பொது நிலையினருக்கான
திருமணத் தயாரிப்பு கையேடு

இனிய இல்லறம்
ஆசிரியர் குழு
அருள்பணி. அ. சூ. ஜான் பீட்டர்
முனைவர் அ. அந்தோனி குருசு
அருள்சகோதரி ஸ்டெல்லா ரூபி, FBS
அருள்பணி. சிரில், சே.ச.
வெளியீடு: தமிழக ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழு
37, அல்லித்துறை சாலை, அருணா நகர், புத்தூர்,
திருச்சிராப்பள்ளி - 620 017 தொ. பே. : 0431-271080
உள்ளடக்கம்
ஆசியுரை
என்னுரை
திருமணத் தயாரிப்புப் பயிற்சியின் நோக்கம்
1. உன்னையே நீ அறிந்து கொள்
2. திருமணம் - ஓர் அருள் அடையாளம்
3. பிரிதலும் இணைதலும்
4. பாலியல் வழியாக ஒன்றுபட ஓர் அழைப்பு
5. நெருக்கம்
6. இயற்கை முறையில் குழந்தைப் பிறப்பைத் திட்டமிடல்
7. முதல் குழந்தைப்பேறு
8. தாய்மையும் குழந்தை வளர்ப்பும்
9. கர்ப்பமும் கற்பும்
10. ஆண் - பெண் வேறுபாடுகளை அறிதல்
11. பொருளாதாரம்
12. திருச்சபையின் திருமணச்சட்டங்கள்
13. குடும்ப ஆன்மீகம் - குடும்ப செபம்
14. குடிப்பதற்கான காரணங்கள், குடிக்கின்றவர்களின் நிலை
பக்கங்கள் : 160
===========================
ஆசியுரை
தமிழக ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழு புதிய திருமணத் தயாரிப்புக் கையேடு ஒன்றை 'இனிய இல்லறம்' என்னும் தலைப்பில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப, குடும்பங்கள் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி அதனைச் சரியான முறையில் அணுகுவதற்கான திறன்களையும் வழிமுறைகளையும் உள்ளடக்கித் தயாரித்திருப்பது பாராட்டுதற்குரியது. இந்தக் கையேடு குடும்பத்தைப் பல கோணங்களில் ஆய்வு செய்து, குடும்பத்தை உருவாக்கும் திருமணம். அதற்கான தயாரிப்பு, இல்லற வாழ்வின் அடிப்படை நோக்கம் மற்றும் அம்சங்கள், திருச்சபையின் திருமணச் சட்டங்கள், குடும்ப மறைக்கல்வி, குடும்பத்தைப் பற்றிய இறையியல், அறநெறி, மற்றும் உளவியல் பார்வை, குழந்தை பிறப்பிற்கு முன்பு - குழந்தை பிறப்பிற்குப் பின்பு உள்ள கவனிப்புகள் போன்றவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கின்றது. ஒவ்வொரு தலைப்பிலும் நடைமுறை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், சிந்தனைப் பயிற்சிகள் போன்றவை அளிக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.
இன்றைய நவீன உலகில் குடும்பவாழ்வு என்றுமே காணாத அளவுக்குப் பல மாற்றங்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருகிறது.
நம் சமூகம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை அமைப்பு முறையிலிருந்து மாறித் தனிக்குடும்பமாக உருவாகி வருகின்றது. இப்புதிய குடும்ப வாழ்க்கைமுறையில் திருமணத் தம்பதிகள் பல புதிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றது. ஒருவர் ஒருவரைப் புரிந்து ஏற்றுக்கொள்ளாமை, விட்டுக்கொடுக்க மனமில்லாமை, தம்பதியர்களின் பெற்றோர்களின் தேவையில்லாத தலையீடு, பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவை திருமண வாழ்வின் மகத்துவத்தையும் மாண்பையும் அழித்து வருகின்றன. இதனால் பல குடும்பங்கள் பிரிந்தும், சிதைந்தும் வாழ்கின்றன. இதன் விளைவு குழந்தைகளின் மனநிலை, மற்றும் அனைத்து வளர்ச்சிகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.
மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதியர் உடல் வளர்ச்சி மட்டுமின்றி மனப்பக்குவமும், முதிர்ச்சியும் பெறவேண்டும். திருமணத்தின் இயல்பு, நோக்கம், அதனால் தம்பதியர் ஏற்கும் கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை உணர்ந்து, தங்களையே தயாரித்துக்கொள்வது இன்றியமையாதது. இன்று தம்பதியரிடையே ஏற்படும் பல்வேறு உறவு விரிசல்களை நீக்கி இறைவனில் வாழும் இல்லறம் அமைத்து, என்றும் அன்புறவுவிலும் தோழமையிலும் வளர்வதற்கான பயிற்சியை வழங்குவதுதான் இந்த இனிய இல்லறம் நூலின் நோக்கம்.
ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் திருணத் தயாரிப்பு வகுப்புகள் சிறப்பாக நடைபெற இந்நூல் உறுதுணையாக இருக்கும். இந்நூலைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தத் திருப்பணியாளர்களையும், துறவறத்தாரையும் பொதுநிலையினரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்நூலில் பொதிந்து கிடக்கும் கருத்துக்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் குடும்பம் இறைவனில் வாழும் இனிய இல்லறமாக மிளிர வாழ்த்துகிறேன்.
படித்தவரும் பாமரரும் புரிந்து கொள்ள இந்நூல் எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய தமிழக ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழுவின் செயலர், மறைமாவட்டச் செயலர்கள், அருட்தந்தையர்கள், மற்றும் இந்நூல் முழுவடிவம் பெற உதவிய அனைவரையும் நன்றி உணர்வோடு பாராட்டுகிறேன். இறைவன் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்குவினாஸ், M.A., D.CL
பணிக்குழுத் தலைவர்
=====================
என்னுரை
உறவுகள் இல்லாமல் மனித வாழ்வு வளராது, மலராது, அர்த்தமும் பெறாது. உண்மையான ஆழமான அன்பு உறவால்தான் குடும்பங்கள் கட்டி எழுப்பப் படுகின்றன. இந்தக் குடும்பங்கள்தாம் சமூக அமைப்பின் அடித்தளமாக அமைந்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குகின்றன. இதைபோல் திருச்சபை என்கிற கிறிஸ்தவ விசுவாச சமூகத்திற்கும் குடும்பங்கள்தாம் ஆணிவேரும் அடித்தளமும் ஆகும். நல்ல குடும்பங்களை உருவாக்காமல் திருச்சபை வளரமுடியாது. எனவே அதனை உருவாக்குவது திருச்சபையின் தலையாய பணியாகும். இப்பணியைக் குடும்ப வாழ்வு பணிக்குழு நிறைவேற்றி வருகின்றது. இதன் ஒரு பகுதியாகத்தான் திருமணவாழ்வுக்குத் தங்களையே தயாரிக்கும் இளையோருக்குப் பயிற்சியும் ஆலோசனையும் தருவதாகும். இதுவரை மணவாழ்வின் மகிழ்ச்சி என்ற நூலைப் பயன்படுத்திப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. மாறிவரும் காலச்சூழ்நிலைக்கேற்ப, குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மனத்தில் கொண்டு புதிய கையேடு ஒன்றை, உருவாக்கவேண்டியது எங்களது கடமையாகவும் கட்டாயமாகவும் இருந்தது. இதன் அடிப்படையில் பிறந்ததுதான் உங்கள் கையில் தவழும் இனிய இல்லறம் என்கிற புதிய திருமணத் தயாரிப்புக் கையேடு ஆகும்.
திருமணம் மானிட சமூகத்தின் அமைப்பு மட்டுமன்று, இறைத் திட்டத்தை நிறைவாக்க இவ்வுலகில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும். திருமணம் என்பது பொறுப்புவாய்ந்த அழைப்பு ஆகும். இது பொறுப்புமிக்க அழைத்தலாக இருப்பதால் அதற்குப் போதிய முன்தயாரிப்பு அவசியம் தேவை.
