✠ மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸ் ✠(St. James of the Marches)
✠ஃபிரான்சிஸ்கன் துறவி/ பிரசங்கிப்பாளர்/ எழுத்தாளர் :
(Friar Minor, Preacher and Writer)
✠பிறப்பு : கி.பி. 1391
மோண்டேப்ராண்டோன், அன்கொனாவின் மார்ச், திருத்தந்தையர் மாநிலம்
(Monteprandone, March of Ancona, Papal States)
✠இறப்பு : நவம்பர் 28, 1476
நேப்பிள்ஸ், நேப்பிள்ஸ் அரசு
(Naples, Kingdom of Naples)
✠அருளாளர் பட்டம் : கி.பி. 1624
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)
✠புனிதர் பட்டம் : டிசம்பர் 10, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)
✠முக்கிய திருத்தலம் :
மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸின் தேவ இல்லம், மோண்டேப்ராண்டோன், அஸ்காலி பிக்கெனோ, இத்தாலி
(Sanctuary of St. James of the Marches, Monteprandone, Ascoli Piceno, Italy)
✠நினைவுத் திருநாள் : நவம்பர் 28
✠பாதுகாவல் :
மோண்டேப்ராண்டோன் (Monteprandone);
நேப்பிள்ஸ், இத்தாலியின் இணை பாதுகாவலர் (Co-Patron of Naples, Italy)
புனிதர் ஜேம்ஸ், ஒரு இத்தாலிய இளம் துறவியும், மறை போதகரும், எழுத்தாளரும், ஆவார். "டொமினிக் கங்காலா" (Dominic Gangala) எனும் இயற்பெயர் கொண்ட இவர், மத்திய இத்தாலியின் அந்நாளைய "அன்கொனாவின் மார்ச்" (March of Ancona) எனும் இடத்திலுள்ள "மோண்டேப்ராண்டோனில்" (Monteprandone) ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.
இளம் வயதில் தமது மாமன் உறவிலுள்ள ஒரு மத குருவின் மேற்பார்வையில் கல்வி கற்ற இவர், பெருஜியா பல்கலைகழகத்தில் (University of Perugia) கேனான் மற்றும் சிவில் சட்டம் ஆகிய கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். கி.பி. 1416ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாள், அசிஸியிலுள்ள (Assisi) "போர்ட்டின்குளா" சிற்றாலயத்தின் (Chapel of the Portiuncula) இளம் துறவிகள் மடத்தில் இணைந்தார். அப்போது அவர் தமது பெயரை ஜேம்ஸ் என்று மாற்றிக்கொண்டார். புனிதர் சியென்னா நகர் பெர்னார்டின் (St. Bernardine of Siena) அவர்களின் மேற்பார்வையில் இறையியல் பயின்றார்.
13 ஜூன் 1420 அன்று குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், விரைவிலேயே "டுஸ்கனி" (Tuscany), "மார்ச்செஸ்" (Marches), "உம்பிரியா" (Umbria) ஆகிய இடங்களில் மறை போதனை செய்ய தொடங்கினார்.
கி.பி. 1427ம் ஆண்டு முதல் சுமார் அரை நூற்றாண்டுகள் இவர் சீரிய முறையில் மறை போதனை செய்தார். தவ வாழ்வு பற்றி போதித்தார். கிறிஸ்துவுக்கு எதிரானவர்களுக்கெதிராக போரிட்டார். ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria), ஸ்வீடன் (Sweden), டென்மார்க் (Denmark), போஹெமியா (Bohemia), போலந்து (Poland), ஹங்கேரி (Hungary) மற்றும் போஸ்னியா (Bosnia) ஆகிய நாடுகளில் சிறப்பாக மறை பணியாற்றினார். ஃபிரான்சிஸ்கன் சபையின் விழிப்போடு கவனிக்கின்ற (Observant Branch of the Friars Minor) கிளையைச் சேர்ந்த இவர், சிறப்புமிக்க மறை போதகர் ஆவார்.
தனது வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளை "நேபிள்ஸில்" (Naples) கழித்த ஜேம்ஸ், கி.பி. 1476ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் நாளன்று மரித்தார்.
நவம்பர் 28
✠ புனிதர் கேதரின் லபோர் ✠
✠ புனிதர் கேதரின் லபோர் ✠(St. Catherine Labouré)
*கருணையின் அருட்சகோதரி/ மரியன்னை திருக்காட்சியாளர் :
(Sister of Charity, Marian visionary)
*அருளாளர் பட்டம் : மே 28, 1933
திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)
*புனிதர் பட்டம் : ஜூலை 27, 1947
திருத்தந்தை 12ம் பயஸ் (Pope Pius XII)
*சித்தரிக்கப்படும் வகை : அற்புத பதக்கம் (Miraculous Medal)
*பாதுகாவல் :
அற்புத பதக்கம் (Miraculous Medal), பலவீனமான மக்கள் (Infirmed people), முதியோர் (The elderly People)
"ஸோ லபோர்" எனும் (Zoé Labouré) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கேதரின் லபோர், "தூய வின்சென்ட் தெ பவுலின் பிறரன்பின் புதல்வியர்" (Daughters of Charity of Saint Vincent de Paul) துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாளை தரிசித்த திருகாட்சியாளரும் ஆவார். மரியாளின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.
