✠ புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின் ✠(St. Maria Bertilla Boscardin)
✠அருட்சகோதரி மற்றும் செவிலியர் :
(Nun and Nurse)
✠பிறப்பு : அக்டோபர் 6, 1888
பிரெண்டோலா, வெனேடோ, இத்தாலி
(Brendola, Veneto, Italy)
✠இறப்பு : அக்டோபர் 20, 1922 (வயது 34)
ட்ரெவிஸோ, இத்தாலி
(Treviso, Italy)
✠முக்திபேறு பட்டம் : ஜூன் 8, 1952
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
✠புனிதர் பட்டம் : மே 11, 1961
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்
(Pope John XXIII)
✠முக்கிய திருத்தலம் :
விசென்ஸா, வெனடொ, இத்தாலி
(Vicenza, Veneto, Italy)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 20
புனிதர் மரியா பெர்டில்லா போஸ்கார்டின், முதலாம் உலகப் போரின்போது, விமானப்படை தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோயுற்ற சிறார்களுக்கும் தன்னலமற்ற சேவையாற்றுவதில் உன்னத முத்திரை பொறித்த இத்தாலி நாட்டு கத்தோலிக்க அருட்சகோதரியும் செவிலியருமாவார். பின்னாளில், இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை :
"அன்னா ஃபிரான்செஸ்கா போஸ்கார்டின்" (Anna Francesca Boscardin) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலி நாட்டின் "வெனேடோ" (Veneto) பிராந்தியத்தின் "பிரெண்டோலா" (Brendola) எனும் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தையான "ஆன்ஜெலோ போஸ்கார்டின்" (Angelo Boscardin), பின்னாளில் தமது மகள் மரியா பெர்டில்லா�வின் முக்திபேறு பட்டமளிக்கும் முன்னேற்பாட்டு செயல்முறை நடவடிக்கைகளின்போது, தாம் ஒரு பொறாமை குணமுள்ளவரென்றும், அடிக்கடி மது அருந்திவிட்டு, மகளை அடிக்கும் வன்முறையாளரென்றும் சாட்சியமளித்தார்.
குழந்தைப் பருவத்திலேயே குடும்பத்திற்காக வயல்வெளிகளில் வேலை செய்ய வேண்டியிருந்த காரணத்தால், தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலாதவராய் இருந்தார். பள்ளிக்கு சென்ற காலத்தில் கூட, அருகாமையிலுள்ள ஒரு வீட்டின் பணிப்பெண்ணாக பணி புரிந்தார். அவரால் குறிப்பிட்ட அளவு திறமைகளை காட்ட இயலவில்லை. குறிப்பாக, அவர் ஒரு புத்திசாலி பெண் இல்லை என்று கருதப்பட்டார். மேலும், பெரும்பாலும் அவர் பிறரின் நகைச்சுவையின் இலக்காக இருந்தார். இவையுள்ளிட்ட இவரது மந்தமான தன்மைக்காக, உள்ளூர் மதகுரு, இவரை வாத்து என்று கிண்டல் வார்த்தைகளால் அழைப்பார்.
அக்காலத்தில், பொதுவாக புதுநன்மை அருட்சாதனம் வாங்குவதற்கான வயது பன்னிரெண்டாகும். ஆனா இவர் தமது எட்டு வயதிலேயே புதுநன்மை அருட்சாதனம் வாங்க அனுமதிக்கப்பட்டார். இவர் தமது பங்கு மக்களின் "மரியாளின் குழந்தைகள் சங்கம்" என்னும் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். மரியா பெர்டில்லாவின் பங்குத்தந்தை இவருக்கு மறைக்கல்வி புத்தகமொன்றினை (Catechism) பரிசாக இவருக்கு அளித்திருந்தார். இவர் மரித்தபோது, அவர் அணிந்திருந்த துறவற சீருடைப் பையில் அப்புத்தகம் இருந்தது.
விசென்ஸா (Vicenza) :
இவரது வழக்கமான மந்தத் தன்மை காரணமாக இவர் சேருவதற்காக விண்ணப்பித்திருந்த துறவற சபை ஒன்று இவரை நிராகரித்தது. பின்னர், 1904ம் ஆண்டு, விசென்ஸா நகரின் "தூய இருதயத்தின் மகள்கள்" (Daughters of the Sacred Heart) அமைப்பின் "புனித டோரதி�யின் ஆசிரியைகளின்" (Teachers of Saint Dorothy) உறுப்பினராக மரியா பெர்டில்லா ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கே வைத்துதான் "மரியா பெர்டில்லா" எனும் பெயரை ஏற்றுக்கொண்டார்.
தம்மைப்பற்றிய முந்தைய விமர்சனங்களை ஏற்கனவே மனதிற்குள் உள்வாங்கியிருந்த பெர்டில்லா, "புகுநிலை துறவியரின் தலைவியிடம்" (Novice-mistress), "என்னால் எதையும் செய்ய முடியாது; நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்; நான் ஒரு வாத்து; எனக்கு கற்பியுங்கள்; நான் ஒரு புனிதையாக வேண்டும்." என்று அடிக்கடி சொல்வார். பெர்டில்லா, அந்த துறவு மடத்தில், ஒரு சமையலறை பணிப்பெண்ணாகவும், துணி துவைக்கும் பணிப்பெண்ணாகவும் மூன்று வருடங்கள் பணியாற்றினார்.
