தெரசா சிறுமியாக இருந்தபோது பிரான்சினி என்ற கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் ஒரு குடும்பத்தில் இருந்த மூன்று பேரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு, மரணதண்டனைக்காகக் காத்திருந்தான். அவனைக் குறித்து கேள்விப்பட்ட தெரசா அவன் மனம்மாறவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்து வந்தார். தெரசாவின் இடைவிடாத ஜெபத்திற்கு பலன் கிடைத்தது. ஆம், பிரான்சினி என்ற அந்த கொலை குற்றவாளி தான் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக தன்னுடைய பாவத்தை உணர்ந்தான். அது மட்டுமல்லாமல் சிலுவையை தன்னுடைய கையில் ஏந்தி சிறைச்சாலைக்கு வந்த ஒரு பிராசிஸ்கன் துறவியிடம் தன்னுடைய பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, அவர் கொண்டுவந்த சிலுவையை முத்திசெய்தி, முற்றிலுமாக மனம்மாறினான்.
பிரான்சினி தன்னுடைய பாவங்களை உணர்ந்து மனம்மாறிய செய்தி அடுத்தநாள் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தது. இச்செய்தி மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ, தெரசாவிற்கு அதிகமான மகிழ்ச்சியைத் தந்தது. அன்றிலிருந்தே அவர் பாவிகளின் மனமாற்றத்திற்காக, ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக தொடர்ந்து ஜெபித்து வந்தார்.
வாழ்க்கை வரலாறு
தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள், பிரான்சு நாட்டில் உள்ள ஆலேன்கோன் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை லூயிஸ் மார்டின், தாய் செலி என்பவர் ஆவார். தெரசாவின் குடும்பத்தில் அவர்தான் கடைக்குட்டி, அவரோடு பிறந்தவர்கள் எட்டு சகோதரிகள், ஆனால் அதில் நான்கு சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தார்கள். தெரசாவின் பெற்றோர் இருவருமே தங்களுடைய இளமைக் காலத்தில் துறவியாக போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் அது முடியாமல் போகவே, தங்களுடைய பிள்ளைகளை கடவுளுக்கு உகந்தவர்களாய் வளர்த்து அதன்மூலமாக அவர்களைத் துறவிகளாக மாற்றினார்கள்.
தெரசாவிற்கு நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது அவருடைய தாய் அவரை விட்டுப் பிரிந்துபோனார். அவருடைய அன்னையின் இழப்பு அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்த நேரத்தில் தெரசாவின் மூத்த சகோதரி பவுலின்தான் அவருக்கு ஒரு தாயைப் போன்று இருந்து, அவருக்கு உதவிகளையும் செய்து, அவரைச் சிறப்பாக வளர்த்தெடுத்தார். இந்த நேரத்தில் தெரசா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். ஒரு சமயம் அவர் இப்படி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தபோது அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லாரும் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் ஜெபித்து வந்தார்கள். அப்போது அன்னை மரியா தெரசாவிற்குக் காட்சிகொடுத்து, அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றார். அடுத்த நாளிலே தெரசாவிடமிருந்த நோய் முற்றிலுமாக மறைந்தது. அதன்பிறகு அவர் நல்ல சுகத்தோடு வாழ்ந்து வந்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது தெரசாவின் மூத்த சகோதரி பவுலின் கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். இது தெரசாவிற்கு பேரிடியாக அமைந்தது. அவருடைய சகோதரியைப் போன்று, அவரும் கார்மேல் சபையில் துறவியாகச் சேர விரும்பினார். அப்போது அவருக்கு 9 வயது நடந்துகொண்டிருந்தது. அவருடைய வயதைக் காரணம் காட்டி, அவரை சபையில் சேர்க்க மறுத்தனர். இருந்தாலும் தெரசாவிற்கு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை. தெரசாவிற்கு 15 வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருடைய தந்தையோடு சேர்ந்து அவர் உரோமை நகருக்குச் சென்றார். அப்போது திருந்தந்தையாக இருந்தவர் பதிமூன்றாம் சிங்கராயர். அவரிடத்தில் சென்ற தெரசா கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தார். அதைக் கேட்ட திருந்தந்தை, “உமக்குத் துறவற மடத்தில் சேருவதற்கான வயது இல்லை. இருந்தாலும் இறைவனுக்கு விருப்பமானால் நீ சேர்ந்துகொள்” என்று சொல்லி, தெரசாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் தெரசா தன்னுடைய பதினைந்தாம் வயதில் அதாவது 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார்.
கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்த பிறகு தெரசா தூய வாழ்க்கை வாழத்தொடங்கினார்; அதிகமான நேரத்தை ஜெபத்திலும் தவத்திலும் கழித்தார். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனை ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக செய்து வந்தார். ‘சிறிய வழி’ ‘The Little Way’ என்பதன் வழியாக சிறு சிறு காரியத்தைச் செய்வதன் வழியாகவும் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். மறை பரப்பு பணிகளைச் செய்யும் குருக்களுக்காக எப்போதும் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அவர்களுக்காக ஜெபித்து வந்தார். தெரசாவின் வாழ்வைப் பார்த்த தலைவி, அவரை அவருடைய 22 ஆம் வயதில் நவ கன்னியர்களுக்கு பொறுப்பாளராக ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்வையே ஒரு புத்தகமாக எழுதச் சொன்னார். அதன்பேரில் தெரசா தன்னுடைய வாழ்வையே ‘ஓர் ஆன்மாவின் கதை’ என்ற பெயரில் புத்தகமாக வடித்தார்.
தெரசா ஆன்மீகத்தில் அதிகமாக வளர்ந்தாலும் அவருடைய உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. எலும்புருக்கி நோயினால் அவர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் 1896 ஆம் ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் நாள், தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் இறக்கும்போது அவருடைய சபை அருட்சகோதரிகள் யாவரும் அவரைச் சூழ்ந்து நின்று ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் ‘இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார். தூய வாழ்க்கை வாழ்ந்த தெரசாவிற்கு 1925 ஆம் ஆண்டு பதினோறாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் ‘மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
சிறுமலர் என அன்போடு அழைக்கப்படும் தூய குழந்தை தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. துன்பத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளல்
குழந்தை தெரசா தனக்கு வந்த துன்பங்கள் யாவற்றையும் சாபமாகப் பார்க்காமல் வரமாகப் பார்த்தார். அவர் தனக்கு வந்த எலுப்புருக்கி நோயினைக்கூட, கடவுள் தன்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே பார்த்தார்.
தன்னோடு இருந்த அருட்சகோதரிகளின் விமர்சனத்தையும் தெரசா பொறுமையாகத்தான் ஏற்றுக்கொண்டார். தெரசாவோடு இருந்த அருட்சகோதரி ஒருவர் அவரை எப்போது பார்த்தாலும் சினத்தோடுதான் பார்த்தார். தெரசா பதிலுக்கு அவரை சினத்தோடு பார்க்கவில்லை. மாறாக, அவரைப் பார்த்து புன்னைகைத்தார். இதனால் அந்த சகோதரி விரைவிலேயே தன்னுடைய குற்றத்தை உணர்ந்துகொண்டார். தெரசாவோடு நல்லுறவோடு வாழத் தொடங்கினார். இன்னொரு சமயம் வேறொரு சகோதரி தெரசாவின் மீது தெரிந்தே அழுக்குத் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து தெரசா சினம்கொள்ளவில்லை. மாறாக இயேசு தனக்கு வந்த சிலுவையை எப்படி பொறுமையோடு ஏற்றுக்கொண்டாரோ அதைப் போன்று அந்த சகோதரி செய்யும் தவற்றைப் பொறுத்துக்கொண்டார். இதனால் அவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து தெரசாவிடம் மன்னிப்புக் கேட்டார். இபப்டியாக தெரசா தனக்கு வந்த துன்பம், சவால் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு அதன்வழியாக ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்து வந்தார்.
அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பமின்றி இன்பமில்லை. சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை என்பது அறிஞர் பெருமக்கள் கூறும் செய்தி. நாம் நமக்கு வரும் துன்பங்களை தூய குழந்தைத் தெரசாவை போன்று மிகப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்போது இறையாசிர் பெறுவோம் என்பது உறுதி.
