✠இறப்பு : கி.பி. 303
ஸ்போலேடியம், ரோமன் ஊம்ப்ரியா (தற்போதைய ஸ்போலேட்டோ, ஊம்ப்ரியா, இத்தாலி)
(Spoletium, Roman Umbria (Modern-day Spoleto, Umbria, Italy)
✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 30
✠பாதுகாவல் : சியென்னா, அசிசி, ஃபெர்மோ (Fermo)
ஸ்போலேட்டோ நகர புனிதர் சபினஸ், "டயோக்லேஷியன்" (Diocletian) என்ற அரசனின் அடக்குமுறைகளை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த கிறிஸ்தவ ஆயர் ஆவார்.
சரித்திரவியலாளர்களின்படி, "எட்ரூரியா" (Etruria) மற்றும் ஊம்ப்ரியா" (Umbria) நகரங்களின் ஆளுநரான (Governor) "வெனஸ்ஷியன்" (Venustian) என்பவன் சபினஸ் மற்றும் அவரது திருத்தொண்டர்களை "அசிசி" (Assisi) நகரில் கைது செய்வித்தான். அரசன் "டயோக்லேஷியனின்" (Diocletian) ஆணைப்படி, கிறிஸ்தவர்கள் அனைவரும் பிற கடவுளர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர்களின் உடமைகளை பறிமுதல் செய்துவிட்டு அவர்கள் கொல்லப்படவேண்டும் என்பதாகும்.
மிகச்சிறந்த முறையில் கிறிஸ்துவை பின்பற்றிய சபினசின் விசுவாசத்தை பரிகசித்த ஆளுநர் "வெனஸ்ஷியன்" (Venustian), இறந்து போன மனிதனை (கிறிஸ்து இயேசுவை) ஆராதிக்குமாறு சபினஸ் மக்களை தூண்டுவதாக குற்றம் சாட்டினான். மரித்த இயேசு மூன்றாம் நாள் மரித்தவரிலிருந்து உயிர்த்தெழுந்ததாக கூறியதைக் கேட்ட "வெனஸ்ஷியன்", சபினசையும் அவ்வாறு செய்ய அழைத்தான்.
"வெனஸ்ஷியன்" சபினசின் கைகளை வெட்டி எறிந்தான். அவரது திருத்தொண்டர்கள் பயத்தால் அஞ்சி நடுங்கினர். ஆனால் சபினஸ் அவர்களை அஞ்சாதிருக்க கூறினார். கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாயிருக்க உற்சாகப்படுத்தினார். ஆனால் திருத்தொண்டர்கள் அனைவரும் இரும்புக் கொக்கிகளால் உடல் முழுதும் கிழிக்கப்பட்டு மரித்தனர்.
அதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சபினஸ் மீது இரக்கம் கொண்ட "செரீனா" (Serena) என்ற பெண்ணொருவர் இவர்மீது பரிதாபம் கொண்டு இவருக்கு பணிவிடை செய்தார். சிறையில், பிறப்பிலேயே பார்வையில்லாத ஒரு கைதியின் பார்வையை சபினஸ் மீட்டு கொடுத்தார். இயற்கையாகவே சிறிது கண்பார்வை குறைவாயிருந்த "வெனஸ்ஷியன்", இதனைக் கேள்வியுற்றதும், சபினசிடம் சென்று, தம்மையும் குணப்படுத்துமாறு கூறினான். தமது வல்லமையுள்ள செபத்தினால் ஆளுநரின் பார்வையை திரும்ப பெற்றுத் தந்த சபினஸ், "வெனஸ்ஷியனை" மனம் மாற வைத்தார். "வெனஸ்ஷியன்" கிறிஸ்துவை விசுவாசித்தான். பின்னர், அவனே சபினசுக்கு பாதுகாப்பளித்தான்.
இதனைக் கேள்வியுற்ற அரசன் "மேக்ஸிமியானஸ் ஹெர்குலியஸ்" (Maximianus Herculius), "லூசியஸ்" (Lucius) என்ற அரசு அதிகாரியிடம் இதனை விசாரிக்க சொன்னான். "வெனஸ்ஷியன்", அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஆகிய நால்வரும் 'அசிசி' (Assisi) நகரில் வைத்து லூசியஸால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னர், "ஸ்போலேட்டோ" (Spoleto) நகரில் வைத்து சபினஸ் அடித்தே கொல்லப்பட்டார்.