St. Frances Xavier Cabrini

டிசம்பர் 22

புனித பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி

mary

புனித பிரான்சிஸ்கா சவேரியா கப்ரீனி
St.Franziska Xaviera Cabrini

 

 * அருட்பணியாளர், நிறுவனர் : (Religious and Foundress)

 * பிறப்பு : ஜூலை 15, 1850
சான் ஆஞ்சலோ லோடிகியனோ, லோடி பிராந்தியம், லொம்பார்டி-வெனீஷியா அரசு, ஆஸ்திரியன் பேரரசு
(Sant'Angelo Lodigiano, Province of Lodi, Kingdom of Lombardy-Venetia, Austrian Empire)

 * இறப்பு : டிசம்பர் 22, 1917 (வயது 67)
சிகாகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Chicago, Illinois, United States America)

 * முக்திபேறு பட்டம் : நவம்பர் 13, 1938
திருத்தந்தை பதினோராம் பயஸ்  (Pope Pius XI)

 * புனிதர் பட்டம் : ஜூலை 7, 1946
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

 * முக்கிய திருத்தலங்கள் :
அன்னை கேப்ரினியின் உயர்நிலைப் பள்ளி சிற்றாலயம், நியூ யார்க் நகர்
(Chapel of Mother Cabrini High School, New York City)

 * பாதுகாவல் :
வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், லிங்கன்
(Immigrants, Hospital Administrators, Lincoln)

"ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி" (Frances Xavier Cabrini) என்றும், "அன்னை கேப்ரினி" (Mother Cabrini) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ஒரு இத்தாலிய-அமெரிக்க (Italian-American) அருட்சகோதரி ஆவார். கத்தோலிக்க சமய நிறுவனமான "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவியவர் இவரேயாவார். இச்சபையானது இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. புலம்பெயர்ந்து வந்து, அமெரிக்க குடியுரிமை பெற்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் நபர் இவரேயாவார்.

அப்போதைய "ஆஸ்திரிய பேரரசின்" (Austrian Empire) பிராந்தியமான "லோடியில்" (Lodi) பிறந்த இவரது தந்தையாரின் பெயர் "அகஸ்டினோ கேப்ரினி" (Agostino Cabrini) ஆகும். "ஸ்டெல்லா ஒல்டினி" (Stella Oldini) இவரது தாயார் ஆவார். வசதிவாய்ப்புள்ள செர்ரி மர விவசாயிகளான (Cherry Tree Farmers) இந்த தம்பதியினருக்கு பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் கேப்ரினி கடைக்குட்டி ஆவார். துரதிருஷ்டவசமாக, பதின்மூன்று பேரில் ஒன்பது பேர் வளர் இளம் பருவத்திலேயே மரித்துப் போயினர். கேப்ரினியுடன் சேர்த்து நான்கு பேரே உயிர் தப்பி வாழ்ந்தனர். இரண்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த கேப்ரினி, மிகவும் சிறிய உருவம் கொண்டவராகவும் பலவீனராகவும் காணப்பட்டார். வாழ்நாள் முழுதும் நோய்த்தொற்றுள்ளவராகவே வாழ்ந்தார். தமது சிறு வயதில், ஒரு விரைவான கால்வாய் அருகே வசித்து வந்த தமது தாய்மாமனும், கத்தோலிக்க குருவுமான, "டோன் லுய்கி ஒல்டினி" (Don Luigi Oldini of Livagra) என்பவரைக் காண செல்லும்போதெல்லாம், காகிதக் கப்பல்களைச் செய்து கால்வாயில் விட்டு விளையாடுவாராம். அங்குள்ள மலர்களை மறைப் பணியாளர்களென அழைக்கும் இச்சிறுமி, அவர்களை தாம் செய்யும் காகிதக் கப்பல்களில் சீனா மற்றும் இந்திய நாடுகளுக்கு செல்லுமாறு பணிப்பாராம்.