2. குழந்தை உள்ளம்
குழந்தைத் தெரசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் குழந்தைகளிடம் இருந்த தூய உள்ளத்தை, கள்ளம் கபறற்ற மனதை, அதிலிருந்து வெளிப்படுகின்ற தியாக உள்ளத்தை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் விளங்கிய கள்ளம் கபறற்ற தன்மையைக் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்” என்று (மத் 18:3). ஆம் நாம் குழந்தைகளின் உள்ளத்தைக் கொண்டிராவிட்டால் இறைவன் அரசைப் பெறுவது என்பது இயலாத காரியம் ஆகும்.
ஓர் ஊரில் ஜெனி என்ற சிறுமி இருந்தாள். அவள் எல்லாரிடத்திலும் அன்பும் அக்கறையோடும் இருந்தாள். ஒருநாள் அவள் சாலையோராமாக போய்க்கொண்டிருந்தபோது பிச்சைக்காரன் ஒருவனைக் கண்டாள். அவள் அந்தப் பிச்சைக்காரனின் அருகே சென்று பார்த்தபோது, அவன் சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அவள் அந்தப் பிச்சைகாரனை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து உணவு கொடுத்தாள். அதுமட்டுமல்லாமல் அவளுடைய தந்தையிடம் பிச்சைக்காரனை அழைத்துச் சென்று, “நம் வீட்டில் இவரைத் தங்க வைத்து ஏதாவது வேலை கொடுத்துகொடுக்கலாமே” என்று கெஞ்சிக் கேட்டாள். அவளுடைய தந்தையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் அம்மனிதர் ஜெனியின் இல்லத்தில் தங்கியிருந்த தோட்ட வேலைகளைச் செய்து வந்தார்.
பின்னொரு நாள் அவள் தன் குடும்பத்துடன் ஓர் உயர்தர உணவகத்திற்கு சென்றாள். அப்படிப் போகும்போது அவள் வேலைக்காரராக மாறிய பிச்சைக்காரரையும் அழைத்துச் சென்றாள். அங்கு அவருக்கு நல்ல உணவு பரிமாறப்பட்டது. அவர் அதைச் சாப்பிடும் போது, கண்ணீர்விட்டு அழுதார். இதைப் பார்த்த ஜெனியின் தந்தை அவரிடம், “எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று கேட்க, அதற்கு அவர் குழந்தை ஜெனியைச் சுட்டிக்காட்டி, “ஜெனியைப் பார்க்கும்போது என்னுடைய அம்மாவைப் பார்ப்பது போன்று இருக்கிறது” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய வார்த்தைகளை கேட்ட ஜெனியின் தந்தை, தன் மகளை நினைத்து பெருமிதம் கொண்டாள்.
குழந்தைகள் எப்போதும் கனிவோடும் இரக்கத்தோடும் இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, தூய குழந்தை தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம், குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
பிறப்பு: கி.பி. 437
செர்னி-என்-லான்னோய்ஸ், பிக்கார்டி, ஃபிரான்ஸ்
(Cerny-en-Laonnois, Picardy, France)
இறப்பு: ஜனவரி 13, 533
ரீம்ஸ், சாம்பெய்ன், ஃபிரான்ஸ
(Rheims, Champagne, France)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 1
பாதுகாவல்: ஃபிரான்ஸ் (France)
புனிதர் ரெமிஜியஸ், ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “ரீம்ஸ்” (Rheims) ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரும், “ஃபிராங்க்ஸ்” (Apostle of the Franks) இன மக்களின் அப்போஸ்தலருமாவார். இவர், கி.பி. 496ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் தேதியன்று, “ஃபிராங்க்ஸ்” இன அரசரான (King of the Franks) “முதலாம் குளோவிஸுக்கு” (Clovis I) திருமுழுக்கு அளித்தார். இந்த திருமுழுக்கானது, முழு ஃபிராங்க் இன மக்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாற்ற வழிவகுத்தது. இது, திருச்சபைக்கு ஒரு பாரிய வெற்றியாகவும், ஐரோப்பிய வரலாற்றில் ஒரு விசேட நிகழ்வாகவும் அமைந்தது.
