St. Theodore Guerin St. Hewald The White & Hewald The Black

அக்டோபர் 3

புனித மதர் தியோடர் குரீன்

mary

புனித மதர் தியோடர் குரீன், சபைத் தலைவர்
St. Mother Theodore Guerin

பிறப்பு : 1798,
பிரான்ஸ்

இறப்பு : 14 மே 1856,
அமெரிக்கா

முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
புனிதர்பட்டம்: 15 அக்டோபர் 2006, திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் - இண்டியானாவிலுள்ள “லாஃபாயெட்”
(Roman Catholic Diocese of Lafayette in Indiana)

"அனி தெரேஸ் குரீன்" (Anne-Thérèse Guérin) எனும் இயற்பெயர் கொண்ட அன்னை தியோடர் குரீன், ஒரு ஃபிரெஞ்ச் - அமெரிக்க புனிதரும், கத்தோலிக்க அருட்சகோதரியருக்கான "புனித மேரியின் முன்னெச்சரிக்கை சகோதரியரின்-வூட்ஸ்" (Sisters of Providence of Saint Mary-of-the-Woods) எனும் துறவற சபையை நிறுவியவருமாவார்.

இவர் இண்டியானா (Woods) மற்றும் பல இடங்களில் பல்வேறு பள்ளிகளை நிறுவியதாலும், கல்வி மேம்பாட்டிற்காக உழைத்ததாலும் பிரபலமானவர்.

இவரது தந்தை “லாரன்ட் குரீன்” (Laurent Guérin) நெப்போலியன் போனபர்ட்'டின் (Napoleon Bonaparte) கட்டுப்பாட்டிலிருந்த ஃபிரெஞ்ச் கடற்படை அதிகாரியாவார். இவரது தாயார், “இசபெல் குரீன்” (Isabelle Guérin) ஆவார். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இருவர் இறந்துவிட, அனி தெரேஸும் இவரது இன்னுமொரு சகோதரியான 'மேரி ஜீன்' (Marie Jeanne) ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

ஏறக்குறைய ஃபிரெஞ்ச் புரட்சியின் இறுதிக்கட்டத்தில் இவர் பிறந்தார். அக்காலத்தில், ஃபிரான்ஸ் நாடு சீரழிந்து போயிருந்தது. அது, ஃபிரெஞ்ச் கத்தோலிக்கர்களுக்கு நெருக்கடியைத் தந்தது. கத்தோலிக்கர்களின் பள்ளிகளும் ஆலயங்களும் மூடப்பட்டன. அநேக கத்தோலிக்க குருக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

அனி தெரேஸ், அனேகமாக அவரது தாயாரால் வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டார். பத்து வயதில் முதன்முதலாக புதுநன்மை பெற்றார். அன்றைய தினமே அவர் மத சமூகத்தில் இணைய முடிவெடுத்தார்.

இவருக்கு பதினைந்து வயதாகையில், இவரது தந்தை வீட்டுக்கு வர பயணப்பட்ட போது, அவர் கொள்ளைக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை இழந்திருந்த அவரது தாயார் மிகவும் ஒடுங்கிப்போனார். தாயாரையும் சகோதரியையும், மற்றுமுள்ள வீடு தோட்டங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அனி தெரேஸிடம் வந்தது. தமது இருபதாம் வயதில், அவர் கத்தோலிக்க சபையில் சேரும் தமது விருப்பத்தை தாயாரிடம் தெரிவித்தார். ஆனால், தமது இழப்பிலிருந்து இன்னும் மீழாத அவரது தாயார், அதற்கு மறுத்துவிட்டார். மேலும் ஐந்து வருடங்களின் பின்னர், அனி தெரேஸின் பக்தியின் ஆழத்தையும் அதிலுள்ள ஈடுபாட்டையும் அறிந்துகொண்ட தாயார் இசபெல், அவரை செல்ல அனுமதித்தார்.

கி.பி. 1823ம் ஆண்டு, இளம் சகோதரியருக்கான (Sisters of Providence of Ruillé-sur-Loir) எனும் துறவு மடத்தில் இணைந்தார். அங்கே அவருக்கு, கத்தோலிக்க பெயரான "அருட்சகோதரி தியோடர்" (Sister St. Théodore) எனும் பெயர் சூட்டப்பட்டது.