தமது பதின்மூன்று வயதில், "திருஇருதய மகளிர்" (Daughters of the Sacred Heart) நடத்திய பள்ளியில் கல்வி கற்ற இவர், ஐந்து வருடங்களின் பின்னர், கற்பிக்கும் சான்றுடன் பட்டம் பெற்றார். 1870ம் ஆண்டு, தமது இருபது வயதில், தமது பெற்றோர் மரித்ததும் "அர்லுனோ" (Arluno) எனுமிடத்திலுள்ள "திருஇருதய மகளிர்" (Daughters of the Sacred Heart) சபையில் இணைய விண்ணப்பித்தார். இச்சபையின் அருட்சகோதரியர், இவரது முன்னாள் ஆசிரியைகள் ஆவர். அவர்கள், இவரது பலவீனம் மற்றும் நோய்களை காரணம் காட்டின் நிராகரித்தனர்.

இவர், "கொடோக்னோ" (Codogno) எனுமிடத்திலுள்ள பிராவிடன்ஸ் அனாதை இல்லத்தின் தலைமை ஆசிரியை ஆனார். அங்கே கற்பிக்கும் பணியாற்றிய இவர், அங்கேயே ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக ஒரு சிறு சமூகத்தை உருவாக்கினார். 1877ம் ஆண்டு, தமது சமய பிரமாணங்களை ஏற்ற கேப்ரினி, இயேசு சபை புனிதரும் (Jesuit saint) மறை பரப்புப் பணிகளின் பாதுகாவலருமான "ஃபிரான்சிஸ் சேவியரை" (Francis Xavier) கௌரவிக்கும் விதமாக தம் பெயருடன் சேவியர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.

கேப்ரினி, தனது முப்பதாவது வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழி காட்டியுள்ளார். விதவைப் பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார்.

இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் கனவையும் நிறைவேற்ற முடிவு செய்தார். 1880ம் ஆண்டு, தம்முடன் ஆறு அருட்சகொதரியரையும் இணைத்துக்கொண்டு, "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத் தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

1877ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சீன நாட்டில் அருட்பணி சகோதரிகளின் சபை ஒன்றினை தொடங்கிட திருத்தந்தை "ஒன்பதாம் பயசின்" (Pope Pius IX) அனுமதி வேண்டி சென்றார். ஆனால், திருத்தந்தையோ சீன நாட்டுக்கு பதிலாக அவரை அமெரிக்கா செல்ல அறிவுறுத்தினார். இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டவும் அங்கே இவரது சேவைகள் தேவைப்படும் என்று இயம்பிய திருத்தந்தை அவர்கள், கிழக்கேயல்ல - மாறாக மேற்கே செல் என்று அறிவுரை கூறினார்.

திருத்தந்தையின் அறிவுரைப்படி தமது சக அருட்சகோதரிகள் ஆறு பேருடன் அமெரிக்கா கிளம்பிய கேப்ரினி, 1889ம் ஆண்டு, மார்ச் 31ம் நாள், நியூயார்க் நகர் சென்றடைந்தார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு படியிலும் ஏமாற்றங்களையும் சிரமங்களையுமே எதிர்கொண்ட கேப்ரினி மனம் தளர்ந்து போகவில்லை. ஆரம்பத்தில் அவர்களுக்கு அனுசரணையாய் இல்லாத "பேராயர் மைக்கேல் கொர்ரிகன்" (Archbishop Michael Corrigan), அவர்கள் தங்குவதற்கு "கருணையின் சகோதரிகள்" (Sisters of Charity) பள்ளியை ஏற்பாடு செய்து தந்தார். கேப்ரினி, நியூ யார்க் நகரில் 'வெஸ்ட் பார்க்' (West Park, New York) என்ற இடத்தில், ஒரு அனாதைகள் இல்லம் தொடங்கிட பேராயர் அவர்களிடம் அனுமதி பெற்றார். இன்று, அதே அனாதைகள் இல்லமானது "புனிதர் கேப்ரினி இல்லம்" (Saint Cabrini Home) என்ற பெயரில் இயங்குகின்றது.

இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய மற்றும் அவசியப்படும் மக்களுக்கு மத இலக்கண மற்றும் கல்வி வகுப்புகள் ஏற்பாடு செய்து தந்தார். மிகப்பெரிய முரண்பாடுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பள்ளிகள் மற்றும் அநாதை இல்லங்களை நிறுவி நடத்தினார். கேப்ரினி ஜெப சிந்தையோடு இருந்தது போலவே சமயோசிதமாகவும் இருந்தார். தாராள மனப்பான்மை கொண்ட மக்களை இனம்கண்டு வைத்திருந்தார். அவர்களால் அவருக்கு அவசியப்படும்போது பணம், நேரம், உழைப்பு, மனித சக்தி, ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தேடி வந்தன. நியூ யார்க் நகரில் "கொலம்பஸ் மருத்துவமனை" மற்றும் "இத்தாலியன் மருத்துவமனை" (Columbus Hospital and Italian Hospital) ஆகிய இரண்டு மருத்துவமனைகளை நிறுவினார். 1980களில் அவையிரண்டு மருத்துவமனைகளும் "காப்ரினி மருத்துவ மையம்" (Cabrini Medical Center) என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. ஆயினும், 2008ம் ஆண்டு, இம்மருத்துவமனை மூடப்பட்டது.

கேப்ரினி மற்றும் அவரது சக அருட்சகோதரிகளால் "சிக்காகோ" (Chicago) நகரின் இதயப்பகுதியில் "கொலம்பஸ் விரிவாக்க மருத்துவமனை" (Columbus Extension Hospital) என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவினர். பின்னர் இது "புனிதர் கேப்ரினி மருத்துவமனையாக" (Saint Cabrini Hospital) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விரண்டு மருத்துவமனைகளும் மூடப்பட்டன.

புனிதர் கேப்ரினி அமெரிக்காவின் "நியூ யார்க்" (New York), "சிக்காகோ" (Chicago), "டேஸ் ப்லேய்ன்ஸ்" (Des Plaines), "இல்லினாய்ஸ்" (Illinois), "சியாட்டல்" (Seattle), "நியூ ஒர்லியான்ஸ்" (New Orleans), "டென்வர்" (Denver), "கோல்டன்" (Golden), "கொலராடோ" (Colorado), "லாஸ் ஏஞ்சலிஸ்" (Los Angeles), "ஃபிலடெல்ஃபியா" (Philadelphia) ஆகிய நகரங்களிலும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (South America and Europe) போன்ற நாடுகளிலுமாக மொத்தம் 67 நிறுவனங்களை நிறுவினார்.

சீன தேசத்தில் ஒரு மதப் போதக சபை (Missionary) தொடங்க வேண்டுமென்ற புனிதர் கேப்ரினியின் நெடுநாள் கனவு, அவரது மரணத்தின் நீண்ட காலத்தின் பின்னர் அவரது மிஷனரி அருட்சகோதரிகளால் நிறைவேறியது. மிக அதிக அளவிலான சமூக மற்றும் சமய எழுச்சியின் பின்னர், ஒரு சைபீரியன் (Siberian) அருட்சகோதரியை விட்டுவிட்டு அவர்கள் சீன தேசம் புறப்பட்டுச் சென்றனர்.

1909ம் ஆண்டில் கேப்ரினி ஒரு அமெரிக்கா குடிமகளாக குடியுரிமை பெற்றார்.

67 வயதான கேப்ரினி, உள்ளூர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் இனிப்புகள் தயார் செய்யும் பணியிலிருந்தபோது வயிற்றுக்கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகள் காரணமாக, 1917ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று, சிக்காகோவிலுள்ள (Chicago) கொலம்பஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல், நியூ யார்க் நகரில் அவரால் நிறுவப்பட்ட அநாதை இல்லமான "புனிதர் கேப்ரினி இல்லத்தில்" (Saint Cabrini Home) அடக்கம் செய்யப்பட்டது.

செபம்:
எல்லோர்க்கும் எல்லாமுமானவரே! உம்மிடமிருந்து சக்தியை பெற்று, பல பணிகளை ஆற்றி முழுமையாக உம் நற்செய்திப் பணியில் பங்குகொண்ட புனித பிரான்சிஸ்கா சவேரியாவை நீர் இவ்வுலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றோம். அவரின் அருட்துணையால் அச்சபைத் துறவிகள் மேன்மேலும் வளர்ந்து உம்மை போற்றிப் புகழ்ந்து வாழ வரமருளும்.

 

image