ரெமிஜியஸ், பாரம்பரியமாக, “கல்லோ-ரோமன்” (Gallo-Roman society) சமுதாயத்தின் மிக உயர்ந்த மட்டத்தில், லாவோன் (Laon), பிகார்ட்டிக்கு (Picardy) அருகிலுள்ள செர்னி-என்-லான்னோய்ஸ் (Cerny-en-Laonnois) என்ற இடத்தில் பிறந்தார். இவர், லாவோன் பிரதேச பிரபுவான (Count of Laon) “எமிலியஸ்” (Emilius) என்பவருக்கும், “சோய்சன்” ஆயரின் (Bishop of Soissons) மகளான “செலினாவுக்கும்” (Celina) மகனாகப் பிறந்தவர் என்பர். பின்னாளில், கி.பி. 486ம் ஆண்டு, “முதலாம் குலோவிஸுக்கு” (Clovis I) “சோய்சன்” நகரை வெற்றிகொண்டதாக வரலாறு உண்டு.
ரீம்ஸ் (Reims) நகரில் கல்வி கற்ற இவர், விரைவில் தமது கற்றல் மற்றும் புனிதத்தன்மைக்கு புகழ்பெற்றார். மேலும் அவரது உயர் நிலை காரணமாக, ஒரு பொதுநிலையினராக இருப்பினும், தமது 22 வயதில், ரீம்ஸ் ஆயராக (Bishop of Reims) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், ஃபிரான்ஸ் நாட்டின் பெரும் வேந்தராகவும் (Lord Chancellor of France), “மெரோவிங்கியன் வம்ச” (Merovingian dynasty) தலைமை அதிகாரியாகவுமிருந்தார்.
“சோய்சன்” நகர தேவாலயத்தில் இருந்து திருடப்பட்ட புனித பாத்திரங்களை திரும்பப் பெறும் கதையானது, அவருக்கும் குளோவிஸுக்கும் இடையில் உள்ள நட்பான உறவுகளுக்குச் சான்று பகர்வதாகவும், ஃபிராங்க்ஸ் மன்னராக இருந்த குளோவிசை, அவர் புனிதர் வேதாஸ்ட் (Saint Vedast) மற்றும் குளோவிஸுக்கு மனைவியாக இருந்த பர்கண்டி இளவரசி புனிதர் க்ளோடில்ட் (Saint Clotilde) ஆகியோரின் உதவியுடன் கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றினார். தாம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பே குளோவிஸ், ரெமிஜியஸ் மற்றும் ரீம்ஸ் நகர கிறிஸ்தவ மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கினார். டால்பாயாக் போரில் (Battle of Tolbiac) அலமன்னி (Alamanni) மீது வெற்றிகொண்ட பிறகு, ரீம்ஸ் நகரில் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஃபிராங்க்ஸ் மற்றும் ஆலமன்னி இன மக்களின் முன்னிலையில் தமக்கு திருமுழுக்கு அருட்சாதனம் வழங்குமாறு ரெமிஜியசை வேண்டினார். புனிதர் கிரகோரியின் கூற்றின்படி (Saint Gregory of Tours), சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஃபிராங்க்ஸ் இன மக்களுடன் க்ளோவிஸ் ஞானஸ்நானம் பெற்றார்.
அரசன் குலோவிஸ், ரெமிஜியசுக்கு எண்ணற்ற சமஸ்தானங்களை பரிசாக வழங்கினார். அதில், ரெமிஜியஸ் பல தேவாலயங்களை கட்டினார். பல்வேறு மறைமாவட்டங்களை நிறுவி, ஆயர்களை நியமித்தார். “டௌர்னை” (Tournai), “கேம்ப்ரை” (Cambrai) மற்றும் “தெரௌன்” (Thérouanne) ஆகிய மறைமாவட்டங்களை நிறுவிய அவர், கி.பி. 499ம் ஆண்டு, முதல் ஆயர்களை நியமித்தார்.
ரெமிஜியஸ், திருச்சபை கவுன்சில்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், கி.பி. 517ம் ஆண்டு, ரீம்ஸ் நகரில் ஒரு சபைக் கூட்டத்தை நடத்தினார். ஒரு சூடான விவாதத்திற்குப் பிறகு அவர் ஒரு ஆரிய இன ஆயரை கிறிஸ்தவராக மனம் மாற்றினார்.