ட்ரெவிஸோ (Treviso) :
பின்னர், ட்ரெவிஸோ நகரிலுள்ள, அவர்களது சபையின் கீழுள்ள நகரசபை மருத்துவமனையில் செவிலியர் கல்வி கற்பதற்காக பெர்டில்லா அனுப்பப்பட்டார். பயிற்சிக் காலத்திலேயே ஒருமுறை இவர் சமையலறை பணிக்கு அனுப்பப்பட்டார். எப்படியும் பயிற்சியை முடித்த பெர்டில்லா, மருத்துவமனையின் சிறுவர்கள் வார்டில், "டிப்தீரியா" (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோய் பாதித்த நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். "கேபர்ட்டோ" போரின் (Battle of Caporetto) பேரழிவினைத் தொடர்ந்து, ட்ரெவிஸோ (Treviso) நகரம் விமான தாக்குதலுக்கு உள்ளானபோது, அம்மருத்துவமனை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே வந்தது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பெர்டில்லா ஆற்றிய நிகரற்ற சேவை இராணுவத்தால் கவனிக்கப்பட்டு வந்தது.
பெர்டில்லாவின் இத்தகைய அர்ப்பணிப்புமிக்க சேவைகள், உள்ளூரிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. எப்படியும் அருட்சகோதரி பெர்டில்லாவின் சேவையை பாராட்ட மனமில்லாத அவருக்கு மேலுள்ள அருட்சகோதரியர், அவரை மீண்டும் சலவைப் பணிக்கு அனுப்பினார்கள். தொடர்ந்து நான்கு மாதங்கள் அதே சலவைப் பணியில் இருந்த பெர்டில்லா, அவரது தலைமை சகோதரியால் அங்கிருந்து மாற்றப்பட்டு, மருத்துவமனையின் குழந்தைகள் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர், விரைவிலேயே அவரது ஏற்கனவே நலிவடைந்திருந்த உடல் நலம், மேலும் மோசமானது. ஏற்கனவே பல ஆண்டுகளாக அவரது உடலிலிருந்த ஒரு கட்டியானது, மேலும் முற்றி, அறுவை சிகிச்சை வரை கொண்டுபோனது. நடந்த அறுவை சிகிச்சையில் அவர் பிழைக்கவில்லை. 1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இருபதாம் தேதி, 34 வயதான அருட்சகோதரி மரியா பெர்டில்லா போஸ்கார்டின் மரித்தார்.
அக்டோபர் 19
சிலுவையின் புனித பவுல்
சிலுவையின் புனித பவுல் (ஆதீன தலைவர், குரு)
("கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை" - சிலுவையின் புனித பவுல்)
நினைவுத் திருவிழா : 19 அக்டோபர் (விறுப்ப நிணைவு)
இயற்பெயர்: பவுலோ பிரான்செஸ்கோ தேனி
பிறப்பு: ஜனவரி 3, 1694 ஒ, டாவா, பியத்மாந்து,இத்தாலி
புனிதர் பட்டம்: 29 ஜூன் 1867, உரோமை(ஒன்பதாம் பயஸ்)
சிலுவையின் புனித பவுல் (சனவரி 03 1694 - அக்டோபர் 18 1775) ஒரு இத்தாலிய கிறித்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.
சிலுவையின் புனித பவுலின் இயற்பெயர் பவுலோ பிரான்செஸ்கோ தேனி ஆகும். இவர் சனவரி 03, 1694அன்று பியத்மாந்து, இத்தாலியில் பிறந்தார். ஒரு பணக்கார வியபாரியின் மகனான இவர் தனது 19ஆம் அகவையில் மனம்மாற்றம் பெற்று பக்தி நிறைந்த வாழ்க்கை வாழலானார். பிரான்சிசு டி சேல்சின்புத்தகங்களும், கப்புச்சின் சபைக் குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும் இவரிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் தனது வாழ்நாளெல்லாம் கடவுளை இயேசுவின் பாடுகளின் மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.
தனது 26ஆம் வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின் மூலம் ஒரு புதிய துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர் ஆரம்பித்ததே திருப்பாடுகள் சபை. இச்சபையினரின் அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறித்துவின் பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், ஆனாலும் திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள் பின் நாட்களில் திருப்பாடுகளின் சபையோர் என அறியப்பட்டனர்.
இவரின் ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில் இருக்கும் போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள் தியானத்துக்குப் பின் 1720இல் இயற்றினார். இச்சபையில் இவரின் சகோதரரே இவருக்குப் பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார். இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத்துவங்கியது. இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் 18 அக்டோபர் 1775இல் இறந்தார். அச்சமயத்தில் இவரின் சபையில் 180 குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.
இவருக்கு 1 அக்டோபர் 1852இல் முக்திபேறு பட்டமும், 29 ஜூன் 1867இல் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் இறந்தநாளான 18 அக்டோபர், நற்செய்தியாளர் லூக்காவின் விழாவாக இருப்பதால் இவரின் விழாநாள் 19 அக்டோபர் ஆகும்.