Bl.Maria Marabillas DeJesus St. Damasus 1 St. Daniel The Stylite

டிசம்பர் 11

தூய தமசுஸ்

mary

தூய தமசுஸ்

இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு, காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று” (மத் 8:26)

வாழ்க்கை வரலாறு

அன்னையாம் திரு அவை இன்று தூய தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர் 304 ஆம் ஆண்டு, உரோமை நகரில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இவர் உரோமை நகரில் இருந்த மறைசாட்சியான தூய லாரன்சின் ஆலயத்தில் திருத்தொண்டராக தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கினார். இதற்குப் பின்பு திருத்தந்தை தூய லிபேரியுஸ் என்பவரிடத்தில் செயலராகப் பணியாற்றினார். 366 ஆம் ஆண்டு, திருத்தந்தை இறந்துவிட, தமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமசுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது, திருத்தொண்டராக இருந்த உர்சினியுஸ் என்பவருக்குப் பிடிக்கவில்லை. உர்சினியுஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச் சேர்த்துக்கொண்டு, தன்னை திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டார். இதனால் திருச்சபையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

இதனை அறிந்த வலேண்டின் அரசர் தமசுஸ்தான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை என்று சொல்லி, அவரைத் திருத்தந்தையாக அங்கிகரித்தார். இவருக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த உர்சினியுசை அவர் நாடு நாடுகடத்தினார். என்னதான் உர்சினியுஸ் உரோமையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அவருடைய ஆதரவாளர்கள் திருத்தந்தை தமசுசின் பெயரைக் கெடுப்பதும், அவருக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக இருந்தார்கள். இதற்கு ஒரு முடிவுகட்ட விரும்பிய திருத்தந்தை 380 ஆம் ஆண்டு ஆயர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் செய்தார்.

இப்படி தமசுஸ் திருத்தந்தையாக பொறுப்பேற்ற புதிதில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தாலும், நாட்கள் செல்லச் செல்ல பல்வேறு பணிகளை மிகத் திறம்பட செய்யத் தொடங்கினார். 380 ஆம் ஆண்டு, உரோமையை ஆண்டுவந்த தியோடோசியுஸ் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தார். இதனால் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட எல்லாத் தடைகளும் நீங்கின. இதைத் தொடர்ந்து திருத்தந்தை தமசுஸ், கான்ஸ்டான்டிநோபில் என்ற பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கம் ஆரியபதத்தையும், தூய ஆவியாரை இறைவன் இல்லை என்று சொல்லிவந்த மாசிதோனிய தப்பறைக் கொள்கையினையும் முற்றிலுமே எதிர்த்து நிர்முலமாக்கியது.

இது மட்டுமல்லாமல் உரோமையரின் ஆட்சியில், விவிலியம் தொடர்பாக எழுதப்பட்டவை யாவும் வெளிக்கொண்டு வராமலே இருந்தன. இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தடைகள் நீங்கியதால், திருத்தந்தை தமசுஸ் அவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வர பெரிதும் உழைத்தார். இவருடைய காலத்தில்தான் தூய ஜெரோம் விவிலியத்தை லத்தின் மொழிக்கு மொழிபெயர்த்த முக்கியான ஒரு நிகழ்வு அரங்கேறியது. மேலும் இவர் தனக்கு முன்பாக இருந்த திருத்தந்தையர்களின் பட்டியலைத் தயார் அதை வெளியிட்டார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக உரோமானிய கல்லறைகளை எல்லாம் புனிதத்தலமாக மாற்றி, அதனை மக்களுடைய பார்வைக்கு வைத்தார். இதுபோன்று பல்வேறு பணிகள் திருத்தந்தை தமசுஸின் காலத்தில் நடைபெற்றன.

இப்படி திரு அவையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்த திருத்தந்தை தமசுஸ் 384 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தமசுஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று வெற்றிகொள்வோம்

தூய தமசுஸிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியாமல், அதனை எதிர்த்து நின்று வெற்றிகொள்ளவேண்டும் என்பதுதான். தமசுஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபோது பல பிரச்சனைகளைச் சந்தித்தார். அவருக்கு எதிரானவர்கள் அவரைப் பற்றி இல்லாதது பொல்லாது எல்லாம் சொன்னார்கள். அதற்காக அவர் ஓடி ஒழியவில்லை, மாறாக அதனை துணிவோடு எதிர்த்து நின்றுவெற்றி கொண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளைக் கண்டு, ஓடி ஒழிந்திடாமல், அதைத் துணிவோடு எதிர்த்து நின்று ஜெயிக்கவேண்டும் என்பதுதான் தூய தமசுஸ் நமக்குக் கொடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

பிரியா, கீதா என்ற சகோதரிகள் இருவர் ஒரு பள்ளியில் ஆசிரியைகளாகப் பணிபுரிந்துவந்தார்கள். பிரியா முதல்வகுப்பு ஆசிரியை. கீதா இரண்டாம் வகுப்பு ஆசிரியை. கல்வியாண்டுத் தொடக்கம் என்றாலே பிரியாவிற்குக் காய்ச்சல் வந்துவிடும். முதல் நான்கு மாதங்கள் போராட்டமாய் தோன்றும். புதிய மாணவர்களைப் பழக்குவதற்குள் பிரியா படாதபாடுதான் படுவார். ஆனால் கீதா அப்படியில்லை. அவர் புதிது புதிதாய் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார். மாணவர்களும் அவருடைய வகுப்பிற்காக தவம் கிடப்பார்கள்.

நாட்கள் உருண்டோடின. மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிகவும் கடினம் என்று பிரியா பள்ளிக்கு வருவதை பாதியிலே நிறுத்திவிட்டார். ஆனால், கீதாவோ மாணவர்களுக்கு மிக உற்சாகமாகக் கற்றுக்கொடுத்தார். அதனால் அந்தப் பள்ளியிலே சிறந்த ஆசிரியையாக உருமாறினார்.

பிரச்சனை அல்லது சூழல் ஒன்றுதான். ஆனால், நாம் அதனை எப்படி எதிர்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது.

ஆகவே, தூய தமசுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று எதிர்வரும் பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image