Birth of Blessed Virgin Mary St. Corbinian St. Sergius 1 St. Thomas of Villanova

செப்டம்பர் 8

அன்கை கன்னி மரியின் பிறப்புவிழா

mary

அன்கை கன்னி மரியின் பிறப்புவிழா (செப்டம்பர் 08)

நிகழ்வு

ஒரு சமயம் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: “போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?”. அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: “மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்”.

இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.

தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.

வரலாற்றுப் பின்னணி

மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.

மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சபை வழக்கமாக புனிதரின் – தூயவரின் – இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தேவையில் இருப்போருக்கு இரங்குதல்

மரியா தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். இவற்றையெல்லாம் மரியா யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின் – கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். “நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், “உன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்” என்றார்.

ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.

கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்

மரியா எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் “இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும்” என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியா மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.

இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தாழ்ச்சி

மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்”. இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.

ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். “முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்”. படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, “கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார். அதற்கு குரு, “முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது” என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.

அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image