நவீன தொழில்நுட்பங்கள் சமுதாயத்திற்கு எவ்வளவோ நன்மைகளைத் தந்து இருக்கின்றன என்றாலும், ஒரு வயலில் நெற்பயிர்களோடு களையும் வளர்வதுபோல் எண்ணற்ற நன்மைகளுக்கு இடையே தீமைகளும் வளர்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் புதிய அணுகுமுறை தேவை. இன்றைய சமூகத்தில் அநீதிகளும் தீயசக்திகளும் அதிகரித்து வருகின்றன. இது தனிமனித வாழ்வையும் குடும்ப வாழ்வையும் பாதிக்கின்றது. இதனால் குடும்பங்களில் சண்டைகளும் அமைதியின்மையும் பிளவுகளும் அதிகரித்துத் தம்பதியர்கள் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் விளைவு குடும்ப வாழ்வில் விவாகரத்து அதிகரித்துச் சமூகம் சீரழிகிறது. இதனை மனத்தில் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தந்தை மகன் தூய ஆவியின் நெருக்கமும், திருக்குடும்பத்தின் பண்புகளும் இன்றைய குடும்பங்களில் பிரதிபலிக்க வேண்டும் என வலியுறுத்த, திருச்சபையின் போதனைகளையும் அறிவுரைகளையும் வளர்க்க, இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
திருமணவாழ்வுக்கு நல்வழிகாட்டும் குடும்ப நலப் பணிக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இனிய இல்லறம் என்னும் தலைப்பில் உருவான இந்நூல் நல்லதொரு புதிய சமுதாயத்தைப் படைக்கும். இலட்சியக் குடும்பங்களை உருவாக்கி வாழ விரும்பும் ஒவ்வொருவரும் நிச்சயமாகக் கற்று அறிய வேண்டிய நூல் இது.
இந்தப் புத்தகமானது தேசிய அளவில் தேசியச் செயலர் (National Secretary of CCBI Family Commission அருட்பணி. ஜி. ஏ. அருள்ராஜ், CSC, அவரது பணிக்குழுவினருடன் இணைந்து ஆங்கிலத்தில் 'Walking Together in Love' என்னும் பெயரில் படைக்கப்பட்டது. அதைத் தமிழாக்கம் செய்த பெருமை அருட்பணி. ஜான் பீட்டர், இறையியல் பேராசிரியர் அருட்பணி. சிரில், சே.ச., முற்போக்குச் சிந்தனையாளர், அருட்சகோதரி ஸ்டெல்லா ரூபி, FBS, தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ. அந்தோனி குருசு, ஆங்கிலப் பேராசிரியர் எட்வர்ட் மாணிக்கம், முனைவர் பிலிப், அருட்பணி. ஸ்டீபன் கஸ்பார், அருட்பணி. ஞானஜோதி மற்றும் தமிழக ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழு இயக்குநர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
திருச்சபையின் திருமணச் சட்டங்கள் என்னும் உள்ளடக்கப் பிரிவின் கருத்துக்கள் இடம்பெற உதவிய 'அன்புடை நெஞ்சங்கள்' நூலாசிரியர் அருட்பணி. ஒய். இருதயராய் அடிகளுக்கு நன்றி. வளர வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற தலைமை உள்ளத்தோடு தட்டிக்கொடுத்து, இந்நூலுக்குச் சிறப்பான ஆசியுரை நல்கியுள்ள தமிழக ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழு தலைவர் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களுக்குப் பணிவு கலந்த நன்றிகள்.
இந்நூல் வளர்ச்சிக்கு உதவியும், நல்ல ஆலோசனைகளையும், அனுபவம் மிகுந்த அறிவுரைகளையும் நல்கிய இல்லறத்தை நல்லறமாக வ ழத் துடிக்கும் தம்பதிகள் அனைவருக்கும் இதனை எனது அன்பு பரிசாக அர்ப்பணிக்கின்றேன். வாழ்க குடும்பம்! வளர்க இறைச்சமூகம்!
சகோ. ஸ்டெல்லா ரூபி, FBS
செயலர்
=======================--------------------
திருமணத் தயாரிப்புப் பயிற்சியின் நோக்கம்
- திருமணம் செய்யத் தயார் நிலையில் உள்ளவர்களின் தேவையை முன்வைத்து இப்பயிற்சியின் இறுதியில் பங்கேற்பாளர்கள் பின்வரும் ஆற்றல்களை உணர்ந்து வளர்த்துக்கொள்வதே.