முதன்முதலாக தியோடர், மத்திய ஃபிரான்ஸுக்கு போதனை மற்றும் கற்பித்தலுக்காக அனுப்பப்பட்டார். அங்கே, அவர் “தட்டம்மை” (Smallpox) நோய்வாய்ப்பட்டார். ஏறக்குறைய மரணம் வரை வந்துவிட்டார். அவரது உணவுக்குழாய் மோசமாக பாதிக்கப்பட்டது. மீதமுள்ள வாழ்நாள் முழுதும் சரிவர உணவு உட்கொள்ள இயலாமல் அவஸ்தைப்பட்டார்.

ஃபிரான்ஸிலிருந்து இண்டியானாவுக்கு:
அந்நாளில், ஐக்கிய அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்திலுள்ள "வின்சென்ன்ஸ் மறை மாவட்டத்தின் (Diocese of Vincennes) முதலாம் ஆயர் "சைமன் வில்லியம் காபிரியல் ப்ரூட்" (Simon William Gabriel Bruté), “ஹைலாண்டியர்” (Hailandière) எனும் தமது பிரதிநிதி ஒருவரை ஃபிரான்ஸுக்கு அனுப்பினார். தமது மறை மாவட்டத்தின் பள்ளிகள் மற்றும் சபைகளில் மத போதனை மற்றும் கல்வி கற்பிக்கவும் நோயாளிகளுக்கு உதவவும் சிறந்த அருட்சகோதரி ஒருவரை கண்டு அழைத்துவர முயற்சித்தார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே கத்தோலிக்க குருக்கள் அங்கே இருந்ததால் மேற்கண்ட பணிகள் தொய்வுற்றிருந்தன. ஃபிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ஐரிஷ் வம்சாவளியினரின் வருகை அவர்களது மறைமாவட்டத்துக்கு அவசியப்பட்டது.

'ஹைலாண்டியர்' (Hailandière) ஃபிரான்ஸில் இருந்த காலத்தில், ஆயர் ப்ரூட் "வின்சென்ஸ்" (Vincennes) மறைமாவட்டத்தில் மரணமடைந்தார். இதன் காரணமாக, 'ஹைலாண்டியர்' ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். ஃபிரான்ஸிலிருந்த புதிய ஆயரின் முதல் பணி, அங்கிருந்த அருட்சகோதரிகளின் துறவு மடத்திலிருந்து சகோதரிகளின் ஒரு குழுவை கல்வி மற்றும் சேவை பணிகளுக்காக இண்டியானா வருமாறு வேண்டி அழைத்தார். அங்கிருந்து இண்டியானா செல்ல அருட்சகோதரி தியோடர் ஒப்புக்கொண்டார்.

கி.பி. 1840ம் ஆண்டு, தியோடரும், அவருடன் ஐந்து அருட்சகோதரிகளும் மிகவும் மோசமான வானிலையில் அட்லாண்ட்டிக் சமுத்திரத்தில் பயணித்து இண்டியானாவின் அடர் காடுகளைச் சென்றடைந்தனர்.

இவர் தமது நல்லொழுக்கத்தால், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். நம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்தார். தனது செப வாழ்வினால் மிகவும் வலிமைப் பெற்று வாழ்ந்தார். தனது எளிமையான வாழ்வால், இவ்வுலக துன்பங்களை எதிர்த்தார். ஏராளமான துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். அமைதியின் சிகரமாய் இருந்தார்.

கற்பித்தலின் சிகரமாய்த் திகழ்ந்த அருட்சகோதரி தியோடர், நோயின் கொடுமை தாங்க இயலாமல் தமது ஐம்பத்தேழாம் வயதில் மரணமடைந்தார்.

செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த புனித மதர் தியோடர் குரீன் வழியாக நல்ல ஆயர்களை தந்தீர். புதிய சபை உருவாக்கியதன் வழியாக, மேலும் உம் பணியை வளர்ச்சியடைய செய்தார். இன்றும் இவ்வுலகில் புதிதாக தொடங்குகின்ற துறவற சபைகளை நீர் ஆசீர்வதித்து தொடர்ந்து பராமரித்து வழிநடத்தியருளும்படியாக ஆயனே உம்மை மன்றாடுகின்றோம்.

 

image