St. Rosalia St. Rose of Viterbo

செப்டம்பர் 4

✠ புனிதர் ரோஸ் ✠(St. Rose of Viterbo)

mary

✠ புனிதர் ரோஸ் ✠(St. Rose of Viterbo)

 

✠ கன்னியர்/ துறவி :
(Virgin and Recluse)

✠ பிறப்பு : கி.பி. 1233
விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்
(Viterbo, Papal States)

✠ இறப்பு : மார்ச் 6, 1251
விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்
(Viterbo, Papal States)

✠ புனிதர் பட்டம் : 1457
திருத்தந்தை மூன்றாம் கல்லிஸ்ட்டஸ்
(Pope Callistus III)

✠ முக்கிய திருத்தலம் :
புனிதர் ரோஸ் ஆலயம், விடேர்போ, இத்தாலி
(Church of St. Rose, Viterbo, Italy)
புனிதர் ரோஸ் டி விடேர்போ கத்தோலிக்க ஆலயம், லோங்வியு, வாஷிங்டன்
(Saint Rose de Viterbo Catholic Church, Longview, Washington)

✠ நினைவுத் திருநாள் : செப்டம்பர் 4

✠ பாதுகாவல் :
நாடுகடத்தப்பட்டவர்கள், சமய சபைகளால் நிராகரிக்கப்பட்ட மக்கள், ஃபிரான்சிஸ்கன் சபை இளைஞர்கள் (Franciscan youth), விடெர்போ (Viterbo), இத்தாலி

விடெர்போ நகர் புனிதர் ரோஸ், ஒரு கத்தோலிக்க புனிதராவார். இத்தாலியின் விடெர்போ நகரில் பிறந்த ஒரு இளம்பெண்ணான இவர், திருத்தந்தையருக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வந்தவர் ஆவார். பின்னாளில் தனிமையான துறவியாக மாறிய இவர், எதிர்காலம் பற்றி தீர்க்கதரிசனம் கூறுமளவுக்கு சக்தி படைத்தவராக இருந்தார்.

இவரது வாழ்க்கை சம்பவங்களின் காலம் நிச்சயமற்றதாக இருந்தது. காரணம், இவரது புனிதர் பட்டத்திற்கான தயாரிப்புகள் உள்ளிட்ட பிற நிகழ்வுகள் எவற்றினதும் காலங்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, இவர் கி.பி. 1233ம் ஆண்டில் பிறந்தவர் என நம்பப்படுகிறது.

தெய்வ பக்தியுள்ள, ஏழைப் பெற்றோருக்கு பிறந்த ரோஸ், சிறு வயதிலேயே செபிப்பதிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். மூன்று வயதிலிருந்து தமது தாய்வழி அத்தையிடம் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பாவிகளின் மனமாற்றத்திற்காக அதிகம் செபித்த இவர், தம்மை ஆன்மீக வாழ்வில் அர்ப்பணித்துக்கொண்டார். பதினெட்டே ஆண்டுகள் வாழ்ந்திருந்த ரோஸின் வாழ்க்கை புனிதம் பெற்றது. சிறு பெண்ணாயினும், ரோஸ் ஜெப வாழ்விலும் வறியோருக்கு உதவுவதிலும் மகிழ்வு கொண்டிருந்தார்.

பெற்றோரின் வீட்டில் இருந்தபோதே, மிகவும் இளம் வயதிலேயே இவரது தவ வாழ்வு தொடங்கியது. மிகவும் கடின வாழ்க்கை வாழ்ந்த ரோஸ், எழைகளின்பால் தாராள மனம் கொண்டிருந்தார்.

இவருக்கு பத்து வயதாகுமுன்னர், தேவ அன்னை கன்னி மரியாள் இவருக்கு தோன்றி, மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் (Third Order of St. Francis) சபையில் இணைந்து, விடேர்போ நகரில் தவ முயற்சிகளை போதிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அக்காலத்தில், தூய ரோம பேரரசர் (Holy Roman Emperor) "இரண்டாம் ஃபிரடேரிக்" (Frederick II) ஆட்சியில் இருந்தார்.

விரைவிலேயே ஃபிரான்சிஸ்கன் சபையில் இணைந்த இவர், சபையின் சீறுடையான சாதாரண அங்கியை அணிந்துகொண்டார். தெருக்களிலே நடக்கையில் கைகளில் சிலுவையோன்றினை ஏந்தியபடி செல்லும் இவர், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக இருக்கும்படி பிறருக்கு அறிவுறுத்தியபடி செல்வார். பாவங்கள் பற்றியும் இயேசுவின் பாடுகள் பற்றியும் போதிக்க தொடங்கினார்.

தமது 15 வயதில், ஒரு துறவற மடம் ஒன்றினை தொடங்க முயற்சித்த இவர், அம்முயற்சி தோல்வியுறவே, தமது தந்தையின் வீட்டுக்கு திரும்பி, அங்கேயே தனிமையில் செப, தவ முயற்சிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு முறையும் தமது தனிமையிலிருந்து வெளிவரும்போதும், மக்களை தவம் செய்ய தூண்டினார். அவரது இந்த மறைப்பணி இரண்டு வருடம்வரை நீடித்தது.

கி.பி. 1250ம் ஆண்டு ஜனவரி மாதம், ரோஸின் சொந்த ஊரான விடெர்போ நகரில் திருத்தந்தைக்கு எதிராக கிளர்ச்சி நடந்தபோது, இவர் திருத்தந்தைக்கு ஆதரவாகவும் பேரரசருக்கு எதிராகவும் செயல்பட்டார். இதன் காரணமாக இவரும் இவரது குடும்பத்தினரும் நகரிலிருந்து கடத்தப்பட்டனர். இவர்கள் மத்திய இத்தாலியின் "லாஸியோ" (Lazio) பிராந்தியத்திலுள்ள "சொரியானோ நெல் சிமினோ" (Soriano nel Cimino) எனும் நகரில் தஞ்சம் புகுந்தனர். திருத்தந்தையின் தரப்பு வென்றதன் பிறகு, இவரும் இவரது பெற்றோரும் நகருக்குள் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர்.

கி.பி. 1250ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஐந்தாம் தேதியன்று, பேரரசர் விரைவிலேயே இறந்துபோவார் என்று ரோஸ் முன்னறிவித்தார். அவரது தீர்க்கதரிசனம் டிசம்பர் 13ம் நாளன்று நிறைவேறியது. பேரரசர் இறந்துபோனார்.

ரோஸ், விடெர்போ நகரிலுள்ள "தூய மரியாளின் எளிய கிளாரா" (Poor Clare Monastery of St. Mary) துறவு மடத்தில் இணைய விரும்பினார். ஆனால், அவரிடம் அதற்காக தரவேண்டிய தட்சினை இல்லாத ஏழ்மை காரணத்தால் அவர் நிராகரிக்கப்பட்டார். அவர்களது நிராகரிப்பை ஏற்றுக்கொண்ட அவர், ஆயினும் அவரது இறப்புக்குப் பிறகு மடாலயத்திற்கு அவள் அனுமதி அளிப்பதாக முன்னறிவித்தார்.

இவரது முயற்சி தோல்வியடையவே, இவர் தமது தந்தையின் வீட்டிலேயே ஜெப, தவ வாழ்வினைத் தொடர்ந்தார். அங்கேயே, தமது பதினெட்டாம் வயதிலே ரோஸ் மரணமடைந்தார்.

image