- தயாரிப்பின் இறுதிப் பயிற்சியில் தங்கள் திருமண வாழ்வுக்குப் பயனுள்ளவைகளைத் தெரிந்துகொள்ள ஓர் அருமையான வாய்ப்பு என்கிற அனுபவத்தைப் பெறுவது.
- வகுப்பு முடிந்தது, சான்றிதழைத் தாருங்கள் என்கிற மனநிலையிலிருந்து 'எதிர்பார்த்தோம் - கற்றுக்கொண்டோம் தயார்நிலையில் உள்ளோம்' என்கிற உணர்வைக் கொடுப்பது.
- திருமணவாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை இப்போதே அடையாளம் கண்டு, அவற்றைப் பகிர்ந்து, தெரிந்து, தெளிந்து உணர்வது.
- வாழ்வின் எதார்த்தச் சூழல்களில் சில காரியங்களைச் செய்யவும், விலக்கவும் வேண்டியிருக்கும். அவற்றை அன்பின் அடிப்படையில் தேர்வுசெய்ய வேண்டும் எனத் தெளிவுபடுத்துவது.
- தம்பதியரின் அன்றாட அனுபவங்களின் வழியாக அற்புதமான வாழ்க்கைக்கான பாடங்களைப் பெறலாம் என்றும், அன்றாடம் வரும் கடின சிக்கல்களும், பிரச்சினைகளும் தம்பதியரின் அன்புறவை ஆழப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்குமே எனத் தெளிவு படுத்துவது.
- ஒவ்வொரு நாளும் பல்வேறு சூழ்நிலைகளைத் திருமணத் தம்பதியினர் சந்திக்கின்றனர். அத்தகைய சூழலில் மூன்று வகையான தேவைகள் அவர்கள் வாழ்வோடு தொடர்புடையவையாக உள்ளன. தனிநபர் தேவை, தம்பதியினர் தேவை, பணி பற்றிய தேவை என்பனவற்றைத் தெளிவுபடுத்துவது.
- திருமணத் தம்பதியர் ஒரு செயலை, காரியத்தை இணைந்து செய்ய முற்படும்போது ஒருவர் மற்றவரோடு பகிர்கின்றனர், உறவு கொள்கின்றனர். அவர்கள் சேர்ந்து காரியங்களைச் செய்யும்போது ஒருவர் மற்றவருக்குச் சொந்தமானவர் என்கின்ற அருமையான உணர்வைப் பெறுகின்றனர் என்பதை உணரச் செய்வது.
- திருமணத் தம்பதியரின் ஈடுபாட்டில் 'கூர் உணர்வு' (அடுத்தவர்க்கு ஏற்படும் நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்து அடுத்தவர்கள் நிலையை உணர்ந்துகொள்ளும் திறன் - Sensitivity) மிக முக்கியமானது. அதுவே அவர்களிடையேயான அன்புப் பிணைப்பையும், ஒருவர் மற்றவருக்கான மதிப்பையும்
நம்பிக்கையையும் வளர்க்குமெனப் புரியச் செய்வது.
- திருமணத் தம்பதியர், சிறு குழுக்களாகப் பிரிந்து அந்த வார இறுதி
வகுப்பில் விவாதிக்கவேண்டிய அவர்களின் பொதுவான எதிர்பார்ப்புகளை அவர்களையே அடையாளம் காணச் செய்யும்போது வகுப்பில் அவர்கள் பங்கேற்கும் ஆர்வம் வளரச் செய்து பயனடையச் செய்யவைப்பது. தங்களது இயலாமைக்கு மத்தியிலும் கடவுளின் கொடையான சுதந்திரம், மற்றும் மனிதரில் உள்ள நான்கு சிறப்புப் பண்புகளான சுய அறிவு, கற்பனை, மனச்சான்று, தனித்தன்மை ஆகியவற்றின் துணைகொண்டு எந்தச் சூழலிலும் மதிப்பீடு சார்ந்த பதில்களைத் தம்பதியரே தேர்ந்தெடுக்கமுடியும் என்பதை உணரச் செய்வது.
|