தொடக்க காலம் :
கேதரின் லபோர், ஃபிரான்ஸ் நாட்டின் பர்கண்டி பகுதியில், "பியர் லபோர்" (Pierre Labouré) என்னும் விவசாயி தந்தைக்கும் "லூயிஸ் மடலின் கோண்டார்ட்" (Louise Madeleine Gontard) என்னும் தாய்க்கும் பிறந்த பதினோரு குழந்தைகளில் ஒன்பதாவது மகளாக 1806ம் ஆண்டு, மே மாதம், 2ம் தேதி பிறந்தார். 1815ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, தமது 9 வயதில் தாயை இழந்தார். அப்போது இவர் மரியன்னையின் ஒரு சொரூபத்தை முத்தம் செய்து, "இப்போது முதல் நீரே என் தாய்" என்று கூறினார்.
அதன் பிறகு, இவர் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே, இவர் மரியன்னை மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையில் உறுப்பினராக இணைந்தார். அதன் மற்ற உறுப்பினர்களோடு இணைந்து பிறரன்பு பணிகளை செய்து வந்தார்.
திருக்காட்சியாளர் :
1830ம் ஆண்டு, ஜூலை மாதம், 8ம் தேதி, இரவில் கேதரின் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரு குழந்தை இவரைச் சிற்றாலயத்திற்கு அழைத்த குரல் கேட்டு விழித்து எழுந்தார். உடனே இவர் சிற்றாலயத்திற்கு விரைந்து சென்றார். அங்கு மரியன்னை நிற்கும் காட்சியை தரிசித்தார். அன்னை மரியாள் இவரிடம், "கடவுள் உன்னை முக்கியமான ஒரு பணிக்குத் தேர்வு செய்துள்ளார்" என்று கூறி மறைந்தார்.
1830ம் ஆண்டு, நவம்பர் மாதம், 27ம் தேதி, அன்னை மரியாள் மீண்டும் இவருக்கு காட்சி அளித்தார். அப்போது மரியன்னை உலக உருண்டை மேல் நின்று கொண்டிருந்தார். அவரது கரங்களில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளிவந்தன. மரியன்னையைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாளே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன. காட்சி பின்பக்கம் திரும்பியது. அதில் சிலுவை அடையாளமும், அதன் கீழ் மாதாவை குறிக்கும் "எம்" (M) என்ற எழுத்தும் காணப்பட்டன. அதன் அடியில் இயேசுவின் திவ்விய இருதயமும், மரியன்னையின் மாசற்ற இருதயமும் காணப்பட்டன. அவற்றைச் சுற்றி 12 விண்மீன்களும் காணப்பட்டன.
புதுமைப் பதக்கம் :
அந்த காட்சி முடிந்ததும் மரியன்னை கேதரினிடம், காட்சியில் கண்டது போன்ற ஒரு பதக்கத்தை கழுத்தில் அணியும் வகையில் தயார் செய்யச் சொன்னார். மேலும் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொள்பவர்கள் இயேசுவுக்கு ஏற்றவர்களாக வாழ்வார்கள் என்றும், பாவ வாழ்வில் இருந்து விலகுவார்கள் என்றும், மரியன்னை அறிவித்தார்.
இந்த காட்சிகளின் உண்மைத் தண்மை பின்பு திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது. கேதரினும் அன்னை மரியாள் சொன்னபடி செய்து, மக்கள் பலரும் அற்புத பதக்கத்தை அணிய வழிகாட்டினார். அதைக் கழுத்தில் அணிந்துகொண்ட பலரும் பல்வேறு நன்மைகளை அடைந்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத சிலர் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொண்டதால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னறிவிப்புகள் :
கேதரின் லபோர், எதிர் காலத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை முன்னறிவிக்கும் வரமும் பெற்றிருந்தார். இவர் முன்னறிவித்தபடியே பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் சில முன்னறிவிப்புகள் பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறப்பு :
தனது வாழ்நாள் முழுவதையும் கடவுள் பக்தியின் மேன்மைக்காகவும், மரியன்னையின் பக்தியைப் பரப்பவும், அர்ப்பணித்த கேதரின், 1876ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் மரணம் அடைந்தார்.
புனிதர் பட்டம் :
1933ம் ஆண்டு, மே மாதம், 28ம் தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.
கேதரின் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கேதரினின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
1947ம் ஆண்டு, ஜூலை மாதம், 27ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனிதர் கேதரின் லபோரின் அழியாத உடல், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "ரியூ டு பக்" (Rue du Bac) எனுமிடத்திலுள்ள "அற்புத பதக்க அன்னை சிற்றாலயத்தில்" (Chapel of Our Lady of the Miraculous Medal) இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.