"என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே" (திபா 119:105)
வாழ்க்கை வரலாறு
புருனோ, ஜெர்மனியில் உள்ள கோலோக்னே (Cologne) என்னும் இடத்தில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில், 1030 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை ரெய்ம்ஸ் என்ற இடத்தில் முடித்து, அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். இவருடைய அறிவையும் ஞானத்தையும் கண்டு, இவரை மறைமாவட்டப் பள்ளிகளில் போதிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இவரும் மாணவர்களுக்கு நல்லமுறையில் கற்றுத்தந்தார். இதன்பிறகு இவரை மறைமாவட்டத்தின் வேந்தராக நியமித்தார்கள். அந்தப் பணியையும் இவர் சிறப்புடனே செய்துவந்தார்.
இந்த காலக்கட்டத்தில் திருச்சபையின் நடவடிக்கைகளில் அரசர்களும் முக்கியப் பதவிகளில் இருந்தவர்களும் தலையிடுவதும் ஆயர்களை, குருக்களை பொறுப்புகளில் நியமிப்பதுமாக இருந்தார்கள். இதனை அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை கடுமையாக எதிர்த்தார், அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்தார். திருத்தந்தை அவர்களின் இந்த முடிவுக்கு புருனோ மிகவும் உறுதுணையாக இருந்தார். இதனால் புருனோ பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, தன்னுடைய பதவியிலிருந்து விலகவேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதற்காக புருனோ பயப்படவில்லை.
தன்னிடமிருந்த பதவி பறிக்கப்பட்ட பின்பு, புருனோ சில நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார். ஒருநாள் அவர் இவ்வாறு ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தனியாக ஒரு துறவற சபையை நிறுவி, அதிலே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் செலவழித்தால் என்ன என்ற யோசனை பிறந்தது. இதனை அவர் கிரநோபிளில் ஆயராக இருந்த ஹுக் என்பவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அவரும் இதற்குச் சரியென்று சொல்ல, புருனோ தன்னுடன் ஒருசில நண்பர்களை சேர்த்துக்கொண்டு நகருக்கு வெளியே சென்று, அங்கே ஒரு துறவற சபையை நிறுவி, ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார். பின்னாளில் தான் உருவாக்கிய அந்த சபைக்கு "கார்த்தூசியன்" என்று பெயரிட்டார்.
நாட்கள் செல்லச் செல்ல புருனோ உருவாக்கிய இந்த சபையில் நிறைய இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இவர் தன்னுடைய சபை ஒழுங்குகளை எடுத்துச் சொல்லி, அவர்களை நல்ல துறவிகளாக வாழப் பணித்தார். இதைவிட மேலான ஒரு காரியத்தையும் தன் சபைத் துறவிகளோடு செய்தார். அது என்னவென்றால், விவிலியத்தை பிரதி எடுத்தது. அச்சகம் இல்லாத அந்த காலகட்டத்தில், புருனோ தன்னுடைய சபைத் துறவிகளிடம், விவிலியத்தை பல பிரதிகளாக எழுதச் சொல்லி, அதனை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வந்தார்.
இதற்குப் பிறகு இவரை திருத்தந்தை இரண்டாம் உர்பன் தன்னுடைய ஆலோசகராக நியமித்தார். துறவற வாழ்வையே பெரிதும் விரும்பிய புருனோ, சில காலம் திருத்தந்தைக்கு ஆலோசகராக இருந்துவிட்டு இத்தாலியில் இருந்த கலாப்ரியா என்ற இடத்திற்கு வந்து, அங்கு தன்னுடைய வாழ்வின் கடைசி நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார். இவர் 1101 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1674 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் கிளமென்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய புருனோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
அஞ்சாதே! துணிவோடிரு!
தூய புருனோவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சாமை, துணிவோடிருத்தல்தான். திருச்சபையின் நிர்வாகத்தில் அரசர்களும் பிரபுக்களும் தலையிட்டபோது இவர் அதனைக் கடுமையாக எதிர்த்தார்; கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் எதையும் செய்யத் துணிந்தார். இந்தத் துணிச்சல் நம்மிடத்தில் இருக்கின்றதா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம், அதிகாரத்தோடு ஏன் மோதுவானேன் என்று அவர்கள் செய்கின்ற தவற்றினைக்கூட கண்பொத்தி, வாய்பொத்தி கடந்துபோகின்றோம். இந்நிலை மாறவேண்டும், நாம் அனைவரும் உண்மையை உரக்கச் சொல்கின்ற மனதிடம் பெறவேண்டும்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் எல்சால்வதோரில் இருந்த மன்னன் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தியபோது அங்கு பேராயராக இருந்த ஆஸ்கர் ரோமெரோ மக்களிடம், "நாம் கடவுளின் மக்கள், யாருக்கும் அடிமையில்லை" என்று எடுத்துச் சொல்லி, மக்களை தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடச் சொன்னபோது, அதற்காக திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டாலும் இன்றைக்கு மக்களுடைய மனதில் நீங்காது இருக்கின்றார். நாம் உண்மையை துணிவோடு எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இதுதான் உண்மை.
ஆகவே, தூய புருனோவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சாது, துணிவோடிருந்து உண்மையை உரக்கச் சொல்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.