலிருந்து மீட்டார். அதன்பிறகு "டுனிஸ்" (Tunis) என்ற நகருக்கு சென்றார். அங்கே, மிகச் சிறந்த முறையில் மறை பரப்புப் பணியை ஆற்றிய இவர், அந்நாட்டு முகம்மதிய மக்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார்.
சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே பளுத்த இரும்பினால் துளை போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்தார். பின்னர் அவரது சபையினரால் மீட்கப்பட்ட ரேமண்ட், கி.பி. 1239ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்.
"பார்சிலோனா" (Barcelona) நகரிலிருந்து அறுபது மைல் தூரத்திலுள்ள "கர்டோனா கோட்டையில்" (Castle of Cardona) ரேமண்ட் மரித்தார். கி.பி. 1657ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டரால் (Pope Alexander VII) புனிதர் பட்டமளிக்கப்பட்ட ரேமண்ட் அவர்களின் நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆகும்.