St. Dionysius Of Alexandria St. Elizabeth Of Hungary
St. Hilda Of Whithy St. Hugh Of Lincoln

நவம்பர் 17

ஹங்கேரி எலிசபெத்

mary

ஹங்கேரி எலிசபெத் (நவம்பர் 17)

நிகழ்வு

ஹங்கேரி எலிசபெத்து அரசியின் ஆன்ம ஆலோசகராக இருந்தவர் கொனார்ட் என்னும் அருட்தந்தை. எலிசபெத்து சாகும் தருவாயில் இருந்தபோது அவருக்கு மிக அருகே இருந்தவர் இந்தத் தந்தைதான். அப்போது அருட்தந்தை கொனார்ட் அவர்கள் அரசியிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார். “அம்மா! நீங்கள் இறந்தபிறகு உங்களுடைய விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள், பொருட்கள் இவற்றையெல்லாம் யாருக்குக் கொடுக்கப் போகின்றீர்கள்?” என்பதுதான் அந்தக் கேள்வி. அருட்தந்தையின் கேள்விக்கு எலிசபெத் அரசி சிறிதும் தாமதியாமல், “நான் இறந்த பிறகு என்னுடைய ஆடை ஆபரங்கள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்குத் தான் சொந்தம்” என்றார்.
சாகும் தருவாயிலும்கூட ஏழை எளியவர்களைக் குறித்துக் கவலைப்பட்ட ஹங்கேரி நாட்டின் அரசியான எலிசபெத்தின் விழாவைத் தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம்.

வாழ்க்கை வரலாறு

13 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டை ஆண்டுவந்த இரண்டாம் ஆன்ட்ரு என்பவரின் மகளாகப் பிறந்தவள்தான் எலிசபெத். இவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் அந்த மினுக்கும் ஆடம்பரமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக வாழ்ந்ததுதான் இவருடைய தனிச் சிறப்பு. எலிசபெத் சிறுவயதிலே மிகவும் பக்தியாகவும் எளிமையாகவும் ஏழைகளுக்கு உதவும் நல்ல மனப்பான்மையோடும் வாழ்ந்து வந்தார். இவருக்கு பதினான்கு வயதில் ஜெர்மனியில் உள்ள தூரின்ஜியன் என்ற நகரில் மன்னராக இருந்த லூயிஸ் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டது. திருமணம் ஆனபிறகும் கூட எலிசபெத் ஏழைகளுக்கு உதவுவதையும் பக்தியில் வளர்வதும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதும் குறைந்துபோய்விடவில்லை. அவர் இத்தகைய காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவருக்கு எல்லாவிதங்களிலும் ஒத்துழைப்பு நல்கி வந்தார் அவருடைய கணவரான மன்னர் லூயிஸ். லூயிஸ் எலிசபெத்தை அளவு கடந்த விதத்தில் அன்புசெய்தார். அவர்கள் இருவரின் அன்பின் வெளிப்பாடாக அவர்கள் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஒரு சமயம் எலிசபெத் கேட்டுக்கொண்டதற்கு லூயிஸ் ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டிக்கொடுத்தார். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பில் நாளும் வளர்ந்து வந்தார்கள். இப்படிப்பட்ட தருணத்தில்தான் 1227 ஆம் ஆண்டு மன்னர் லூயிஸ் போருக்குச் செல்லும்போது போகும் வழியிலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். இப்படிப்பட்ட துயர செய்தியைக் கேள்விப்பட்ட எலிசபெத் அரசி மிகவும் கலங்கிப்போனார். அவர் அத்துயர சம்பவத்திலிருந்து மீண்டுவர நீண்ட ஆகியது. இதற்கிடையில் எலிசபெத்தை அரச பதவியிலிருந்து தூக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்கவேண்டும் என்ற சூழ்ச்சிகள் எல்லாம் நடந்தன. ஆனால் அவரோ ஒருசிலர் நல்ல உள்ளங்களின் உதவியுடன் அப்பதவியை தக்க வைத்துக்கொண்டார். தன்னுடைய கணவர் லூயிஸ் இறந்தபிறகு எலிசபெத்துதான் மூன்று பிள்ளைகளையும் பொறுப்புடன் வளர்த்தார். அவர்களை ஆன்மீக காரியங்களில் வளர்த்தெடுப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்பட்டார். இந்த சமயத்தில் பிரான்சிஸ் அசிசியார் சபையில் இருந்த துறவி ஒருவர் அரசியைச் சந்தித்து, அவருக்கு ஆன்மீகக் காரியங்களில் பேருதவியாக இருந்து வந்தார். சில நாட்களிலேயே அரசி எலிசபெத் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் உறுப்பினராகச் சேர்ந்து, அவர்கள் உடுத்தக்கூடிய ஆடையே வந்தார். இதைப் பார்த்து அரசபையில் இருந்தவர், ஒரு அரசி இப்படியா உடை உடுத்துவது?” என்று கேலி பேசினார்கள். ஆனால் அவரோ, “என் வழிகாட்டி, பிரான்சிஸ் அசிசியார் வழியில் நடக்கின்றேன், இதில் என்ன தவறு இருக்கின்றது?” என்று சொல்லி அவர்களுடைய வாயடைத்தார்.


எலிசபெத் ஏழைகள் மீது அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார். அதே நேரத்தில் அவர் ஆண்டவர் இயேசுவின் மீதும் அன்னை மரியாவின்மீதும் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்து வந்தார். அதன்பயனாக ஆண்டவர் இயேசுவும் அன்னை மரியாவும் அவருக்கு நிறைய முறை காட்சி கொடுத்து பல்வேறு உண்மைகளை விளங்கிச் சொன்னார்கள். இப்படி ஆன்மீகமும் அடுத்தவர்மீது அக்கறையும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று வாழ்ந்து வந்த எலிசபெத் 1231 ஆம் ஆண்டு தன்னுடைய இருபத்து நான்காம் வயதில் இறைவனடி சேர்ந்தார். இவருடைய கல்லறையில் அதிகமான புதுமைகள் நடந்தன. இந்தப் புதுமைகள் அனைத்தும் ஆண்டவர் இவரை எந்தளவுக்கு அன்பு செய்தார் என்பதனையும், ஆண்டவரை இவர் எந்தளவுக்கு அன்பு செய்தார் என்பதையும் மக்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் விளைவாக 1235 ஆம் ஆண்டு இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
ஹங்கேரி நகர எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து அன்பு செய்வோம்.

1. ஏழைகள் மீது அன்பு
எலிசபெத் ஏழை எளியவர்மீது அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 1225 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிளேக் நோய் பரவியபோது இவர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் சென்று அவர்களுக்கு உதவி புரிந்தார். அதுமட்டுமல்லாமல் நோயினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு தன்னுடைய ஆடை ஆபரணங்களை விற்று, அதன்மூலமாக வந்த பணத்தை வைத்து அவர்களுக்கு உதவி புரிந்தார். இவ்வாறு அவர் அரசியாக இருந்தும், எப்போதும் ஏழையின் பங்காளியாக இருந்து வந்தார்.
இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்மோடு வாழும் ஏழை எளியவரிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். “மிகச் சிறியோராகிய இவர்களுக்கு செய்த உதவிகளை எல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்பார் இயேசு (மத் 25:40). நாம் ஏழை எளியவருக்கு உதவிகள் செய்கின்றபோது அது இறைவனுக்குச் செய்வதற்குச் சமமாகும்.
ஆகவே ஹங்கேரி நகர தூய எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று ஆன்மீகமும் அன்புப் பணியும் நம்முடைய வாழ்வின் இரு கண்கள் என உணர்ந்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image