St. Catherine Laboure St. Sylvester 1

டிசம்பர் 31

தூய சில்வெஸ்டர்

mary

தூய சில்வெஸ்டர்

“நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்கு தளபதியாகவும் தலைவராகவும் ஏற்படுத்தியுள்ளேன்” (எசா 55:4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய சில்வெஸ்டர், மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமையில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த ஆசிரியரும் குருவுமான சாரிதியுஸ் என்பவரிடத்தில் கல்வி கற்று, பின்னாளில் குருவாக மாறினார்.

சில்வெஸ்டர், குருவான சமயத்தில் டயோக்ளசியன் என்பவன் உரோமையை ஆண்டுவந்தான். அவன் கிறிஸ்தவர்களைக் கடுமையாக சித்ரவதை செய்துவந்தான். அவனுடைய இறப்புக்குப் பின்பு கான்ஸ்டன்டைன் உரோமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். 312 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் நாள், அவன் மாக்செண்டியுஸ் என்பவனோடு போர்தொடுக்க வேண்டி வந்தது. அதனால் மன்னர் கான்ஸ்டன்டைன் திரு அவையின் உதவியை நாடினான். அந்தப் போரில் அவனுக்கு வெற்றி கிடைத்ததும் அவன் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். இதனால் நிறைய விஷயங்கள் முற்றிலுமாக மாறின.

இதற்கிடையில் திருத்தந்தையாக இருந்த மில்தியாதேஸ் இறந்துவிட, சில்வெஸ்டர் 33 வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார். இதற்குப் பின்பு அவர், மன்னர் கான்ஸ்டன்டைனின் ஒத்துழைப்போடு நிறைய வளர்ச்சிப் பணிகளை செய்யத் தொடங்கினார். அதற்கு முன்பாக டாக்மாடிஸ்ட் என்ற தப்பரைக் கொள்கையினையும், 325 ஆம் ஆண்டு நடந்த நிசேயா பொதுச் சங்கத்தின் வழியாக ஆரியப்பதத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த ஆரியபதம் கிறிஸ்துவின் இறைத் தன்மையை மறுத்துவந்தது. அதனால் திருத்தந்தை சில்வெஸ்டர் அதனைக் கடுமையாகக் கண்டித்து, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இதற்குப் பின்பு இவர் நிறைய வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தார். குறிப்பாக மன்னர் கான்ஸ்டன்டைனின் ஒத்துழைப்போடு லாத்தரன் பேராலயம், சாந்தா குருஸ் பேராலயம், தூய பேதுரு பசிலிக்கா போன்றவற்றைக் கட்டி எழுப்பினார். மேலும் ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த மறைசாட்சிகளினுடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்தெடுத்தார். இவற்றோடு கூட திரு வழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் நிறைய நல்ல காரியங்களைச் செய்தார். இவருடைய காலத்தில்தான் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாகவும் ஆண்டவருடைய நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

திருத்தந்தை சில்வெஸ்டர், பல்வேறு பணிகளைச் செய்தார். அவற்றையெல்லாம் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் தான் செய்தார். இவர் செய்துவந்த பணிகளைப் பார்த்துவிட்டு மன்னரும் தன்னுடைய இருப்பிடத்தை உரோமையிலிருந்து காண்டாண்டிநோபிலுக்கு மாற்றிக்கொண்டு, திரு அவை மேலும் மேலும் வளர ஒத்துழைப்பை நல்கினார்.

இப்படி பல்வேறு பணிகளை மிகச் சிறப்பாக செய்து, திரு அவையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய திருத்தந்தை சில்வெஸ்டர், 335 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவர்தான் மறைசாட்சியாக உயிர்துறக்காமல் தூயவர் கூட்டத்தில் இணைந்த முதல் தூயவர் அல்லது புனிதர் என்பது குறிப்பிடத் தக்கது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சில்வெஸ்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவோம்

தூய சில்வெஸ்டர் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் செய்த நிறைய காரியங்களை தொலைநோக்குப் பார்வையுடன்தான் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய காலத்தில்தான் கிறிஸ்தவம் அரச மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இப்படிப்பட்ட சூழலில், எதை எதையெல்லாம் செய்தால், திரு அவை எதிர்காலத்தில் நல்லவிதமாய் வளரும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செய்தார். அதனால்தான் திரு அவை இன்றைக்கு இந்தளவுக்கு வளர்ந்து நிற்கின்றது. இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் நம்முடைய இந்திய நாட்டில் தோன்றிய தூய குரியாகோஸ் எலியா சவராவைக் குறித்துச் சொல்லியாக வேண்டும். இவர் கேரளத் திரு அவையில் பல காரியங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்தான் இந்திய மண்ணில் முதன்முதலாக இருபாலருக்கும் துறவற சபையை (CMI, CMI) நிறுவியவர். இவர்தான் கேளராவில் அச்சகத்தைக் கொண்டுவந்தவர், இவர்தான் 40 மணிநேர நற்கருணை ஆராதனையை அறிமுகப் படுத்தியவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்தான் அறிவே ஆயுதம், கல்வியே பலம் என்று ஆலயத்தை ஒட்டியே பள்ளிக்கூடம் இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து அதனை செயல்படுத்தினார். இன்றைக்கு கல்வியில் கேரளா மாநிலம் முதல் இடத்தில் இருக்கின்றது என்று சொன்னால், அதற்கு இவர் எடுத்த முன் முடிவுகள், திட்டங்கள்தான் காரணம் என்றால், அது மிகையில்லை.

ஆகவே, தூய சில்வெஸ்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தூய குரியாகோசைப் போன்று, எதையும் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துப் செய்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image