நவம்பர் 20 தூய எட்மன்ட்
தூய எட்மன்ட்
“என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி 1: 20-21)
வாழ்க்கை வரலாறு
எட்மன்ட், இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்கிலியாவில் ஆட்சி நடத்திவந்த அரசருக்கு மகனாக 841 ஆம் அண்டு பிறந்தார். இவருக்கு பதினான்கு வயது நடக்கும்போது இவருடைய தந்தை இறந்துவிட இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சிறு வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எட்மன்ட், மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கினார். இவருடைய கனவெல்லாம், பழைய ஏற்பாட்டில் வரக்கூடிய தாவீது அரசரைப் போன்று கடவுளுக்கும் மக்களுக்கும் ஏற்ற ஒரு நல்ல அரசராக விளங்கவேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக இவர் திருப்பாடல்கள் அனைத்தையும் மனனம் செய்தார். அவற்றை நீக்கமற கற்றுத் தேர்ந்தார். அதில் சொல்லப்பட்ட இறைவார்த்தையின் துணையோடு மக்களை நல்லமுறையில் வழிநடத்திச் சென்றார். இதனால் மக்கள் அனைவருக்கும் இவரைப் பிடித்துப் போனது. இவருடைய நிர்வாகத் திறனைப் பார்த்துவிட்டு, ‘இந்த சிறிய வயதில் இவ்வளவு சிறப்பாக இந்த நாட்டை ஆள்கிறாரே’ என்று அவரை நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க, 870 ஆம் ஆண்டு இங்க்வார் தலைமையில் டானிஷ் என்ற இனக்குழு ஒன்று, கிழக்கு ஆங்கிலியாவின்மீது படையெடுத்து வந்து, நாட்டைச் சூறையாடியது. அது மட்டுமல்லாமல், அந்த இனக்குழு அரசர் எட்மன்ட்டைக் கைதுசெய்து அவரைப் பலவாறாக சித்ரவதை செய்தது. ஒருநாள் இங்க்வார், அரசர் எட்மன்ட்டிடம் வந்து, “நீ உன் கடவுளாகிய இயேசுவை மறுதலித்துவிட்டு, என்னுடைய படையில் வந்து படைத்தளபதியாகப் பணியாற்று, இல்லை என்றால் உன்னைக் கொன்றுபோட்டுவிடுவேன்” என மிரட்டினான். எட்மன்ட் அவனுடைய மிரட்டலுக்கு சிறிதுகூட பயப்படாமல், “நீ என்னை என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நான் ஒருபோதும் என் ஆண்டவர் இயேசுவை மறுதலிக்க மாட்டேன்” என்று தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதைப் பார்த்து கதிகலங்கிப் போன இங்க்வார், எட்மன்ட் அரசரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அடி அடியென அடித்தான். பின்னர் அவருடைய உடலில் அம்புகள் எய்து அவரைக் கொன்றுபோட்டான்.
இவ்வாறு அரசர் எட்மன்ட், 870 ஆம் ஆண்டு ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி, தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். இன்றைக்கு இங்கிலாந்து நாட்டில் எட்மன்ட் மிகவும் முக்கியமான ஒரு புனிதராகக் கருதப்படுகின்றார். இவருடைய பெயரில் பல ஆலயங்களும் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய எட்மன்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. கிறிஸ்துவின்மீதுள்ள நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம்
தூய எட்மன்ட்டுடைய வாழ்க்கை வரலாற்றைப் வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் ஆண்டவர் இயேசுவின்கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகிறது. தூய எட்மன்ட்டைப் போன்று நாம், கிறிஸ்துவின்கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருசமயம் ஜே.ஹட்சன் டெய்லரிடம், “மறைபோதகர் என்றால் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர், “மறைபோதகர் என்பவர், ஆண்டவர் இயேசுவிடத்தில் தன்னை முற்றிலுமாகக் கையளித்தவர், அவரிடத்தில் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பவர். விசுவாச வாழ்வில் உயர்வோ, தாழ்வோ, வெற்றியோ, தோல்வியோ எதிலும் நிதானம் இழக்காதவர், குறிப்பாக அவமானங்களைக் கண்டு மனம்தளராதவர், ஆண்டவருடைய வார்த்தையை அனுதினமும் வாசித்து, தியானித்து, அதனைத் தானும் கடைப்பிடித்து, மற்றவரும் கடைபிடிக்கச் செய்வபவர். அப்படிப்பட்டவே உண்மையான மறைபோதகர்” என்றார். ஹட்சன் டெய்லர் மறைபோதகருக்குச் சொல்லக்கூடிய விளக்கம், ஓர் உண்மையான கிறிஸ்தவர் யார் என்பதற்கும் பொருந்துவதாக இருக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் நம்மை முற்றிலுமாக ஆண்டவரிடத்தில் ஒப்படைத்து, வாழ்வில் உயர்வோ தாழ்வோ எது வந்தாலும் மனந்தளராமல், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கவேண்டும். அத்தகைய வாழ்விற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே, தூய எட்மன்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம் |